–மாதவ. பூவராக மூர்த்தி.

இந்தக்  காலக் கட்டத்தில் விதவிதமான நாற்காலிகள் வந்து சின்னக் குழந்தைகள் கூட நாற்காலியில் உட்காரும் போது இப்படி ஒரு தலைப்பு கொஞ்சம் புதுமையாகவும் முரணாகவும் இருக்கும். ஆனால் நாற்காலி ஆசை மனிதனின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் ஒரு எண்ணம் என்று கருதுகிறேன்.

ஸ்டூல், பெஞ்சு, திண்ணை, ஊஞ்சல், பலகை, தாழ்வாரத்துக்கும் முற்றத்துக்குமான மேடான பகுதி, பாய், ஜமுக்காளம் என்பதே அந்த காலத்தில் உட்கார உபயோகமாகும் வஸ்துக்களாக இருந்தது. நாற்காலிகள் கை வைத்த மர நாற்காலிகள் மிகப் பெரிய மனிதர்கள் வீட்டில் மட்டுமே காணக்கிடைக்கும். அதன் பிறகு சோபா வந்தது. சாய்வு நாற்காலி வயதானவர்களுக்காக வந்தது. இன்று நாம் கம்புயூட்டர் முன் உட்காரப் பயன்படுத்தும் சுழல் நாற்காலிகள், அலுவலகத்தில் மேனஜர் அமர மட்டுமே பயன் படுத்திய காலம்.

அந்த வயதில் நான் பார்த்த சுழல் நாற்காலிகள் மாணிக்கம் ஸலூனில்தான் உண்டு. சின்ன வயதில் கிராப்பு வெட்டும் அனுபவம் இன்னும் பசுமையாக இருக்கிறது. உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தோன்றியது.

பிறந்ததிலிருந்து கோவில் வேண்டுதல்கள் என மூன்று வருடங்கள் முடி காணிக்கை கொடுத்தே காலம் கடந்து விட்டது. நான்கு வயதில் ஒரு நாள் அப்பா தான் முடி வெட்டிக்கொள்ளப் போகும் போது கூட என்னையும் அழைத்துக் கொண்டுப் போனார்.

மாணிக்கம் சலூன் கடைத்தெருவில் ஒரு சந்துக்குப் பக்கத்தில் இருக்கும். மாணிக்கத்தை நான் முதல் முறை பார்க்கும் போது அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும். உள்ளே இருப்பவர்கள் எத்தனைப் பேர் என்று தெரியாத மாதிரி வாசல் கண்ணாடித் தட்டியில் பச்சை வர்ணம் பூசியிருக்கும். ஸ்பிரிங் கதவு மட்டும் நிலையில் நடுவில் பொருத்தப்பட்டிருக்கும். கதவு திறக்கும்போது மட்டும் உட்புறம் ஒரு கணம் தெரிந்து மறையும்.

மாணிக்கம் வெற்றிலை போடுபவர். அடிக்கடி கதவை லேசாகத் திறந்து துப்ப வருவார். அப்போது வாசலில் நின்று யோசனையுடன் இருப்பவர்களைப் பார்த்து “வாங்க சாமி, அடுத்தது நீங்க தான் என்பார்”.

அவர் வார்த்தையை நம்பி உள்ளே போனால் இருக்கும் மூன்று நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மூவரும், கண்ணாடிக்கு கீழே போடப்பட்ட பெஞ்சில் ஒரு நாலு பேரும் இருப்பார்கள். நாம் யோசனையுடன் போனால் தம்பிக்கு ஷேவிங் மட்டும் தான் என்பார்.

barber shopசலூனின் உட்புறம் நான் பார்த்த முதல் சொர்க்கம். காரணம் முகம் பார்க்க எங்கள் வீட்டில் ஒரு பெரிய கண்ணாடி கூடத்தில் இருக்கும். அது வீட்டுப் பெரியவர்களின் உயரத்துக்குத் தகுந்தபடி ஒரு ஐந்து அடியில் ஒரு ஆணியில் கம்பிகட்டி சற்றுச்  சாய்வாக ஒரு கட்டையில் நிற்க வைத்து இருப்பார்கள். கண்ணாடிக்கும் சுவருக்கும் இடையில் கிராப்பு சீப்பு வைக்கப்பட்டிருக்கும்.

என்போன்ற உயரக்குறைவான குழந்தைகள் கையில் வைத்துக் கொள்ளும் முகம் பார்க்கும் கண்ணாடியில்தான் பௌடர், பொட்டு அல்லது விபூதி வைத்துக் கொள்வோம். என்னை முழுவதுமாக பார்த்துக் கொள்ள நான் கூடத்துக் கண்ணாடியின் முன் தாழ்வாரத்தில் நின்றால் தான் என் உயரத்துக்கு என்னைப் பார்க்க முடியும். அந்த தொலைக்காட்சியில் நான் பார்த்த உருவம் இந்த சலூனில் மிக அருகில் பார்க்கும்போது நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று என்னை பெருமிதம் அடையச்செய்யும்.

நான்கடையின் வாசலில் நுழைந்து கடையின் உள்ளே போனபிறகு அந்தத் தெருமுழுவதும் அந்தக் கடை விரிந்திருப்பதாகத் தோற்றம் தரும். காரணம் இரண்டு பக்கச் சுவர்களிலும் பொருத்தப் பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளில் மாறி மாறித் தோற்றம் விழுந்து வெகு தொலைவை வரை நாம் தெரிந்துகொண்டிருப்போம்.

பெரும்பாலும் சலூன்களில் கடிகாரம் இருக்காது. நேரம் ஆவது தெரியாமல் இருக்க இது ஒரு உத்தி. தினத்தந்தி, ராணி, மற்றும் அழகிய பெண்களின் உருவம் போட்ட ஆங்கில பத்திரிக்கைகள் பெஞ்சில் நிறைந்து நம் கவனம் ஈர்க்கும். எங்கள் வீடுகளில் வராத அந்த தினத்தந்தியில் நான் வருடக் கணக்காக சலூன் போகும்போது மட்டும் கன்னித்தீவு படித்திருக்கிறேன்.

சுவரில் சிங்கப்பூர் காலண்டரில் சீன ஜப்பான் அழகிகள் குறைவான உடைகளில் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது என் பதின்ம வயதுகளில் தான் என் கண்ணில் பட்டு மனதில் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது.

barber shop1கண்ணாடி முன் மேஜையில் நிறைய சின்ன பாட்டில்களும் டப்பாக்களும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலின் வாயில் வளைவான ஒரு குழாய் பொருத்தப் பட்டிருக்கும். மாணிக்கம் அதை எடுத்து நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் மேல் பீச்சுவார். சிதறல்கள் முகத்தில் தலையில் பட்டவுடன் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.

வைத்தியர் சங்கம் என்று ஒரு அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் ஷேவிங், கட்டிங் கட்டணம் எழுதியிருக்கும் ஒரு தேதி குறிப்பிட்டு இன்று முதல் என்று எழுதியிருக்கும். பிரதி அமாவாசை, செவ்வாய் கிழமை கடை விடுமுறை என்று போடப்பட்டிருக்கும்.

பெரும்பாலான ஊர் வம்புகளும், நடப்புகளும் அரசியலும் நான் சலூனில் இருந்த போதுதான் தெரிந்து கொண்டேன். கத்தியை  முகத்துக்கு மிக அருகில் வைத்து இருக்கும் போது மாணிக்கம் தன் கருத்தைச் சொல்லி நம் ஆமோதிப்பை வேண்டுவார். காயப்படவேண்டாமே என்று நாம் தலையசைக்க வேண்டியிருக்கும்.

மூன்று நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்கள் முழுவதுமாக மூடிவைத்திருப்பதால் அவர்கள் யாரென்று கட்டிங் முடிந்து துணியைப் பிரித்தவுடன் அவர் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்திருக்கும் போதுதான் தெரியும். மாணிக்கம் அவர் கையில் சீப்பு கொடுப்பார். அவர் நாற்காலிக்கு அருகில் கண்ணாடிக்கு மிக அருகில் போய் தலை சீவுவதைப் போல சீவிக்கொண்டே தன் முக அழகில் மயங்கிப் போவார். மாணிக்கம் அவரை நகர்த்த சுழல் நாற்காலியை லேசாக அசைப்பார். அவர் நகர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணம்கொடுத்து மீதி வாங்கிக்கொண்டு கண்ணாடியில் இன்னொமொரு முறை ரசித்துக் கொண்டே இறங்குவார்.

அப்பா அடுத்தது உட்காருவார். தெருமுழுக்க அப்பா முகம் தெரியும். தலைமீது தண்ணீரை அந்த பாட்டிலால் போட்டு மாணிக்கம் கட்டிங் ஆரம்ப்பிப்பார். நனைந்த முடிகள் அப்பாவில் நாற்காலியைச் சுற்றிலும் சிதறும். புல் வெட்டுவது போல் ஒரு மிஷினை உபயோகப் படுத்துவார். அதன் பின் மாணிக்கம் கடையின் மூலையில் தொங்கவிட்டிருக்கும் பெல்டில் கத்தியைத் தீட்டுவார். அவர் முகத்தைப் பார்க்கவே மதுரை வீரனைப் போல இருக்கும். பயமாக இருக்கும். அவர் கத்தியை அப்பா முகத்தில் பூசிய நுரையில் மீது படரவிடுவார். முடிந்தவுடன் படிக்காரத்தால் முகத்தில் தேய்த்து விடுவார். அப்பாவின் முகம் ஜொலிக்கும்.

அப்பா அவரது அரியணையிலிருந்த்து இறங்கியவுடன் அவரது வாரிசான என்னை அதில் அமரச்செய்வார். நாற்காலியில் சுழலும் அனுபவம் பெற முயலும் என் ஆர்வத்துக்குத் தடை போடுவார் மாணிக்கம். “வாங்க தம்பி உட்காருங்க” என்று சொல்லிய வாறே கீழிருந்து ஒரு மரப்பலகை எடுத்து நாற்காலியின் கைப்பிடிகளுக்கு இடையில் வைத்து அதில் என்னைத் தூக்கி உட்காரவைப்பார். என் கைகளை வளைத்து மெதுவாக என் தொடைகளின் மேல் வைத்து விட்டு வெள்ளைத்துணியால் என்னை முகம் மட்டும் தெரியுமாறு மூடிவிடுவார்.

மண்ணில் புதையுண்டு போனமாதிரி முகம் மட்டும் தெரியும். நாற்காலியில் உட்காரமுடியவில்லை என்கிற வருத்தத்தைக் கண்ணாடி தெளிவாக எனக்குக் காட்டும். அப்பா பக்கத்தில் நிற்பார். மாணிக்கம் தண்ணீர் பீச்சும்போது முகத்திலும் தெறித்துச் சில்லிடும். அந்த மிஷினை  அசைத்துக் கொண்டே ஒரு கையால் தலையை முன்பக்கம் அழுத்துவார். பின் மண்டையில் மிஷின் ஓட்டப்படும். குறுகுறு என்கும். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆசையில் தலையை மெதுவாகத் தூக்குவேன். தெரிவதற்கு முன் மாணிக்கத்தின் கை அதை அழுத்தி விடும். என் பல முயற்சிகள் பல தடவை முறியடிக்கப்படும். சில சமயம் மாணிக்கம் “ஸ்” என்று சப்தமெழுப்புவார், “அசைக்கக்கூடாது” என்பார். சில உதிர்ந்த முடிகள் கண்ணுக்கு அருகிலும், கன்னத்திலும் விழுந்து உறுத்தும். கை வெளியே எடுக்க முயற்சிப்பேன். முடியாது… ஒரு வழியாக முடித்து என் தலைக்கனம் குறைத்து அழகாகச் சீவி விடுவார்.

கொஞ்சம் கொஞ்சமாகக் காம்ப்ளான் குடிக்காமலேயே வளர்ந்தேன். அந்த நாள் நான் சற்றும் மறக்க முடியாத நாள். அந்த முறை முடிவெட்டத் தனியாக போயிருந்தேன். “தம்பி வாங்க” என்று அழைத்து எனக்கு அரியணை தரலாம் என்று முடிவு செய்து நாற்காலியின் குஷனை ஒரு தட்டு தட்டி உட்காரலாம் என்பது போல் செய்கை செய்ய நான் ராஜராஜ சோழன் போல் அரியணையில்  ஏறி அமர்ந்து ஒரு பெருமிதத்துடன் என் எதிரில் தெரிந்த கண்ணாடியில் என் உருவத்தை, அதன்  கம்பீரமானப் பொலிவைப் பார்த்துக் கொண்டேன். எனக்குப் பிடித்திருந்தது.

அதன் பிறகு எத்தனையோ சுழல் நாற்காலிகள், பல் டாக்டரிடம், கண்டாக்டரிடம், அலுவலகத்தில் …. அவைகள் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்க வில்லை. எனக்கு முதல் சந்தோஷத்தைக் கொடுத்த மாணிக்கம் சலூனின் சுழல் நாற்காலி அனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது மறுபடியும் அதை உணர்கிறேன்.

படம் உதவிக்கு நன்றி:
http://www.rangaprabhu.com/buzz/
http://swipelife.com/2011/03/shop-review-chief-barber-shop/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாற்காலியில் இடமில்லை

  1. அன்பு பூவராக மூர்த்தி ஜி . பெண்கள்  அழகு நிலையம் பார்த்த அனுபவம் உண்டு .ஆனால் ஆண்களின் அந்தக்கால சலூனில்  என்னென்ன  பார்க்க முடிந்தது என்பதை மிகவும் அழகாக சித்தரித்தது எனக்கு ரொம்ப பிடித்தது .. வாழ்த்துகள் 

  2. thanks for your nice comments. morethan that it reveals people are reading my
    article. nice of you.

Leave a Reply to madhava. boovaragamoorthy

Your email address will not be published. Required fields are marked *