ராத்திரியில் மனசுக்குள்ளே
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (20)
ராத்திரியில் மனசுக்குள்ளே
(பாடல்)
ராத்திரியில் மனசுக்குள்ளே பூத்திருக்கும் கனவையெல்லாம்
ரகசியமா மாலையாகக் கட்டினேன், அதெப்
பாத்திருந்த வெண்ணிலவ பறிச்செடுத்துப் பதக்கமா, ஒன்
நெஞ்சத்தொட்டுச் சூட்டிப் பாக்க வந்தேன்
கண்சிமிட்டும் வெண்ணிலவா முன்னவந்து நிக்கும்போது
கையிலுள்ள மாலைகொஞ்சம் நாணுதே! உன்
செவந்த இதழ் சின்னதாகப் பிரியும்போது மின்னல்வீசி
ஏழைமனசு பாவம்ரொம்பக் கூசுதே!
காத்திருக்கும் நேரத்துல காலம்பாரு வக்கணையா
காலநீட்டி நிம்மதியாத் தூங்குதே! ஒன்னெ[ப்
பாத்திருக்கும் ஒருகணத்தில் பலயுகமும் பொலபொலன்னு
பஞ்சப்போலக் காத்திலெங்கோ பறக்குதே!
சேத்துவச்ச சிறுவாடு நேத்துவந்த கனவோடு
சில்லரையும் மிஞ்சாம தீர்ந்ததே! ஒரு
செறகில்லாம ஒம்முன்னே மொறெயில்லாம நிக்கும்போது
பட்டாம்பூச்சிக்கண்ணு விரிஞ்சு சிரிக்குதே!
காத்தடிச்சா மழவரலாம் கட்டோடு கலெஞ்சிடலாம்
கடலுக்குள்ளே சிப்பியொண்ணு கலங்குதே
மனசுக்குள்ளே மத்து ஒண்ணு மாறிமாறிச் சுத்துறப்போ
பகலும் இரவும் கையைக்கொட்டிச் சிரிக்குதே
சந்தனத்தைத் தடவிக்கிட்டு வந்துநின்ன காத்துக்குள்ளெ
எம்மனசச் சேதியாக்கி வச்சேன், அது
வந்துனக்கு சேந்துருச்சோ வழியில்வம்பு பண்ணிருச்சோ
வானத்துல புள்ளிவச்சுச் சொல்லேன்
படத்திற்கு நன்றி : இளையராஜா