-சந்தர் சுப்ரமணியன்

பண்ணிசைப் பரப்பி எங்கும் பலவுயிர் சிலிர்க்கச் செய்து
வண்டமிழ் ஒலிக்கும் பேடை வனமமர் குயிலின் நீலக்
கண்களில் காதல் கண்டான், கண்டதைக் கவியாய்த் தந்தான்;
உண்டதேன் உரைப்பேன் இங்கே உளத்திடை ஊறு மட்டும் (1)

பாவலர் கண்கள் என்றும் பார்த்திடும் அகத்தின் தோற்றம்
பூவளர் பொழுதும், பொன்னார் பொழுதது புலரும் போதும்,
தூவிடும் மழையின் தோற்றம், தொலைவுள நிலவும், யாவும்
பாவளர் கருவாய் ஆகிப் பாட்டுடை பொருளாய் மாறும் (2)

தேடலும் தேடும் இன்பத் தீதரும் சுகமும் கண்டென்?kuyil0
கூடடை உயிரும் நீங்கும் கூற்றுவன் அருகும் வேளை;
வேடவன் வாரா நாளே விருந்தெனும் பறவை என்று
பாடலில் புலவன் சொன்னப் பாங்கது புதுமை அன்றோ (3)

ஓடிடும் மனத்தின் எண்ணம் ஒருமுகப் படுமவ் வேளை
பாடகன் கனவில் நெஞ்சம் பளிச்செனப் படமொன் றேர்க்கும்
தேடிய கவிதை யங்கே தெரிந்திடும்; வரியாய்ச் சொற்கள்
கூடிடக் கருத்தின் ஊற்றாய்க் கொள்ளெனக் கவியா(று) ஓடும் (4)

பேசிடுங் குயிலைக் கூட பெருங்கவி பார்க்கக் கூடும்;
ஓசையோ டுறவு கொண்டே உளத்தினை யிழக்கக் கூடும்;
ஆசையாய்க் குயிற்பால் காதல் அடைந்திடும் மனிதன் மெல்ல
ஊசியோ டோடும் நூற்போல் உலவுவான் கனவின் ஊடே (5)

காதலில் வெற்றி ஒன்றே காதலர் உயிர்ப்பென் றாகும்;kuyil1
சாதலே நன்றாம் வெற்றி சாத்தியம் இலாத போழ்து;
நாதமாய் ஒலிக்கும் காதல் நலிந்திடும் வேளை நெஞ்சில்
சேதமே, கவிஞன் நன்றாய்த் தெளிந்திதைப் பாவாய்த் தந்தான் (6)

ஓசையில் விதங்கள் உண்டோ? ஒன்றிலை கோடி யென்றான்
பேசிடும் மொழியும், கானில் புள்ளதன் ஒலியும், பெண்டிர்
மூசிடும் அளிகம் போலே மொழிந்திடும் போதும், கையில்
நேசமாய் வளையல் என்றாய் நிகழ்வுகள் எதிலும் ஓமே (7)

காதலை வேண்டிப் பேடை கரைதலும், இல்லை யாயின்
சாதலே சரியாம் என்றே தவிப்பதும், சிந்தை சேர
வேதனை உயிருள் ஊறி உளத்தினை உழற்றப் பேடைப்
போதலை மனிதன் கண்டே பொருள்தெரி யாது நின்றான் (8)

சத்தியைத் தந்தான், தானே தந்துணை தேடு மாறு
வித்தையை விரைந்து கற்க வினையினை உளத்தில் வைத்தான்;
சித்தமும் செயலும் நெஞ்சின் சிந்தனை தன்பால் ஈர்க்கும்
தத்துவம் இதையே இப்பா தந்திடும் எனக்கொள் வோமா? (9)

பொம்மையாய்ப் பொழுதைப் போக்கும் பொய்வழிப் போதை மாயை;
சும்மையாய் உடலம், சோகம் சொட்டிடும் கண்ணில் நீராய்;
வெம்மையும் குளிரும் ஒன்றே, விளைவுகள் காணும் மாற்றம்;
இம்மொழி உவமை யாக இயன்றிடும் பாடல் ஈதோ? (10)

வந்தது மறுநாள், அன்று வனத்திடை குயிலைத் தேடி
முந்தைய மரத்தைப் பார்த்தான், வரவிலை, வேறோர் கொம்பின்
சந்தியில் கண்டான், அந்தோ! தனித்திலை, குரங்கி னோடே;
நொந்தவன் நொடியில் நெஞ்சும் நொடிந்திடும் நிலைமை உற்றான் (11)

வாலுடை வான ரத்தை வாஞ்சையோ டடையும் பேடை;
ஓலமே உளத்துள் ஓங்க ஓடினான் வீட்டைத் தேடி;
காலமாய்ப் போனான், கண்கள் கருத்திட மூர்ச்சை யாகி
நாலுபேர் அவனைச் சூழும் நிலையினில் மனிதன் வீழ்ந்தான் (12)

பார்ப்பது குயிலா? இல்லை, பரமதே, ஆன்ம ரூபம்;
சேர்ந்திடும், சிலநாள் தங்கும், திகைத்திட வைத்துப் பின்னர்
சார்ந்திடும் உடலம் விட்டுத் தாவிடும், பிறிதோர் கூட்டைத்
தேர்ந்திடும்; நிலைத்து நீங்கும் தெய்வதம் இதுவே ஆகும் (13)

என்புடை உடலம் என்றும் இப்புவி மண்ணில் தங்கும்;
அன்புடை உயிரே என்றும் அலைந்திடும் ஆன்மம் ஆகும்
சென்றிடும் மேலும் கீழும் செலவொடு வரவு மாக;
இந்நெறி ஒன்றை யன்றோ இயன்றிடும் இப்பா என்றும்? (14)

நீண்டிடும் இரவ டுத்து நினைவினில் மூன்றாம் நாளாம்;
காண்கையில் மிரண்டு நின்றான், காளையும் குயிலும் ஒன்றாய்;
வேண்டியே நெஞ்சின் காதல் விளக்கிடும் குயிலின் பேச்சைத்
தாண்டியும் போக ஒண்ணாத் தவிப்பினில் தானு றைந்தான் (15)

ஆவியை உருக்கிப் பொன்னாய் அதனுடன் உடலம் சேர்க்கக்
கூவிடும் குழந்தை ஒன்றைக் குவலயம் பிறப்பாய்க் காணும்;
மேவிடும் உலக வாழ்வில் மெய்யது பொய்யே ஆகும்;
தேவனின் விளையாட் டொன்றின் செயற்பலன் பிறப்பென் றாகும் (16)

தொல்லைகள் தொடரும் வாழ்வில், தொலைந்திடும் ஓர்நாள்; பின்னர்,
இல்லையென் றான போழ்தில் இருட்டினில் ஒடுங்கி ஓய்வோம்;
முல்லையாய்ப் பொழுதும் பூக்கும், முனைந்துநாம் பிறப்போம் மீண்டும்;
அல்லுடன் பகலு மாக அடுத்தடுத் தமையும் வாழ்க்கை (17)

வந்தது நான்காம் நாளும், வருகையில் குயிலும் மெல்ல
முந்தைய வாழ்வைப் பற்றி மொழிந்தது மனிதன் காதில்;
விந்தைதான், காதல் வெப்பில் உருகியே குறைகள் நீங்கும்;
சிந்தையில் சேர்தல் ஒன்றே தேவையென் றாகிப் போகும் (18)

நான்கெனும் கணக்கேன் தேவை? நம்மனம் நினைத்துப் பார்க்கும்;
நான்முறை வருணம் தன்னை நயமுடன் சொல்கின் றானோ?
வான்மணின் ஊடே ஓடி வாழ்ந்திடும் வாழ்வும் நான்கோ?
ஏன், மனத் தோற்றம் கூட இருப்பது நான்காய்த் தானே? (19)

ஆய்ந்திடின் கோடி உண்மை அளித்திடும் குயிலின் பாட்டு;
தோய்தமிழ்ச் சான்றோர் என்பா சொலும்பிழை பொறுக்க வேண்டும்;
பாய்மரம் காற்றின் போக்கில் பாய்ந்திடும் அன்றோ? அஃதாய்
சேய்கவி என்றன் எண்ணம் சென்றவா றெழுந்த திப்பா (20)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *