நிறமில்லாதொரு
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (30)
நிறமில்லாதொரு
(பாடல்)
நிறமில்லாதொரு வெட்டவெளியாய் நீண்டு கிடந்தேன் நான்
நீ வந்தாய் நிறம் தந்தாய் நிலம் கண்டது வான்!
வடுவில்லாத வானம்போல வாழ்ந்திருந்தேன் நான்
நீ கொஞ்சம் விலகும்போது சிவந்து போனது வான்!
உனக்கும் எனக்கும் உறவுவைத்த ஒருவன் அவனங்கே
உன்னை என்னை உருகவைக்கும் உயிரின் காதலிங்கே
எனக்கும் உனக்கும் தொடரும் நெருக்கம் ஏது உரிமையிங்கே
எல்லாமிருந்தும் ஏதுமில்லை என்ன வாழ்க்கை இங்கே? (நிற)
உயிரினுள்ளே உயிரின் ஒளியாய்ப் பஞ்சுப் பதம்வைத்தாய்
உள்ளம் முழுதும் வெள்ளிநிலவை மெள்ள ஏற்றிவைத்தாய்
அயர்விலாமல் பரிவுகாட்டும் அன்பின் அதிசயமே! உன்னை
அடைந்தும் அடையா துடையும் குமிழாய் வாழ்க்கை விதிவசமே (நிற)
முள்ளில் நடக்கும் நமது வாழ்வின் முடிவு தெரியாது! இதை
மூட்டிவைத்துப் பிரிக்கும் விதியின் மூலம் புரியாது
இருந்தபோதும் இணைந்துவாழ்வோம் விடியும் காலம் வரும், நம்
விதியைத் தாண்டி வாழ்க்கை ஒன்றை நமது காதல் தரும் (நிற)
படத்திற்கு நன்றி