நான் அறிந்த சிலம்பு – 130
-மலர் சபா
மதுரைக்காண்டம் – 02: வேட்டுவவரி
உரைப்பாட்டு மடை
முன்றிலின் சிறப்பு
நெற்றியில் கண்ணுடைய சிவபெருமான்
தம் இடப்பாகத்தில் கொண்ட
கொற்றவையின் முன்றிலின் இடத்து…
மணம் வீசும் சுரபுன்னை மரமும்,
நாரத்தையும் வரிசையாக ஒழுங்குபட நின்றன.
ஆச்சா மரமும் சந்தன மரமும்
உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தன.
எவ்விடத்தும் சேவும் மாவும்
நெருங்கி வளர்ந்து நின்றன.
பிறையை உடைய சடை கொண்ட
கொற்றவையின் முன்றிலின் இடத்து
வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற
பூக்களைச் சிந்தி நின்றன.
நல்ல இலவமரங்கள் தம் கிளைகளில் பூத்த
செம்மலர்களை உதிர்த்துக் குவித்தன.
புன்க மரங்கள் வெள்ளைப் பொரி போன்ற
பழம்பூக்களை உதிர்த்து நின்றன.
திருமாலுக்கு இளைவளாகிய
கொற்றவையின் முன்றிலின் இடத்து…
வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும்
மணம் வீசும் குராவும் கோங்கமும்
பூத்துக் குலுங்கின.
அவற்றின் கிளைகளில் வண்டுக்கூட்டம் முழங்கி
யாழ் போல் இசைக்கும்.
வள்ளிக்கூத்து
துர்க்கை அணியும் அணியை எல்லாம்
தாமும் அணிந்துகொண்டு நிற்கும்
இப்பொன் வளையணிந்த குமரி
முன்னர் செய்த தவம்தான் எதுவோ?
பொன்வளையணிந்த இம்மாது பிறந்த குடிப்பிறந்த
வில்லேந்தும் மறவர் குலமே சிறந்த குலம்.
கொற்றவையின் அழகினை ஒத்ததாக
அழகு கொண்ட, பாம்பினைப் போன்ற அல்குலை உடைய
இக்குமரி செய்த தவம்தான் எதுவோ?
இவள் பிறந்த குடிக்கண் தோன்றிய
அம்பெய்தும் வில்லினையுடைய
எம் வேட்டுவக் குலமே சிறந்த குலமாகும்.
தாவும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட
கொற்றவையின் கோலம் கொண்டு நிற்கும்
அழகிய வளையணிந்த இவள் செய்த தவம்தான் எதுவோ?
இவள் பிறந்த குடியில் தோன்றிய
மூங்கில் வில்லினையுடைய
மறவர் குலமே சிறந்த குலமாகும்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 06
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://allgodstuff.blogspot.in/2014/02/durga-maagif_8787.html