வருவாயா?
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (19)
வருவாயா?
{கேட்டு மகிழ}
என்றோ பெய்யும் மழையின்
ஏதோ ஒரு சிறு துளி
எப்படியோ மண்ணில் நுழைந்து
விதையின் கதவைத் தட்டி
விழியோடு விழி பேசலாம்
பரந்து விரியும் சோலைக்குப்
பரிசம் போடலாம்
விலக்க முடியாத இருளில்
விழிக்க முடியாத விழிகள்
வெறித்துக் கிடக்கும்போது
ஏதோ ஒரு கரம் கூந்தலை விலக்க
நெற்றி தெரிவதுபோல்
நேருக்கு நேரே நேர்ந்து விடலாம் விடியல்
ஊமையின் நெஞ்சுக்குள்
ஊசியாய் மின்னலொன்று
உயிர்சிலிர்க்க நுழைந்தபின்னும்
உதடு பிரிக்க முடியாமல் துயருறும் போது
வானம், என்றோ கேட்ட
கானத்தை நினைத்துக்கொண்டு
சற்றே சிலிர்க்க
வயிரங்களெல்லாம் வார்த்தைகளாகலாம்
இப்படித்தான்
இப்படியேதான் நானும்……..
வந்துவிடுவாய்தானே?