-முனைவர் இராம. இராமமூர்த்தி

சங்க இலக்கியங்கள் தொடு மணற்கேணியாய்ப் பயிலுந்தொறும் நுண்பொருள் காட்டும் காலக் கண்ணாடிகளாகும். இத்தகைய நுண்பொருள் காண, ஆசிரியர் தொல்காப்பியர் சில நெறிகளைச் சுட்டியுள்ளார். அவை உள்ளுறை, இறைச்சி என்பனவாம். நன்கு இலக்கியப் பயிற்சியுடையோரே இந்நெறிக்கண் சென்று நுண்பொருள் காண இயலும். இத்தகைய கூர்த்த மதியினையே, வள்ளுவப் பெருந்தகை, “நுண்மாண் நுழைபுலம்” எனக் குறித்துள்ளார். நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர். அவருள் ஒருவரே கணிபுன்குன்றனார் ஆவார்.

இவரைச் சிலர் ‘கணியன் பூங்குன்றனார்’ எனவும் மொழிவர். ஆயினும், கணிபுன்குன்றனார் என்னும் பெயரால் இவர் பாடிய அகப்பாடல் ஒன்றே நமக்குக் கிட்டியுள்ளது. இப்புலவர்பெருமான் நற்றிணையில் பாலைத் திணையில் ஒரு செய்யுளைச் செய்துள்ளார். பாலைப் பாடல்கள் பெரிதும் பிரிவுத் துயரினையே சுட்டிவருவன. ‘போக்கெல்லாம் பாலை’ என்பர் சங்கச் சான்றோர். ’பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ இத்திணைக்குரிய உரிப் பொருளாம். இனி, நாம் காண இருக்கின்ற செய்தியினைப் பார்ப்போம்.

பொருள்தேடச் சென்றான் தலைவன் ஒருவன். இன்பமாக வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாததல்லவா? அறம் செய்வதற்கும் பொருள் மிகுதியும் தேவை. அதனாலன்றோ சான்றோர் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனக் கூறுவாராயினர். இவையெல்லாம் நம் தலைவி அறியாதவளா? இல்லை இல்லை…அவள் இளையோள்; அண்மையில் மணவாழ்வு மேற்கொண்டவள். ஆதலால் பிரிவுத் துயரைப் பொறுக்கலாற்றாது பெரிதும் வருந்துகின்றாள். மாலைக் காலமும் வெண்மதியும் அவளது துயரை மிகுவிக்கின்றன.

sankailakkiyamதலைவியின் துயரை அறிந்த அவள் இன்னுயிர்த் தோழி அவளுக்கு ஆறுதல் மொழிகள் பலவற்றைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயல்கின்றாள்.”நம் தலைவர் நின்மாட்டு அன்பு மிக்குடையவர்; உன்னை நீண்ட காலம் பிரிந்துறையார்; பொருள் தேடியதும் விரைந்து வந்துவிடுவார் தலைவர்” என்றாள் தோழி.     

இதற்கு மறுமொழியாகத் தலைவி கூறுகின்றாள், “தோழி! நல்ல மருந்து மரமொன்றுள்ளது; அம்மரம் வேர் முதல் கனி வரையில் மருந்தாகப் பயன் தந்து நோய் நீக்கும் தன்மையுடையது. அதற்காக நோயைப் போக்க மருந்து வேண்டுபவர், அம்மரத்தையே வேரோடு வெட்டிச் சாய்ப்பரோ? மாட்டார்! மருந்திற்குப் பயன்படுமாறு சிறிதளவே பயன்படுத்திக் கொள்ளுவர். மேலும், நாடு காக்கும் வேந்தனும் மக்களைக் காக்க வரிவாங்குவது உலக இயல்பே. ஆனால் பொருள்சேர்ப்பதற்காக – வரி வாங்குவதற்காக – மக்களையே கொன்று அவர்தம் பொருளைப் பெற முயல்வரோ? அவ்வாறு பொருள்பெற முயன்றால் அம்மன்னனது ஆட்சி நிலைபெறுமா? அழிந்தல்லவா போகும்! இதனையறியாயோ தோழி நீ?” என்கிறாள் தலைமகள். மேலும் தவம் செய்வோர் உயர்நிலை அடையவே தவம் செய்வர். தம் இன்னுயிர் நீக்கவா தவம் செய்வர்? என்ற வினாவையும் எழுப்புகின்றாள்.

இதுபோன்றே, இல்வாழ்க்கை நன்கு சிறப்புறப் பொருள் மிகுதியும் தேவையே. பொருள் பெற்றால்தான் இன்பமும் நிலைபெறும்; அறமும் செழிக்கும். “நடுவணது எய்த இருதலையும் எய்தும்” என்ற மூத்தோர் மொழி முற்றிலும் உண்மையே. ஆனால், தலைவர் பிரியாத வரையில் எனதுயிர் என்னுடலில் நின்றது உண்மையே. அவர் அன்பை நம்பியே வாழ்ந்தவள் நான். என் காதல் தலைவரோ என்னைப் பிரிந்து அரிய கானகங் கடந்து பொருள்தேடச் செல்வாராயின், என்னுயிரும் உடலில் தங்காது அவரோடு சென்றுவிடுமன்றோ? உயிரைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ முடியும்? கூறாய் தோழி!” என்றாள் தலைவி. மேலும், ”அவர் தேடிக் கொண்டுவரும் பொருள், பிரிந்த நம் இன்னுயிரை மீட்டுத் தருமா?” எனவும் மற்றுமோர் வினாவை எழுப்புகின்றாள்.

”இவற்றையெல்லாம் நம் தலைவர் அறியாதவர் அல்லரே. அறிந்தும் என்னைப் பிரிந்து சென்றுள்ளாரே! இவள் இறக்கமாட்டாள் என்ற எண்ணந்தானே? இவ்வாறு பிரிந்து பொருள்தேடச் செல்வது தலைவனின் இயல்பேயென்பர் சான்றோர். இதுவே உலக இயற்கை போலும்” எனக் கூறித் துன்பத்திற் புலம்புகிறாள் தலைவி. எனினும், பொருள் தேடச் சென்ற தலைவன் பொருளொடு விரைந்து வருவான்; அவர்கள் வாழ்க்கையில் இன்பம் நிலைபெறும் என்பதே உலக வழக்கு.

இப்பாடல் அகத்திணைப் பாடலாயினும், இவற்றில் இடம்பெற்றுள்ள மூன்று உவமைகளால் உலக மக்களுக்கு நல்லறிவு கொளுத்துகின்றது.

1. மருந்திற்காக மரத்தையே கொல்லலாமா? என்ற வினாவின் வாயிலாக   மருந்துக்குத் தேவை வேராயினும், பட்டையாயினும் தமக்குத் தேவையான சிறிதளவே கொள்ளல் வேண்டும்; ஏனெனில் மருந்து சிறிதளவே உண்ணுதற்குரியது. அஃது உணவன்று; அதனாலேயே “மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர்”, என்றார் இப்புலவர். ஆனால், சில இடங்களில் மருந்துப்பயன் வேண்டி மரத்தையேயழிப்பதைக் காண்கிறோமே நாம்! இந்நிலை இனியேனும் மாறவேண்டும்.

2. தவம் செய்வது நற்பயன் பெறவே; தம் உயிரைப் போக்குவதற்கன்று! எனவே, நற்பயன் நோக்கியே நாம் எச்செயலையும் மேற்கொள்ளவேண்டுமென்பதே இதன் கருத்தாம் என்க.

3. நாடு வளம்கெடுமாறு மன்னர் வரிவாங்க மாட்டார். இஃது ஆட்சியாளர்க்கு என்றும் வழிகாட்டும் அறிவுரையாகும். இதே கருத்தைப் புறப்பாடல் 184-இல் புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறுமுறையில் விரிவாகக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் ஆட்சியாளர்களுக்கு என்றும் பொருந்துவன.

இனி, பொருள்செறிந்த அந்நற்றிணைப் பாடலைக் காண்போம்!

மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச்
செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங்
கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம்
உண்மையின் உளமே அதனால்
தாஞ்செய்
பொருளளவு அறியார் தாங்கசிந்து
என்றூழ்
நிறுப்ப நீளிடை ஒழியச்
சென்றோர்
மன்றநங் காதலர் என்னும்
இன்ன
நிலைமைத் தென்ப
என்னோரும்
அறிபஇவ் வுலகத் தானே. (நற்: 226 – கணிபுன்குன்றனார்)

(நன்றி: தினமணி – தமிழ்மணி)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *