— மாதவ. பூவராக மூர்த்தி.

மனிதர்களைப் பற்றியும் மனங்களைப் பற்றியும் நிறைய எழுதியாயிற்று. இன்று நம்முடன் இருந்து நமக்கு மிகவும் உதவி செய்து இன்று நம்மால் புறக்கணிக்கப்பட்ட இரண்டு வஸ்துக்களை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த ஆசை. இளையதலைமுறைக்கு இதெல்லாம் படிக்க நேரம் இருக்குமா என்று தெரியாது. இன்றில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் அவர்கள் இந்தப் பக்கங்களைப் புரட்டக் கூடும். அந்த நாளுக்குகாக இப்போது எழுதி வைக்கிறேன். முதலில்  ‘வஸ்து’ என்றால் பொருள், சாமன், object என்ற பதவுரையையும் கொடுத்து விடுகிறேன்.

‘பதவுரை’ என்றால் சொல்லின் பொருள் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. வழக்கொழிந்த சொற்கள்  போலவே நம்மோடிருந்த பொருட்களும் மறைந்து போயின. அதில் என் மனதில் முதலாவதாக வந்தது இந்த பாக்கு வெட்டி.

நவீன உலகம் நமக்கு பல வசதிகளைச் செய்து தந்திருக்கிறது. மனிதனின் கண்டுபிடிப்புக்கள் நம் உடல் உழைப்பை நேரத்தை மிச்சப்படுத்தும் கருவிகளை நமக்குத் தந்திருக்கிறது. இதனால் நம் முன்னோர்கள் வீட்டில் ஆண்டு முழுவதும் பட்டியலிட்டு செய்து கொண்டிருந்த பல வேலைகள் இன்று இல்லை. இருந்தாலும் செய்ய நம்மிடையே மனிதர்கள் இல்லை.

எல்லாம் ஆயத்தமாக கடைகளில் கிடைக்கிறது. காசு விட்டெறிந்தால் நாம் கடைக்குக்குக் கூடப் போகத் தேவையில்லை. அவர்களே ‘டோர் டெலிவரி’ செய்து விடுவார்கள்.

வெற்றிலைப் பாக்குஇரண்டாவது நம் வழக்கங்களும் பழக்கங்களும் மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘தாம்பூலம் தரிப்பது’ என்ற ஒரு வழக்கம் உண்டு. உண்ட பின் ஒவ்வொரு வீட்டிலும் தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கொண்டு வந்து கொடுப்பார்கள். கும்பகோணம் கொழுந்து வெற்றிலையை தளிராக எடுத்து, அதைத் தடவிக்கொடுத்து, காம்பு கிள்ளி, பின் பக்கம் சுண்ணாம்பு… அதை சுண்ணாம்பு என்று பெயர் சொல்லும் வழக்கம் இல்லை. ‘மூன்றாவது’ என்றுதான் கேட்பார்கள். அதன் பின் முனையும், முதுகு நரம்பும் கிள்ளி, களிப்பாக்காக இருந்தால் அப்படியே போட்டுக் கடித்து, கொட்டைப் பாக்காக இருந்தால் இந்த பாக்கு வெட்டியால் நறுக்கி அந்த சீவலை வாயில் அடக்கி, வெற்றிலையும் சேர்த்துக் குழப்ப வாய் சிவக்கும். அந்த காரம் உள்ளே போனவுடன் புத்துணர்ச்சி பெருகும். உண்ட உணவு செரிக்கும். பொதுவாக அந்தக் காலத்தில் ஆண் பெண் இருவரும் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

எல்லா நல்ல பழக்கங்களோடு ஒரு சில தீய பழக்கங்களும் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்படி வந்ததுதான் இந்தப் புகையிலைப் பழக்கம். புகையிலைக் கட்டையை கொஞ்சமாக நறுக்கி அதனுடன் கொஞ்சம் மூன்றாவதையும்  சேர்த்து, வெற்றிலைப் பாக்கோடு வாயில் அடக்கி அந்த சாறு தரும் லாகிரியை அனுபவித்து அந்த சாற்றைத் துப்புவார்கள். அப்போதும் பாக்குவெட்டிக்கு இந்த புகையிலைக் கட்டையை வெட்டும் வேலை இருந்தது. அதன் பிறகு சீவலும், தூள் பாக்கும் கிடைக்க ஆரம்பித்தது. கடைகளில் பீடா வர ஆரம்பித்தது.

என் சின்ன வயதில் இந்த வெற்றிலை போடும் மனிதர்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்று கணக்கெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. சாப்பிட்ட பின், சாப்பிடுவதற்கு முன், சாப்பாடு இல்லாத போதும், இரவு படுப்பதற்கு முன், வேலைக்கு நடுவில், சீட்டாட்டத்தின் இடையில் என்று. அவர்கள் இருப்பிடமே திண்ணை அல்லது முற்றத்திற்குப் பக்கத்தில் என்று ஆகிவிடும்.

என் மாமா ஒருவர் அந்த வெற்றிலைச் செல்லத்தை தன் தலை மாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பார். காலை கண்விழித்தவுடன் அதன் முகத்தில்தான் விழிப்பார். ஓர் அரை வெற்றிலை போட்டு குதப்பி பின் வாய் கொப்பளித்தவுடன் தான் அவருக்கு பொழுது விடியும்.

வெற்றிலைச் செல்லம்2வெற்றிலைச் செல்லம்“வெற்றிலைச் செல்லம்” என்பது வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு இவை எல்லாம் இருக்கும் பெட்டி. இதில் செவ்வகமாக இருக்கும் பெட்டிகள் சகஜமாக இருக்கும். அவை பித்தளை, அலுமினியம், எவர்சிலவர் … பின்னாளில் பிளாஸ்டிக்கிலும் இருந்த்து.

பாக்குவெட்டிஆலவேலி சேமங்கலம் ரமணி அய்யர் மாயவரம் துபாஷ் அக்ரஹாரத்தில் இருந்த போது, அவரிடம் இருந்த ஒரு எவர் சில்வர் வெற்றிலைச் செல்வம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அது ஒரு வாத்து வடிவத்தில் இருக்கும். அதன் வயிற்றுப்பகுதியில் ஒரு பக்க அறையைத் திருப்பினால் அதில் வெற்றிலை…. இன்னுமொரு சிறகைத் திருப்பினால் பாக்கு, பாக்குவெட்டி… கழுத்துப்பகுதியைத் திருப்பினால் சுண்ணாம்பு …அதற்கும் கீழ் புகையிலை. ஊஞ்சலில் உட்கார்ந்தோ, வாசலில் மர சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தோ வாயில் வெற்றிலை போடும் ரமணி அய்யரின் கழுத்தில் தொங்கும் தங்க காப்பு போட்ட ருத்ராட்ஷத்தையும், தோளில் இருந்த சிவப்புக் காசித்துண்டையும் என்னால் மறக்க முடியாது.

வெற்றிலை போட்டு அவர்கள் பேசும் பேச்சு ஒரு தனி ஸ்டைல்.  அடிக்கடி தொண்டையைக் கனைத்துக் கொண்டு முகத்தை எப்போதும் மேலே தூக்கியபடியே (வாயின் வெற்றிலைச்சாறு சிந்தாமல் இருக்க) பேசும் அழகே அழகு.

பாக்குவெட்டி2பாக்கு வெட்டி தன் வேலையை இழந்தது. சில ஆபீஸ்களில் பழைய மிஷின்களின் உபயோகம் தீர்ந்த பிறகு புது மாதிரி மிஷின் கொண்டு புதிய பொறியாளர்களை உபயோகப்படுத்துவார்கள். அந்தப் பழையத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் வேறு டிபார்ட்மெண்டில் போட்டு சம்பளம் கொடுப்பார்கள். அது போல, பாவம் போனால் போகிறதென்று பாக்கு வெட்டிக்கு வெற்றிலைப் பெட்டியிலிருந்து மாற்றல் ஆகி, அம்மாவின் அடுக்களையில் அவள் அன்றாடம் பயன்படுத்தும் அஞ்சறைப் பெட்டியில் ஒரு இடம் கொடுக்கப் பட்டது.

பாக்கு வெட்டிக்குச் சந்தோஷம். முன்னளவுக்கு வேலை இல்லை. எப்போதாவது அம்மா கெட்டிப் பெருங்காயம் நறுக்க பாக்கு வெட்டியின் உதவியை நாடுவாள். மற்றபடி அஞ்சறைப் பெட்டியின் மேல் தளத்தில் மிளகாயோடு கெட்டிப் பெருங்காய வாசனையோடு வாசம்.

அதுவும் சில வருடம்தான் அதன் பிறகு வந்தது தூள் பெருங்காயம். டப்பாக்களில் தனி இடம். பாக்கு வெட்டியால்  இனி பயனில்லை என்று ஆகிவிட்டது. அதன் உற்பத்தி நிறுத்தப் பட்டது. அது வரை இருந்தவை உபயோகமில்லாமல் துருப்பிடித்து குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகி நம் அன்றாட வாழ்விலும், நினைவிலும் இருந்தே அகன்று போனது.

பாக்கு வெட்டியின் கால் கெட்டிச்சுண்ணாம்பைப் பெயர்க்க உதவி செய்யும்.  அந்த நாள் பௌதீகப் பாடத்தில் சிம்பிள் மெஷின் என்பதில் நெம்பு கோல், இடுக்கி, கத்திரி மற்றும் பாக்குவெட்டி இருக்கும். தமிழில் பளு திறன் என்று படம் போட்டு விளக்குவோம். இப்போது அதற்கு அஞ்சலி செலுத்துவோம்.

***

பாதாளக்கரண்டி2அடுத்தது பாதாளக்கரண்டி. கிராமத்தில் டவுனில் எல்லார் வீட்டிலும் பாதாளக்கரண்டி ஆபத்துக்குதவும். இது ஒரு சிலர் வீட்டில் மட்டுமே இருக்கும். கம்பி வளைவுகளால் ஆன இது தன்னகத்தே பல விதங்களில் கொக்கிகளைக் கொண்டு ஒரு கொத்துக் கிண்ணம் போல் இருந்து அதன் மேல் எல்லா வளைவுகளும் ஒன்று சேர்ந்து ஒரு ஓட்டை இருக்கும். அதில் ஒரு இரும்பு வளையம் இருக்கும்.

இதன் உபயோகம் தினம் நமக்கு இருக்காது. அதனால் இதை எல்லாரும் வாங்கி வைக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் எல்லார் வீட்டிலும் கிணறு இருக்கும். அதில் ஜகடை போட்டு, அதில் தாம்புக்கயிறு கட்டி அதன் ஒரு முனையில் ஒரு பக்கெட் கட்டப்பட்டிருக்கும். இன்னொரு முனையில் ஒரு சுருக்கு போடப்பட்டிருக்கும்.

imagesதாம்புக்கயிறு என்பது தேங்காய் நாரை ஊறவைத்து கயிறு திரித்து அதை பல கயிறுகளுடன் ஒன்று சேர்த்து முறுக்கிய கயிறு. அந்த காலத்தில் கழுத்தில் போடும் தங்க சங்கிலியில் கூட தாம்புக்கயிறு டிசைன் என்று ஒன்று உண்டு என்பது  என்னைப் போன்ற தாத்தா பாட்டிகள் நினைவில் இருக்கும். கோபால்தாஸ், ஏ.ஆர்.சி, ரேவதி ஜுவல்லரியில் கண்ணாடி பீரோவிலும், மேளக்காரர்கள், நாதஸ்வர வித்வான்கள், பெரிய பணக்காரர்கள் கழுத்திலும் அலங்கரிக்கும்.

கிணற்றடிக்கு வருவோம். அந்த தாம்புக்கயிற்றின் முனையில் கட்டிய பக்கெட் சில சமயம் கயிற்றிற்கும் தனக்கும் உறவு வேண்டாம் என்று தண்ணீரில்  இருந்து விடும். இழுக்கும் போது வெறும் கயிறு மட்டும் வந்து சேரும். வீட்டில் பரபரப்பு ஏற்படும்.

கிணறுஅதேபோல் இன்னொரு பக்கம் உள்ள முடிச்சை குடத்தின் கழுத்தில் இறுக்கி சமையலுக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் எடுத்து சமையலறைக்கு இடுப்பில் பெண்கள் சுமந்து போவார்கள். சமையலறை தொட்டியில் பைப் வைத்திருக்கும், pure it R.O ஹேமமாலினி விளம்பரப்படுத்தும் வசதிகளை குடி தண்ணீருக்காக கொண்டவர்களுக்கு இடுப்பும் தெரியாது குடமும் தெரியாது. அதனால் தான் அவர்கள் இடுப்பு பெரிதாக தெரிகிறது.

அந்தக் குடமும் சில சமயம் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்து விடும். சொம்பு விழும், தூக்கு வாளி கிணற்று மேடையில் வைத்தது சில சமயம் தவறிக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு விடும்.  இந்தச் சமயங்களில் நமக்குப் பேருதவி செய்வதுதான் இந்தப் பாதாளக்கரண்டி. தெருவில் யாராவது ஒருவர் வீட்டில்தான் இருக்கும். எங்கள் தெருவில் காப்பிஸ்ட் ராகவேந்திர தாத்தா வீட்டில் இருக்கும்.

அம்மா ஒரு செம்பை கொடுத்து அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு பாதாள கரண்டியை வாங்கி வரச்சொல்வார்கள். ஈடு வைத்து பாதாள கரண்டி வாங்குவது வழக்கம். எப்போதாவது உபயோகப்படும் அதை வாங்கிப் போனவர்கள் கொடுக்க மறந்தால் யார் வீட்டில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க இந்த சொம்பு ஈடு வைக்கும் பழக்கம்.

அந்த நாளில் மனிதர்கள், குறிப்பாக பெண்கள் தற்கொலை செய்து கொள்ள இந்தக் கிணறுகள் ரொம்ப உபயோகமாக இருந்தன. இவரை கல்யாணம் பண்ணி வைச்சதுக்கு இவளை பாழுங்கிணற்றில் தள்ளியிருக்கலாம் என்று புக்கத்தில் கஷ்டப்படும் பெண்ணின் அம்மா புலம்புவதும் வழக்கம். ஆனால் கிணற்றில் விழுந்தவர்களை எடுக்க பாதாளக்கரண்டி பயன்படாது.

பாதாளக்கரண்டிபாதாளக்கரண்டியை உபயோகப்படுத்த சாமர்த்தியமும் பொறுமையும் வேண்டும். வெயில் இருக்கும்போதுதான் அது சாத்தியம். இரண்டாவது இந்த பாதாளக்கரண்டியை கயிற்றில் கட்டி மெதுவாக இறக்க வேண்டும். கிணற்றில் விழுந்த பொருள் இந்த கொக்கியில் மாட்ட வேண்டும். சில சமயம் வாளியோ சொம்போ அதன் கொக்கியில் மாட்டி தண்ணீர் மட்டம் வரை வந்து விடும், அதற்கு மேல் இழுக்கும்போது பிடி கிடைக்காமல் மறுபடியும் விழுந்து விடும். குனிந்து பார்த்துப் பார்த்து கழுத்து வலிக்கும்.

குழந்தைகள் விளையாடி வீசும் ஸ்பூன், டபரா, டம்ளர், சோப்பு டப்பாவுடன் விழும். உடம்புக்கு போடும் சோப் விழுந்தால் பாதாள கரண்டி உபயோகமாகாது. சோப்பு கரைந்து தண்ணீரில் வாசனை வந்து விடும். அந்த சமயம் மத்தியான வெயில் வேளையில் தெருவில் வரும் மரமேறியைத்தான் கூப்பிட வேண்டும். மரமேறி ஒரு பிரம்மா விஷ்ணு. மேலே மரமும் ஏறுவார். நிலத்துக்குக் கீழே தண்ணீரிலும் குதிப்பார். நாம் சொம்பு விழுந்ததாகச் சொல்வோம். அவர் இறங்கி எடுக்கும்போது நமக்குத் தெரியாமல் விழுந்த பல பொருட்கள் வரும் சாத்தியமும் உண்டு.

கிணற்றின் உரையில் கால் வைத்து இறங்கி நானும், சில சமயம் மனதில் பயம் இருந்தாலும், அம்மா கொடுத்த தைரியத்தில் இறங்கி வாளி குடம் போன்றவற்றை மூச்சடக்கி எடுத்திருக்கிறேன்.

வாங்கிவந்த அவசரம் பாதாளக்கரண்டியைத்  திருப்பிக் கொடுப்பதில் இருக்காது. அம்மா ஒவ்வொரு நாளும் ஞாபகப்படுத்துவாள். சில சமயம் கொடுத்தவர்கள்  பார்க்கும்போது பாதாளக்கரண்டி பற்றி கேட்பார்கள். சில சமயங்களில் வேறொருவர் வீட்டில் கிணற்றில் ஏதாவது விழ, அவர்கள் அங்கு போக, அவர்கள் நம் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப் படுவார்கள். நான் அவர்களோடு காப்பிஸ்ட் தாத்தாவீட்டுக்குச் சென்று அதை அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டு எங்கள் வீட்டுச் சொம்பை எடுத்து வருவேன்.

கிணறே இல்லாத நம் வாழ்க்கையில் பாதாளக்கரண்டிக்கும் இடம் இல்லாமல் போனதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் என் மனக்கேணியில் மூழ்கிக்கிடந்த இந்த செய்திகளை என் நினைவு என்னும் பாதாளக்கரண்டியால் வெளிக்கொண்டுவந்து உங்களுக்கு அளிப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. உங்களுக்கும் மகிழ்வைத் தரும் என்று நினைக்கிறேன்.

படங்கள் உதவி:  இணையத்தின் பல தளங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *