— மாதவ. பூவராக மூர்த்தி.

bus

“அப்பா டிரெயின்ல தட்கால் கூட கிடைக்கல உனக்கு ஸ்லீப்பர் பஸ்ல டிக்கட் ஆன் லைன்ல புக் பண்ணிடறேன்” என்றான் என் மகன். வேறு வழியில்லை மறுநாள் சென்னையில் ஒரு படப்பிடிப்பிற்கு வந்தாக வேண்டிய கட்டாயம். அப்பர் பெர்த் ரெயிலைவிட ஏ/சி பஸ் மேல் என்று சரியென்றேன். எனக்கு பொதுவாக பயணம் என்றால் பயம் அதிலும் பஸ் என்றால் இன்னும் பயம். நல்ல சாலைகள், நல்ல பஸ் நல்ல இருக்கைகள் எல்லாம் சரி எங்கேயும் எப்போதும் படமெல்லாம் பார்த்து மனதில் இன்னும் நடுக்கம்.

பஸ்ஸூக்கும் டிரெயினுக்கும் இன்னொரு வித்யாசம் டிரெயினில் டிரைவர் நம் கண்ணுக்கு விழுவதில்லை. பஸ்ஸில் நாம் காணக் கிடைக்கிறார். டிரெயினில் எப்போதாவதுதான் நம் லைனிலே  டிரெயின் வரும அபாயம் உண்டு.  பஸ்ஸில் எந்த பக்கத்திலிருந்தும் பஸ், லாரி, கார் எதுவும் வரும். சில சமயங்களில் நம் டிரைவர் பயணிகள் தூங்கும்போது நாம் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று கண் அசரும் அபாயம் நான் சில முறை பார்த்திருக்கிறேன். இரவு பகல் மழை வெயில் பாராமல் எப்படி பட்ட வண்டியை கொடுத்தாலும் அந்த மனித தெய்வங்களை குறை கூற இந்த பதிவு இல்லை. கொஞ்சம் வார்ம் அப் பண்ண ஒரு இரண்டு பாரா எழுதினேன்.

ஆனால் இந்த சிட்டி பஸ் களிலும் வெளியூர்களிலும் சமீப காலங்களில் நான் காணும் மிகப் பெரிய வேற்றுமைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

பிராட்வே, மயிலாப்பூர் டேங், தி. நகர், வடபழனி ஐயப்பந்தாங்கல் இப்படி பஸ் புறப்படும் இடங்களில் நீங்கள் பயணத்தைத் துவக்கியிருந்து கவனித்திருந்தால் அந்த மாறுதல் தெரியும். ஒரு 5B 12B 17M 18K 12 13 45B 5E இப்படி எதாவது பஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரே நம்பரில் இரண்டு பஸ்கள் நிற்கும். நாம் பூவா தலையா போட்டு ஒன்று முதலில் புறப்படும் என்று நம்பி அதில் ஏறி அமர்வோம். நம்மைப் போல் பலர் அந்த வண்டியில் இருப்பார்கள். நம் கண் எதிரில் டிரைவர் கண்டக்டர்கள் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள்.

வரும்போது வரட்டும் என்று நாம் உட்கார்ந்திருக்கும் போது எங்கிருந்தோ ஒரு டிரைவர் வந்து நாம் உட்காராத பஸ்ஸில் ஏறி உடன் அதனை இயக்கி வேகமாக புறப்பட்டுவிடுவார். நாம் பிடித்த ஜன்னல் சீட்டை தியாகம் பண்ணிவிட்டு தலை தெறிக்க ஓடி கையிலிருந்த பொருட்களை ஞாபகமாக எடுத்தோமோ என்று பார்த்து ஏறி இடத்தில் உட்காருவோம். கண்டக்டர் வந்தாரா பஸ்ஸில் இருக்காரா ரைட் என்று விசில் கொடுக்கிறாரா என்பதெல்லாம் இப்போது டிரைவர் கவலைப்படுவதில்லை. ஒரு உலுக்கு உலுக்கி பஸ் எடுத்து விடுவார். ஏறினவரை லாபம்தான்.

கண்டக்டரும் நான் கவலைப்படுகிற அளவு கவலைப்படுவதாக தெரியவில்லை. கண்டக்டர் டிக்கட் , சில்லறை இருக்கா, பத்துரூபா, அம்பது ரூபா நூறு ரூபாயா எடுத்துகிட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்திடுங்க, போவாது, இறங்கு, இடம் இருக்குல்ல முன்ன போ. இதை தவிர யாரிடமும் எதுவும் பேசுவதுமில்லை பயணிகளும் அவரிடம் எதுவும் கேட்பதுவுமில்லை. அவரவர்களுக்கு காதில் சொருகியிருக்கும் ஹியர் போனில் பாட்டு கேட்பதற்கும், கடலைப் போடுவதற்கும், போனில் பொய் சொல்வதற்கும்தான்  நேரம் சரியாக இருக்கிறதே.

சென்னையில் அரசு பஸ்தான் ஒரே ஒரு தனியார் பஸ் 54 பூந்தமல்லி –பிராட்வே. நான் தனியார் பஸ் கோலோச்சிய காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். என்னோடு வாருங்கள். இடம் மாயவரம். அந்த காலத்தில்  ஶ்ரீராமவிலாஸ் (S.R.V.S) கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட்டது. அடுத்தது சத்தி விலாஸ் பொரையார், ராமன் & ராமன் (கும்பகோணம்) . இந்த ராமன் ராமன் கம்பெனி பஸ்களில் 54 இருந்தது. ஒவ்வொரு பஸ்ஸூக்கும் ஒரு ராமன் பெயர் கல்யாண ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன். கடைசி பஸ் மட்டும். ராமனில்லை தாசரதி.

அது ஒரு கட்டுக்கோப்பான காலம். மாயவரத்திலிருந்து கும்பகோணம், சிதம்பரம் புதுப்பட்டினம் இப்படி நிறைய ஊர்களுக்கு அந்த பஸ் செல்லும். என்னால் மறக்க முடியாதவர் டிரைவர் சம்பந்தம் பிள்ளை. நான் சிறுவனாக அவரை சந்தித்த போது அவர் நாற்பதுகளில் இருப்பார். அப்போது காக்கி அரை டிராயர் தான் காக்கி சட்டைதான் டிரைவர் யூனிபார்ம். கம்பீரமாக இருப்பார். திறமையாக ஓட்டுவார்.

கண்டக்டரும் ரொம்ப திறமையாக இருப்பார். டிக்கட் போடுவதே ஒரு அழகு. அடியில் அலுமினியப் பலகையில் சீட்டு புக் இருக்கும். கார்பன் பேப்பரை இரண்டு பக்கமும் வைத்து பென்சிலால் அல்லது பால் பென்னால் எழுதி டிக்கட் போட்டு கிழித்துக் கொடுப்பார். பஸ் புறப்படுவத்ற்கு முன் டிக்கட் போடுவார். சின்னப் பையன் என்றால் அரைடிக்கட் தீர்மானம் பண்ண படியில் ஒரு உயரம் இருக்கும் அதன் அருகில் நிற்க வைப்பார். அப்போதெல்லாம் ½ டிக்கட் பத்து வயது வரைக்கும். உயரம் முதலில் தீர்மானிக்கும். நான் என் உயரத்தினால் 14 வயது வரை ½ டிக்கட் வாங்கி பயணித்திருக்கிறேன். பல சமயம் தம்பி அந்த அம்மா பக்கத்தில உட்காருங்க என்பார். நான் வெட்கத்தோடு போய் உட்காருவேன்.

புறப்படும் நேரம் வரும்போது சம்பந்தம் வருவார். வண்டியில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு  டவலால் முகத்தைத் துடைத்துக் கொள்வார். பொறுமையாக உட்காருவார். போலாமா தம்பி என்று கண்டக்டரைக் கேட்பார். போலாண்ணே என்பார். பிறகு தான் வண்டி எடுப்பார். விசிலுக்கு கட்டுப்பட்டு பஸ் ஓட்டுவார்.

கண்டக்டர் பயணிகளோடு உரையாடி வருவார். நிறைய வேடிக்கைகள் நடக்கும். யாராவது டிக்கட் இன்னும் வாங்கணுமா என்பார். எல்லாரும் பேசாமல் இருப்பார்கள். தலையை எண்ணுவார். இன்வாய்ஸ் சரி பார்ப்பார். வண்டியை ஓரங்கட்டுங்கண்ணே என்பார். வண்டி ஓரமாக நிறுத்தப் படும். கண்டக்டர் எல்லாரிடமும் சீட்டைக் குடுங்க என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டுவருவார். இருபது பேருக்கு மேல் செக் பண்ணினபிறகு ஜன்னல் ஓரம் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஐயா டிக்கட் என்றவுடன் அவர் தூங்கி எழுந்து வைத்தீஸ்வரன் கோயில் ஒண்ணு குடுங்க என்று இப்போதுதான் கண்டக்டர் கேட்பது போல் டிக்கட்டுக்குப் பணம் கொடுப்பார்.

கண்டக்டர் கோபம் வந்தாலும் ஏன்யா டிக்கட் வாங்கிட்டு  தூங்க கூடாதா என்பார். போலாண்ணே என்று விசில் கொடுத்துவிட்டு டிக்கட் கொடுப்பார். பஸ் மறுபடியும் பயணம் தொடரும். மாயவரம் சீர்காழி பஸ் சாலை வேடிக்கையாக இருக்கும். அந்த காலத்தில் சோழ நாட்டில் எதிரிகள் படை எடுக்க வந்தால் நேர் பாதையாக இருந்தால் வேகமாக முன்னேறுவார்கள் என்பதால் வளைந்து வளைந்து சாலைகள் இருக்கும். இன்னும் இன்றும் அப்படியே இருக்கிறது. அதனால் வண்டி ஓட்டுவது கஷ்டம். பஸ் ஸ்டாப் ஊர் பெயரும் இருக்கும். சில இடங்களில் ஒத்தகடை, பஞ்சாயத்து போர்டு, மதகடி, புளியந்தோப்பு, அய்யனார் கோவில், சாவடி, ஆத்துப் பாலம் இப்படி.

அதுவுமில்லாமல் புதுசாக வந்தவர்கள் ஊரில் பெரிய புள்ளிகளைச் சொன்னால் தலைவர் ஐயா வீட்டிற்கு போகணும் என்றால் ஓத்த கடையில இறங்கி வடக்கே போங்க தோப்புக்கு அடுத்த தெரு என்பார். சில சமயம் பயணிகளை பாத்து நாளாயிட்டு ஊர்ல இல்லையா என்பார்.

அவர்களும் அவர்கள் வீட்டு வைபவங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பார்கள். சில பேர் தீபாவளிக்கு பொங்கலுக்கும் வேஷ்டி சட்டை வாங்கி கொடுப்பார்கள். கண்டக்டர் வெற்றிலைப் பாக்கு புகையிலை போடுவார்.

இன்னொரு காட்சி டிரைவர் கண்டக்டர் வீடுகள் அவர்கள் பாதையில் இருக்கும். மதிய சாப்பாடு அவர்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வீட்டிலிருந்து மனைவியோ மகனோ மகளோ கொண்டுவந்து கொடுப்பார்கள்.

திருமண வீடுகளுக்கு வரும்போது வேஷ்டி சட்டையில் வருவார்கள். இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். பிறகுதான் அவருக்கு காக்கி டிராயர் சட்டைப் போட்ட பிறகுதான் டிரைவர் கண்டக்டர் என்று மனதிற்குள் பளிச்சிடும்.

பஸ்களும் முடிந்த வரை சரியான அளவுதான் டிக்கட் கொடுப்பார். ½ டிக்கட் கூட அதிகம் கொடுக்க மாட்டார்கள். அடுத்த வண்டியில வாங்க போலாம் ரைட்டு என்று விசில் அடிப்பார். பஸ்கள் பொதுவாக அசோக் லைலெண்ட், ஃபார்கோ, டாஜ் இருக்கும் டாடா பின்னாளில் வந்த்து. மாயவரத்தில் 1 நம்பர் டாட  பஸ் முன் பக்கம் கொஞ்சம் புடைத்துக் கொண்டிருக்க்கும். நாங்கள் அதை தொப்பை பஸ் என்போம். டிரைவர் நாகராஜன் ரொம்ப நாள் அந்த வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

கண்டக்டர்கள் ஓயாமல் பேசிக்கொண்டு வருவார்கள். ஒரு சிலர் வேடிக்கையாக பேசி பயணக் களைப்பில்லாமல் செய்வார்கள். ஒரு கண்டக்டர் எவ்வளவு கூட்டமிருந்தாலும் டிக்கட் கொடுப்பார். டிக்கட் வாங்கிக்கிங்க. அம்மா வாங்கராங்கனு ஐயா சும்மா இருந்துடுவார், ஐயா வாங்கிடுவாருன்னு அம்மா சும்மா இருந்துடுவாங்க. கேளுங்க கேட்டு வாங்கிடுங்க. செக்கர் வந்தா மாட்டிகிடுவீங்க என்பார். அம்மா ஏற பக்கம் ஐயா ஏறாதீங்க ஐயா ஏற பக்கம் அம்மா ஏறாதீங்க என்பார். கடலங்குடி வரை செல்லும் 1 நெம்பர் பஸ்ஸில் ஒரு இளைஞர் கண்டக்டர். அவர் மிக வேடிக்கையாக பேசுவார். நல்ல தமிழ் தெரிந்தாலும் கிராமத்து மக்கள் பயணம் செய்யும் வழித்தடம் என்பதால் அவர்கள் பாஷையில் பேசுவார். நிறுத்தங்கள் பெயரை சொல்வதில் வேடிக்கையாக இருக்கும். ஆ தேரடி இருக்கா இறங்கு கைவிடு முன்பக்கம் பாத்து குதி, மதுவு கொண்டல் மதுவு, இந்தா ஏறு என்னா வேடிக்கை. போவாது கையை விடு. யாருய்யா புகையிலை துப்பறது வண்டி நிப்பாட்டினப் பிறகு துப்பு. இப்படி வழி முழுக்க கமெண்ட் அறிவுப்பும், அன்பும் கிண்டலும் கேலியும் கலந்து தருவார். திடீரென்று விசில் இல்லாமல் வாயாலே குருவி மாதிரி விசில் அடிப்பார். பணியில் இல்லாத நேரம் அவர் சாதாரணமாக பேசுவார். விநோதமான மனிதர். இன்னும் என் நினைவில் இருப்பவர். இப்போது அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்.

கல்லூரி பகுதிக்கு செல்லும் டவுன் பஸ் பயணிகளும் டிரைவர் கண்டக்டர்களுக்கும் தினம் சண்டைதான். இருந்தாலும் மாணவர்கள் அவர்களுக்கு கட்டுப் பட்டு நடப்பார்கள். டிரைவர்கள் முடிந்த வரை இடமிருந்தால் ஸ்டாபிங்க் இல்லாத இடத்தில் கூட நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள். வழக்கமாக வருபவர்களிடம் ஒரு நட்பும் நெருக்கமும் இருக்கும்.

இப்போது அதையெல்லாம் நாம் இழந்து விட்டோம். இருந்தாலும் இன்னும் ஒரு சிலர் அதையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கள் வீட்டில் ஏறும் 5E வரும். பல வருடங்களாக அந்த பகுதியில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்வதால் ஒரு நல்ல டிரைவர் நண்பரை கொடுத்திருக்கிறது. அவர் திரு ஆறுமுகம். அவர் மத்யான நேரத்தில் வீட்டில் இருக்கும்போது என் தொலைக்காட்சி சீரியல்கள் பார்த்திருப்பார் போல நான் பஸ் ஏறிய உடன் வாங்க ஸார் எங்க இந்த நேரத்துல? என்பார். நல்லா நடிக்கிறீங்க. உட்காருங்க என்று இடம் கொடுத்து பேசிக்கொண்டிருப்பார். நான் வேறு பஸ்ஸூக்கு நின்றால் அவர் டூட்டியில் வந்தால் வணக்கம் சொல்வார்.

இப்போது ஆயிரம் ரூபாய் டிக்கட் மாதாந்திர சலுகை கட்டணம் வாங்கியிருக்கிறேன். அதனால் கண்டக்டரிடம் பேசும் அவசியம் இல்லை. சில்லறை பிரச்னைகள் இல்லை. சில சமயம் பாஸ் என்று கை காட்டினால் என்ன பாஸ் காட்டுங்க என்பார்கள். காட்டிவிட்டு பயணம் தொடரலாம். நிறைய பஸ்கள், நிறைய வசதி. ஆனால் நெருக்கம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது. இது மட்டும் மாறாமல் இருக்குமா?

அடுத்த முறை பஸ் பயணத்தில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நினைவும் நேரமும் இருந்தால்.

படம் உதவிக்கு நன்றி: http://www.skyscrapercity.com/showthread.php?t=907864&page=1668

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஒரு பஸ் பயணம்

Leave a Reply to Boopathy

Your email address will not be published. Required fields are marked *