பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கே. ரவி
ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையில், சுஜாதா குரலில் கேட்கலாமே:
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பாடல்களில் உயர் பாடலிதே
நிஜமும் நிழலும் நிதர்சன மாகும்
நித்யா னந்த கீதமிதே
உடலும் உயிரும் உறவென் றெண்ணும்
மடமை அழிக்கும் மார்க்கமிதே
கடவுள் நாமம் கடவுள் த்யானம்
கதிவே றில்லை மானிடனே
ஆசைகள் ஆகும் ஓசைகள் யாவும்
அடங்கிடும் தேவ மந்த்ரமிதே
பாசச் சுழலில் மோகத் தழலில்
பரிதவிக் காதே மானிடனே
மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மதியில்லை யாசொல் மானிடனே
உறுதுணை அவனே உயிர்நிலை அவனே
உணர்ந்திடு வாயா நீயுடனே