நான் அறிந்த சிலம்பு – 140
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
புகாரில் நிகழ்ந்தவற்றைக் கௌசிகன் அறிவித்தல்
கௌசிகன் புகார் நகரில் கோவலன் பிரிவால்
வருத்தத்தில் இருப்பவர்கள் பற்றிப் பேச வந்த
தன் கொள்கையுடன் பேசத் தொடங்கினான்.
“கோவலன் நகரை விட்டு நீங்கியதால்
பெருவாணிகனாம் கோவலன் தகப்பன் மாசாத்துவானும்
அவன் தம் இல்லக்கிழத்தியும்
அரிய மணியைக் கிடைக்கப்பெற்ற நாகம்
அதை இழந்ததைப் போல வருந்துகின்றனர்.
இனிய உயிரை நீத்த உடல் போல
சுற்றத்தார் எல்லாம் செயலற்றுப் போய்த்
துன்பக்கடலில் வீழ்ந்தனர்.
‘நான்கு திசைகளிலும் சென்று கோவலனைத் தேடுக’ என
ஏவலர்க்கிட்ட பணியின் பொருட்டு
அவர்கள் உன்னைத் தேடிச்சென்றுள்ளனர்.
‘தந்தை தந்த பணியைச் செய்வதே மேலானது
அவ்வாறு அன்றி அரசாள்வது இழிந்தது’ என்று
அரசு துறந்து கொடுமையான காட்டுக்குச் சென்ற
இராமனைப் பிரிந்த அயோத்தி மக்கள் போலப்
புகார் மக்களும் உன்னைப் பிரிந்து
பெருந்துயர் அடைந்துள்ளனர்.
நீ பிரிந்ததையும் உன் வீட்டில் நிகழ்ந்ததையும்
தன் திருமுகம் மறுத்ததையும்
வசந்தமாலை மூலம் கேட்டுத் தெரிந்து கொண்ட மாதவி
பசலையுற்ற மேனியளாய் நினைவுகளால் நோயுற்று
உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடம் தன்னில்
உன்னை நினைத்தபடியே
ஒரு பள்ளியறைப்படுக்கையில் வீழ்ந்தாள்.
துயருற்றுத் தனித்திருந்த
மாதவியைக்காண நான் சென்றேன்.
என்னிடம் அவள்,
‘உன் திருவடி தொழுது நிற்கிறேன்.
என் துயரம் நீக்குவாயாக’ என வேண்டினாள்.
‘என் கண்ணின் கருமணி போன்றவனுக்கு
இதைக் காட்டுவாயாக’ என்று கூறித்
தம் மலர்க்கரங்களால் எழுதிய
மடல் ஒன்றைத் தந்தாள்.
அம்மடலை மண் இலச்சினையிட்டுத்
தன் கூந்தலால் ஒற்றி என்னிடம் தந்தாள்.
அவள் தந்த அந்த ஓலையை எடுத்துக்கொண்டு
பல வழிகளில் அலைந்து திரிந்து
இப்போதுதான் நான் உன்னைக் கண்டேன்” என்று
கௌசிகன் கோவலனிடம்
நடந்தேறிய நிகழ்வுகளை நடந்தவாறே கூறினான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 79
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–
படத்துக்கு நன்றி: கூகுள்
Good