நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (24)
நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா
(பாடல்)
நெஞ்சுக்குள்ளே ஒரு பொக்கிசமா ஒன்ன
நெறெச்சு வச்சிருக்கேன் தாயி தாயி
ஒன் காவலும் நான் கொண்டைச் சேவலும் நான், இப்பம்
கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!
கொஞ்சிக்கொஞ்சி மனசுக்குள்ளே கோயில் கட்டினேன், அங்க
குயிலு ராகத்துல வண்ணம் பூசினேன்
அஞ்சி அஞ்சிக் கண்ணீரால் கழுவித் தொடெச்சேன், அங்க
அன்பு என்னும் ஒரே ஒரு கொடிய வளத்தேன்
நெஞ்சாரச் சொல்லுறேண்டி உசுர தீபமாக்கினேன்
நெனெப்பு முழுக்க ஒன்ன நெனெச்சு நெனெச்சு ஏங்கினேன்
கண்ணுரெண்டும் சிமிட்டிச் சிமிட்டிக் கலகலன்னு சிரிப்பவளே!
காட்டுக்குள்ள நொழெஞ்சவனத் தடுத்து வழி மறிச்சவளே
கண்ணெல்லாம் இருண்டபோது காலைபோல வந்தவளே!
காதோரம் பாடுகிறேன் தாயி தாயி! இப்பம்
கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி! (நெஞ்சுக்குள்ள)
மேகத்தையும் மேகத்தையும் காத்து சேக்குது
ஆத்தையும் ஆத்தையும் பூமி சேக்குது
தேகத்தையும் தேகத்தையும் தாகம் சேக்குது
தவிப்பையும் தவிப்பையும் சோகம் சேக்குது
பாத்ததும் புரிஞ்சதடி சேந்து பிரிஞ்சு பொறந்தகத
பழகித் தெரிஞ்சதடி பிரிக்க முடியாத கத
ஆனந்தமானவளே! அன்பின் மறுபெயரே!
அலைகடல் நடுவினிலே அமைதி தரும் நிலவே!
தாயாகி சேயாகி தழுவவந்த தேவதையே!
கண்ணில்மணியாக ஒன்னக் காப்பேன் தாயி! ஒன்
கண்ணாளன் சொல்லுறதக் கேளு தாயி! என்
மார்பில் ஒன்னெ ஏந்திக்குறேன் தாயி தாயி, எம்
மடியில் சாச்சுக்குறேன் தாயி தாயி! இப்பம்
கண்ணாரக் கொஞ்சம் ஒறங்கு தாயி தாயி!
படத்திற்கு நன்றி: இளைய ராஜா
இயல்பான நடை , எளிமையான தாலாட்டு. ஆழமான உணர்வுகள்.! அருமை !