-ஒரு அரிசோனன்

“மீனாம்பா பாட்டி காலம் ஆகிவிட்டது. அவ போய்ச் சேந்துட்டா. நீ ஒரு முழுக்குப் போட்டுடு.” என்ற என் அம்மாவின் கார்டைப் பார்த்ததும் என் கண்கள் பனித்தன. மேலே எழுதிய எழுத்துக்கள் தெரியாமல் மறைந்தன. மீனாம்பா பாட்டிதான் எவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவள்! உறவுக்குச் செய்து செய்தே ஓய்ந்து உருக்குலைந்து போனவள் அவள்! என் தொண்டை அடைத்தது. என் நினைவு பின்னோக்கிச் சென்றது…

எனக்கு நினைவு தெரிந்து பார்த்ததில் இருந்து, கடைசித் தடவை பார்த்துவிட்டு வந்ததுவரை மீனாம்பா பாட்டி மாறவே இல்லை. அதே மழித்த மொட்டைத் தலை, உடம்பைச் சுற்றிய அழுக்கேறிய, ஆனால், தண்ணீரில் நனைத்துத் துவைத்துக் கட்டிய பழுப்பேறிய வெள்ளைப் புடவை. பறக்கப் பறக்கப் பார்க்கும் பார்வை. நடக்கும்போது இங்குமங்குமாக உதறும் கைகள். இருபது ஆண்டுகளாக மாறாத வடிவம்…

“கண்ணா, இதுதான் என் அக்கா. உன் பெரியபாட்டி. நமஸ்காரம் பண்ணிக்கோ.” என்று என் தாய்வழிப்பாட்டி ஆறு வயதில் மீனாம்பா பாட்டியை அறிமுகப் படுத்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அவர்களை வணங்கி எழுந்ததும் என் கண்ணில் பட்டது அவர்களுடைய மழித்த தலைதான்.

meenapatti1முதன்முதலாக ஒரு அந்தணக் கைம்பெண்ணைப் பார்க்கிறேன் நான். அவர்கள் கைம்பெண் என்று அறியும் அறிவு கூட எனக்கு இல்லை. எனக்குள் தோன்றியது இதுதான். ஏன் இவர்கள் மொட்டை அடித்து இருக்கிறார்கள்?

“பெரியபாட்டி, நீ எந்த கோவில்லே மொட்டை போட்டே? என்ன வேண்டுதல்?” என்று கேட்டதும், என் பாட்டி, “பெரியவாளை இப்படியெல்லாம் கேட்கக்கூடாது!” என்று கண்டித்ததும் நினைவுக்கு வருகிறது.

“ஒரு அல்பாயுசுல போன பாவிக்காகத்தான்..” என்று மீனாம்பா பாட்டி அலுத்துக்கொண்டதும் என் காதில் ஒலிக்கிறது.

“அல்பாயுசுல போன பாவி யாரு?” என்று நான் குழந்தைத்தனமாகக் கேட்டததற்கு, “என் ஆம்படையான் பாவிதான். நான் பெரியவள் ஆகறதுக்குள்ளையே குளத்துலே விழுந்து போய்ச் சேந்துட்டான். என் மஞ்சள் குங்குமம், தலை மயிர் எல்லாத்தையும் எடுத்துண்டு, மொட்டச்சியா விட்டுட்டுப் போயிட்டான்.” என்று மீனாம்பா பாட்டி வரட்டுச் சிரிப்புடன் கூறியதும், என் பாட்டி, “அக்கா. ஒரு சின்னக் குழந்தை கிட்ட என்னத்தைதான் சொல்றதுன்னு இல்லையா?” என்று கடிந்துகொண்டதும் கேட்கிறது.

அப்பொழுது அதற்குப் பொருள் எனக்குப் புரியவில்லை. புரியும் வயது வந்தவுடன் நான் திடுக்கிட்டுப் போனேன். அறியா வயதில் திருமணம். ஒரே ஆண்டில் குளத்தில் நீந்திக்குளிக்கச் சென்ற கணவன் மூழ்கி இறந்துபோனான். பருவம் வந்ததும், சுமங்கலிகளை அழைத்து, மஞ்சள் நீராட்டி, பட்டுப் புத்தாடை உடுத்தச் செய்து சீராட்டவில்லை. மகிழ்ச்சியாகச் சிரித்து, பாட்டுப் பாடி, நல்வாழ்த்துக்கூறி, வாழ்த்திப் புகழவில்லை.

மாறாக, நாவிதரை வீட்டுக்கு அழைத்து, தலைமயிரை மழிக்கச் செய்து, அமங்கலிகளைக் கொண்டு, வெள்ளை ஆடை உடுத்திவிட்டு, ஓவென்று அழுதார்கள். “பாவி மகளே, இப்படி ஆய் விட்டியே! இனி யாராத்தில் இடிசொறு திங்கப்போறியோ!” என்று சுமங்கலியான அவளது அம்மா கதறினார்களாம்.

தன் மகளை விதவைக்கோலத்தில் பார்த்து நெஞ்சு உடைந்த என் பாட்டியின் அப்பா ஒரே ஆண்டில் போய்ச் சேர்ந்தாராம். தாயும் மகளும் ஒரே மாதிரி மழித்த தலையுடனும், வெள்ளை உடையுடனும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பார்களாம்.

கைம்பெண்களான தாயும், மகளும், என் பாட்டியின் அண்ணா வீட்டில் காலத்தைக் கழிப்பார்களாம்.

எந்த உறவினர் வீட்டில் நல்ல நாள்களில் என்ன வேலை என்றாலும், தாயும் மகளும் சேர்ந்து செல்வார்களாம். வேலையைச் செய்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருப்பார்களாம்.

என் தாத்தா வாங்கிய ஒரு வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு வேலை செய்வதற்காக வந்தபோதுதான் மீனாம்பா பாட்டியை முதன்முதலாகப் பார்த்தேன்.

மங்குமங்கென்று வேலை பார்த்த மீனாம்பா பாட்டியிடம் ஒரு கெட்ட குணம்meenapatti2 உண்டு. மடி விழுப்பு ரொம்பப் பார்ப்பாள். என் பாட்டி, பிரம்மச்சாரிக்கு விழுப்புக் கிடையாது என்று எப்போதோ சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே மீனாம்பா பாட்டியைத் தொடுவேன்.

“பழிகாரா, ஏண்டா விழுப்போட என்மேல விழறே! என் மடி போச்சேடா!” என்று கத்துவாள். அதுகூட எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

“பெரியபாட்டி! உன் மடி உன்கிட்டதான் இருக்கு. அது எங்கேயும் போகலை.” என்று சீண்டுவேன்.

என்னை அடிக்கவென்று ஒரு சின்னக் குச்சியை வைத்திருப்பாள். அதை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். குச்சியைத் தேடுவாள்.

“என்ன பெரியபாட்டி தேடறே?” என்று கேட்டால், “முதுகைச் சொறிஞ்சுக்க ஒரு குச்சி வச்சிருந்தேன். அதக் காணம். “ என்று இழுப்பாள்.

“இதுதானா அது?” என்று ஒன்றும் தெரியாதவன் போல அந்தக் குச்சியை எடுத்துக் காட்டுவேன்.

“ஆமாம். கொடு.” என்பாள்.

“வெவ்வெவ்வே! என்னை அடிக்கத்தானே வச்சிருக்கே! தரமாட்டேன். வேணும்னா உன் கையாலே அடி.” என்று கிண்டல் செய்வேன் – மடி, விழுப்பு பார்க்கும் மீனாம்பா பாட்டி என்மேல் கை வைக்கமாட்டாள் என்ற தைரியம்.

“அநியாய சாமர்த்தியம்டா நோக்கு. என் ராஜாவாச்சே! நெஜமாவே முதுகை அரிக்கறதுடா. கொடுத்துடுடா கண்ணா!” என்று தாஜா செய்வாள்.

“நான் வேணும்னா சொறிஞ்சு விடறேன். பாட்டிக்கும் நான்தான் சொறிஞ்சு விடுவேன்.” என்று மிஞ்சுவேன்.

“பரவாயில்லே. நான் ஸ்நானம் பண்ணத்தான் போறேன். சொறிஞ்சுவிடு.” என்று முதுகைக் காட்டுவாள்.

“பெரியபாட்டி, ஏன் நீ ரவிக்கையே போடறதில்லை?” என்று என் சந்தேகத்தை மெல்ல அவளிடம் கேட்டேன்.

“சின்ன வயசிலேயே என் தலையைச் செரைச்சாச்சு. ரவிக்கை ஒண்ணுதான் பாக்கி. இனிமே என் அழகிலே மயங்கி, எந்த ராஜகுமாரன் வரப்போறான்!” என்று வரட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்ப்பாள்.

“பெரியபாட்டி, நீ சின்ன வயசிலே எப்படி இருப்பே? அழகா இருப்பியா? எல்லோர் போட்டோவும் இருக்கே, உன் போட்டோ மட்டும் எங்கேயும் காணோமே?” என்று கேட்டேன்.

“ஆமா, ஆமா, இனிமே என்னைப் போட்டோ எடுத்து, பெண்பாக்கக் கொடுத்தனுப்பணுமா? மொட்டச்சிக்கு அழகு ஒண்ணுதான் கொறையாக்கும்?” என்று அலுத்துக் கொள்வாள். எனக்கு மீனாம்பா பாட்டி ஏன் எப்படிப் பேசுகிறாள் என்றே புரியாது.

என் பாட்டியிடம் கேட்டால், “உனக்கு வாய் ரொம்பப் பெருகிப் போச்சு. பெரியவாகிட்ட என்ன பேசறதுன்னே தெரியலை.” என்று என்னையே திட்டுவாள்.

நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரில் இருந்த என் மாமாத்தாத்தா, அதாவது மீனாம்பா பாட்டியின் தம்பியின் வீட்டுக்கு ஒரு தடவை விசெஷத்திற்காகச் சென்றிருந்தேன்.

பஸ்ஸில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றபோது என் மாமாத்தாத்தா இரைந்துகொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

“இப்படியா ஈரம் சொட்டச் சொட்டத் துணியை உணத்தறது? நீ ஒரு தரித்திரம் வந்து சேர்ந்தது போறாதா? இன்னும் வேற வரணுமா?” என்று மீனாம்பா பாட்டியை வைது கொண்டிருந்தார்.

“வயசாச்சுடா. கையிலே தெம்பு இல்லே. நன்னா இறுக்கிப் பிழியா முடியலேடா. எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா? இல்லே நாட்டுப்பொண்ணுதான் இருக்காளா, கொஞ்சம் பிழிஞ்சு உணத்துடின்னு சொல்லறதுக்கு. கட்டை வேகறவரைக்கும் நானேதானே செய்துக்கணும்.” மீனாம்பா பாட்டியின் குரல் தழுதழுப்பது எனக்குக் கேட்டது. அது என் மனதையே அறுத்தது.

“வாடா கண்ணா! எப்படா வந்தே? ஆத்துலே அம்மா, அப்பா, பாட்டி தாத்தா எல்லோரும் சௌக்யமா?” என்று என் மாமாத்தாத்தா கேட்டதற்கு பதிலே சொல்லாமல், கூடத்தில் ஈரம் சொட்டச் சொட்டத் தொங்கிக் கொண்டிருந்த மீனாம்பா பாட்டியின் வெள்ளைப் புடவையை எடுத்து, புழக்கடையில் நன்றாகப் பிழிந்து விட்டு கொடியில் உலர்த்தினேன். என் பையைத் திறந்து, என் துண்டை எடுத்து, கீழே சிந்தியிருந்த தண்ணீரைத் துடைத்தேன்.

“இப்படி அதிகப்பிரங்கம் பண்ணி, அவ மனசை என் கெடுக்கறே! பாப்பா (என் அம்மா) உனக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து, கெடுத்துத் தொலைச்சுட்டா!” என்று அலுத்துக் கொண்டார், என் மாமாத்தாத்தா. முரடன் என்று எனக்குப் பெயர் இருந்ததால் மேலே ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டார்.

யாரோ கேவும் குரல் கேட்டது. சென்று பார்த்தால் மூலையில் அமர்ந்துகொண்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் மீனாம்பா பாட்டி.

என்னைக்கண்டதும் புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழ முயற்சித்தாள்.

“வேண்டாம் பெரியபாட்டி. மாமாத்தாத்தாவுக்கு ஏதோ கோபம். அதை உன்மேல காட்டிட்டா. நீ ஏன் அதுக்கு அழறே?” என்று சமாதானம் சொன்னேன்.

“இல்லேடா கண்ணா. சாமி என் தம்பிதானே. அவன் திட்டினா எனக்கு காச்சா தொங்கப்போறது? அது இல்லேடா?” என்று விம்மினாள்.

“பின்னே!”

“எனக்குப் பிள்ளை இல்லையே. அவன் இருந்திருந்தா இப்படி இடிசோறு திங்கவேண்டி இருக்காதேன்னு நிறைய தடவை நெனப்பேன். சாமி கத்தினபோது நீ ஒண்ணுமே பேசாம, என் பொடவையப் பிழிஞ்சு ஒணத்தினியே, எனக்கு மனசு நெறஞ்சு போச்சுடா. அதுதான் தன்னையும் அறியாம அழுகை வந்துடுத்து. பிள்ளை இல்லேன்னு இனி மனசு வருத்தப்பட மாட்டேண்டா. பகவானாப் பாத்து நான் பிள்ளையா குட்டியான்னபோது, உன்னை அனுப்பிவச்சு என் மனசுல இருந்த அந்தக் கொறையை நீக்கினானே, அதுவே போறும். நீ தீர்க்காயுசா இருப்பே.” கையை என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தாள்.

அன்று மாலை நான் நான்கு பார் சோப்புகளைத் துண்டம் செய்து, அவளிடம் கொடுத்தபோது, “ஏன்?” என்பதுபோல என்னைப் பார்த்தாள்.

“பெரியபாட்டி. உன் புடவைலே அழுக்கு ஒட்டிண்டு இல்லே. அழுக்குலேதான் உன் புடவை ஒட்டிண்டு இருக்கு.   அதுக்குத்தான் இந்த சோப்புக் கட்டிங்க. வெறுன்ன தண்ணீல நனைச்சு நனைச்சு ஒணத்தவேண்டாம். சோப்புப் போட்டே துவை.”

மீனாம்பா பாட்டி ஒன்றுமே பேசவில்லை. நன்றியுடன் சோப்புக் கட்டிகளை வாங்கி வைத்துக்கொண்டாள்.

நானும் வேறூரில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்குள் மீனாம்பா பாட்டியை பத்துப் பன்னிரண்டு தடவை பார்த்திருப்பேன். சில சமயம் சோப்பு வாங்கித்தா, தலைவலித் தைலம் வாங்கித்தா என்று கேட்பாள். வாங்கிக் கொடுப்பேன்.

ஒருதடவை விடுமுறையில் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

“மாமா குடும்பத்துடன் மெட்ராஸ் போய்ட்டா!” என்றாள் என் அம்மா.

“என்ன விஷயமாம்?”

“எவ்வளவு நாள்தான் உழைச்சுக்கொட்ட முடியும்? வயசாயிடுத்து இல்லையா? மெட்ராஸ்ல இருக்கற மூத்த பிள்ளை கூப்பிட்டான். அதுதான் போயிட்டா!”

“பெரிய பாட்டியையும் மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிட்டாரா?”

“நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப் படுமா? அதுதான்…” இழுத்தாள் அம்மா.

புருவங்களை உயர்த்தினேன்.

“என்னடா அப்படிப் பாக்கறே?”

“மீனாம்பா பாட்டி எங்கேதான் இருக்கா?”

“அதுதான் வயசானவாளுக்கு, பிள்ளை குட்டி இல்லாதவாளுக்கு மாசம் முப்பது ரூபா கவர்மின்ட்டுலே கொடுக்கறாளாமே, அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டுத்தான் மாமா போயிருக்கா. பக்கத்துக் கிராமத்திலே, உன் சின்னப்பாட்டி இருக்காளே, அங்கேதான் இருக்கா.”

“சின்னப்பாட்டியா மீனாம்பா பாட்டியை வச்சுண்டு இருக்கா?”

“இல்லேடா. மீனாம்பா பாட்டி தனியாத்தான் இருக்கா.”

“எப்படிம்மா இது? உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உங்க எல்லோருக்கும்தானே உழைச்சுக்கொட்டினா! இப்ப ஒங்க யாராலையும் அவளைப் பார்த்துக்க முடியலையா?” பொருமினேன் நான்.

“உனக்கு ஒண்ணும் தெரியாது. தெம்பு இருக்கவரைக்கும் மாமா குடும்பத்துக்குத்தான் உழைச்சா. அவரே அவளை விட்டுட்டுப் போயிட்டா. நமக்கு உழைச்சானு சொல்றியே. நாம சும்மாவா விட்டோம்? அப்பப்ப ஏதாவது வாங்கித்தானே கொடுத்தோம்!”

“கூலி கொடுத்தோம்னு சொல்றியாம்மா?”

“ஒனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு. இனிமே ஒன்னோட என்னால பேசமுடியாது.” என்று போய்விட்டாள் அம்மா.

ஏதோ ஒன்று உந்தவே, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீனாம்பா பாட்டி இருக்கும் கிராமத்திற்குச் சென்றேன். என் வயதுள்ள, என் ஒன்றுவிட்ட மாமா ராஜுதான் எட்டடிக் குச்சான ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.

“பெரிம்மா, பெரிம்மா!” என்று சொல்லிக்கொண்டே ஆடும் கதவைத் திறந்தான்.

“ஆரு வந்திருக்கா?” என்று மெல்லிய குரலில் கேட்டவாறே, தரையில், ஒரு பலகையைத் தலைக்கு வைத்திருந்த மீனாம்பா பாட்டி கையை ஊன்றிக்கொண்டு எழுந்திருந்தாள்.

“நான்தான் பெரியபாட்டி, கண்ணன் வந்திருக்கேன்..” என்று உரத்த குரலில் சொன்னேன்.

கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப் பார்த்த மீனாம்பா பாட்டி இனம் கண்டுகொண்டாள்.

“வாடாப்பா, கண்ணா, வா.” என்று அன்புடன் சொன்ன அவள் பொங்கிப்பொங்கி அழுதாள்.

“பாத்தியாடா என் நெலமைய? அநாதப் பொணமா இருக்கேண்டா. உடம்புலே தெம்பு இருந்தபோது என் ஒழைப்பு எல்லோருக்கும் தேவையா இருந்துது. மீனா, வாடீம்மா, நீ இல்லாம ஆத்திலே ஒரு விசேஷம் நடக்க முடியுமா அப்படீம்பா. இப்போ – நான்தான் சக்கையாப் போயிட்டேனே. அதுதான் தூக்கிப் போட்டுட்டா.”

நான் என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்துவேன்?

“பெரியபாட்டி, நீ கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. நான் படிச்சு முடிச்சதும் உடனே வேலையைப் பார்த்துப்பேன். நான் உன்னைக் கொண்டு என்னோட வச்சுக்கறேன். நான் சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கறேன். என் பொண்டாட்டி உன்னை நன்னாப் பார்த்துப்பா.” உணர்ச்சி வேகத்தில் என்னிடமிருந்து வார்த்தைகள் பெருக்கெடுத்தன.

“இது போதும்டா, கண்ணா. நீ நல்ல குணவதியான பொண்ணைக் கல்யாணம் செஞ்சுண்டு நூறு வருஷம் நன்னா இருப்பே. ஒன் பொண்டாட்டி தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு நூறு வருஷம் சுமங்கலியா இருப்பா. ஒன் புள்ளை, குட்டிகளெல்லாம் ஒன்னை நன்னாப் பாத்துக்குவா.

“எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணை மூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சு போச்சுடா. எப்ப பகவன் கூப்படறானோ அப்பா நிம்மதியா போய்ச் சேருவேன். என்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள்.

“கண்ணா, என்னால பிழிஞ்சு ஒணத்தவே முடியலடா. இப்ப நார்ப்பட்டுன்னு ஒண்ணு செய்யறாளாமேடா. அதைப் பிழியவே வேண்டாமாண்டா. வெறுன்ன நனைச்சுப்போட்டாலே ஒணந்து போகுமாமே. எனக்கு ரெண்டு நார்ப்பட்டுப் பொடவை வாங்கித் தறியாடா?”

“கட்டாயம், பெரிய பாட்டி. கட்டாயம். நான் ஊருக்குப் போயி வாங்கி அனுப்பறேன்.”

என் கையில் இருந்த ஐம்பது ரூபாயை அவளிடம் கொடுத்து, என் மாமன் ராஜுவிடம் அவளுக்கு உதவி செய்யுமாறு சொல்லிவிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

முதல் வேலையாக இரண்டு வெள்ளை நார்ப்பட்டுப் புடவைகளை வாங்கி என் அம்மாவிடம் கொடுத்து, மீனாம்பா பாட்டியிடம் சேர்த்துவிடச் சொல்லிவிட்டுக் கல்லூரி செல்ல ரயில் ஏறினேன்.

அதுதான் நான் மீனாம்பா பாட்டியைக் கடைசியாகப் பார்த்தது. இரண்டு மாதங்கள்கூட ஆகி இருக்காது.

கண்கள் உலர்ந்து, என் அம்மா மேலே எழுதியிருந்த வரிகள் தெளிவாகின.

“நீ கொடுத்துவிட்டுப் போன நார்ப்பட்டுப் புடவைகளை சார்த்தித்தான், மீனாம்பா பாட்டியைத் தகனம் செய்தார்கள்.”

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “மீனாம்பா பாட்டி போயிட்டா…

  1. ரொம்ப மனதை உருக்கிய கதை. கதை என்று சொல்லத் தோன்றவில்லை.. உண்மை நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். இப்படி வாழ்ந்து மறைந்தவர்களை நினைக்கும் போது கண்ணீர் பெருகுவதை தவிர்க்க முடியவில்லை. மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்…பகிர்வுக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்.

  2. ஓம்
    பெரும்பாலும் வயதான பெரியவர்கள் எவருக்கும் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் குறைவு.. கலாசாரம் என்ற பெயரில் தொன்றுதொட்டு நடைமுறைப் படுத்தப்படும் அன்றாடப் பழக்க வழக்கங்கள் பாட்டிமார்களிடம் தான் சேகரித்து வைக்கப் படுகின்றன. உழைப்பு- உழைப்பு என்ற தார்மீக அடிப்படையே அவர்களின் வாழ்க்கை யாகிறது. எவரும் நோகா வண்ணம் அஞ்சி அஞ்சி சிறிதாகப் பேசும் இயல்பு அவர்களுக்கு அவசியமாக்கப் பட்டுள்ளது. அவர்கள் கண்ட இயல்பான வடிகால் ஆலயங்களுக்குச் செல்வதும் சந்நிதி சந்நிதியாய் குனிந்து வணங்கி எழுவதும் தனக்கு நேர்ந்த வாழ்க்கையின் சலிப்பையும் முடிவற்ற வியாகூலத்தையும் முறையிடுவது மட்டுமே. உறவுகள் முதியோரின் காப்பாளர்களாக அடையாளம் காட்டிக் கொள்கின்றனர் ஆனால், முதியோரின் இயலாமையை அவரவர் தன்னுடைய நிலையிலே வைத்துக் கணக்கிடுகின்றனர்.. . வாய்விட்டுச் சொன்னாலும் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.நெருங்கிய சொந்தக்காரர் மற்றும் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு என இந்த முதியோர்கள் மாங்கு மாங்கென உழைக்க வேண்டியவர்கள் என்பது எழுதாத சட்டம். தன் உறவைச் சொல்லி ஒரு புன்னகையை மட்டும் காட்டிக் கூறிவிட்டு அவர்களின் உழைப்பைத் திருடிக்கொண்டுசெல்லும் இயல்பே உறவினர்களுக்கு அமைகிறது.அமங்கலி என்ற பெருங் குற்றம் கொண்டவர்களை முன்வரிசையில் வர அனுமதி யில்லை.தலைவலி என்று சொன்னால் மறுநாள் இரவு மாத்திரை  அவருக்குக் கிடைக்கும். ’ஏன் ஒவ்வொன்றாய்த் தருகிறாய்’ என்று கேட்டால்’ பாட்டி நீ தவறுதலாக அதிகம் உட்கொண்டுவிடுவாய். அது கேடு’ என்பார்.மன உளைச்சலுடன் கரைந்துவரும் ஜீவன்கள் முதியோர்.
    என் கடைசித் தம்பி என் அன்னையின் வயிற்றில் இருக்கும் போது என் தந்தை காலமானார். குழந்தை பிறந்தபின்னர் சில காலம் பொருத்திருந்து அன்னையின் தலை மழிக்கவேண்டும் என்று பேச்சு வந்த போது கொதித்தெழுந்து அந்த மழிப்பினைத் தவிர்த்தேன்.’அவர்கள் உன்னைப் பெற்றவர்கள்; நீங்கள் அவர்களை விற்றவர்கள்’ என்று ஒரு முதியோர் இல்லத்தில் சுவரில் எழுதியிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ராஜாராம் மோகன்ராய் போன்ற பெரியோரின் வலிமையால் உடன்கட்டை ஏற்றுதல்  தவிர்க்கப்பட்டது. இல்லையெனின் அவர்கள் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். துயருரும் மனிதர்களுக்கு துயர் துடைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மீனாம்பா பாட்டி காலத்தில் விதவைத்திருமணம் வகுக்கப்பட்டிருந்தால் சந்ததியின்றிப் போன ஒரு குடி தழைத்திருக்கும்.
    அன்புடன்! ஒருசேனன் வாழ்த்துகள்.
    வெ.சுப்பிரமணியன் ஓம்

  3. உருகச் செய்த உன்னதமான படைப்பு. மறைந்து விட்ட என் பாட்டிகளை நினைக்க வைத்து விட்டாய் அரிசோனா! உலுக்கி விட்டாய். மீனாம்பா பாட்டியின் புடைவை போல் அழுக்கில் ஒட்டிக் கொண்டிருந்த மனத்தைக் கசக்கிப் பிழிந்து உலர்த்தி விட்டாய். நன்றி அரிசோனா. உன் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தால் தொடர்பு கொள்ள ஆசை. கே.ரவி.  

  4. தாமதமாய் இன்றுதான் வாசிக்க நேர்ந்தது. அந்த நாளில் கணவரை இழந்த பெண்களின் நிலைமைதான் எத்தனை சோகமானது.! மீனாம்பா பாட்டியைப்போல பல பாட்டிகளின் உள்மனசை யார் அறிவார்கள்! பணியம்மா என்று கன்னடத்தில் பலவருஷம் முன்பு ஒருபடம் வந்தது மனதை அப்படியே உலுக்கும் திரைப்படம். கைம்பெண்களின் அவலநிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியது. மாயவரம் அருகே ஒருகிராமத்தில் (ஆனதாண்டவபுரம்) கலைநிகழ்ச்சிக்குப்போனபோது அங்கிருந்த பல வயதான கணவரை இழந்த பெண்களைபேட்டிகண்டேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு க்தை இருந்தது.ஆனாலும் எதிர்நீச்சல்போட்டு வாழ்வில் அவர்கள் முன்னேறியதை உணர்ச்சிததும்ப விவரித்தார்கள்.சருகுகள் என்ற தலைப்பில் அதைவைத்து நான் எழுதிய சிறுகதை கலைமகள் கிவாஜ போட்டியில் பரிசு பெற்றது. கற்பனைக்கதைகள் எல்லாவற்றிர்க்கும் பின்னணி ஒன்று நிஜமாக இருக்கிறது. உங்கள் கதையும் அப்படித்தான் இருக்கும். அதனால்தான் வாசிப்பவர்களின் மனதில்போய் ஆக்கிரமிக்கிறது பாராட்டுக்கள் திரு அரிசோனன்.

    இப்படிக்கு, ஷைலஜா

  5. இப்போத் தான் படிச்சேன்.  இது கற்பனையாகத் தெரியவில்லை.  இது மாதிரி பல மீனாம்பாப் பாட்டிகளைக் கண்டிருக்கிறேன். கவனிக்க ஆள் இல்லாமல், கடைசி காலத்தில் தன்னந்தனியாக………. நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. 🙁

  6. இதுபோன்ற கதைகளையும், உண்மை நிகழ்வுகளையும் படித்தும் கேட்டும் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன் பலதடவை. 
    எனக்குத் தெரிந்து ஒரு மாமி இதைபோல குழந்தை இல்லாததால் கணவர் மறைந்த பின் உறவுக்காரர்கள் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக் கொண்டார். மாமிக்கு சொந்தமாக ஒரு வீடு திருவல்லிக்கேணியில் இருந்தது. விடுமுறையில் தத்துப் பிள்ளை இந்த அம்மாவைப் பார்க்க வருவான். துளிக்கூட ஒட்டுறவு இல்லாமலேயே வந்துவிட்டுப்போவான். தத்து எடுத்தது சொத்துக்காகத்தான். மீனாம்பா பாட்டிக்கும், நான் சொல்லும் இந்த மாமிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 
    எனக்கு இந்தக் கதையைப் படித்தபின் தோன்றியது இதைபோன்ற பெண்களுக்கு நம் கதைகளிலாவது நல்ல முடிவைக் கொடுக்கலாமே என்பதுதான். இப்போது காலம் நிறைய மாறியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இரண்டு மூன்று பெண்களுக்கு அவர்களது மைத்துனன்மார்களே மறுவாழ்வு கொடுத்திருக்கிறார்கள். பெரியவர்களும் இப்போது இவற்றை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். 

    நிறையச் சொல்லலாம். மகன்கள் இருந்தும் கடைசிகாலம் சரியாக அமையாத பெண்களும் இருக்கிறார்கள் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுகிறேன்.

  7. பாராட்டுத் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.  இது என்னை நன்றாக எழுத ஒஊகுவிக்கிறது.  வணக்கம் பலகோடி.

  8. உழைப்பை உறிஞ்சுகிட்டு  வயதான காலத்தில் உதறிவிடும் மனிதர்களை நினைத்து   மனம் நோவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும் ? மனிதாபிமானம் அற்றவர்கள அன்றுமட்டு மல்ல இன்றும் இருக்கிறார்கள்  மனதை நெகிழச்செய்துவிட்டது ,பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *