காடும் மலையும் எங்கள் வீடு!
-வைகைச் செல்வி
ஆம்!
நாங்கள் ஆதிவாசிகள்தான்!
நாங்கள் காட்டுவாசிகள்தான்!
நிலமெல்லாம் வீடாக
உங்களுக்கு இருக்க,
காடும் மலையும்
மட்டும்தானே
எங்களுக்கு வீடு?
வானம் முட்ட
நிமிர்ந்து நிற்கும்
அடுக்கு மாளிகைகள்
எங்களுக்கில்லை!
மழைக்கு ஒதுங்க
தலை குனிந்து செல்லும்
குட்டிக் குடிசைகள்தான்!
ஆனால்…
ஆயிரம் இடிகள் விழுந்தாலும்
இடியாமல் நிற்கும்
எங்களைப் போல் உறுதியாய்!
எங்களுக்குப் படிப்பில்லைதான்!
ஆனாலும்…
எங்கள் அறிவு சொல்லுகிறது
எங்களின் வளங்கள்
சுரண்டப்படுவதை!
செவ்வாய்க் கிரகமும்
சுக்கிரனும்
உங்களுக்காய்க் காத்திருக்க
விட்டுவிடுங்களேன்
எங்களை. . .!
இந்தக் காட்டின் மூலையில்
பூச்சியோடும் புல்லோடும்
ஒண்டிக்கொள்வதற்கு!