ஒரு குடைக்கீழ்
இசைக்கவி ரமணன்
மழையின் இழைகள் ஒன்றுக்கொன்று
பேசிக்கொண்ட ரகசியங்களை
மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மரங்கள்
இலைகளின் நுனிவரை எழுதிவைத்துக் கொண்டன
நனைந்த இரவின் கருத்த தெருவில்
அளைந்த கால்களுடன்
பிணைந்த விரல்களுடன்
இணைந்து ஒசிந்த தேகங்களுடன்
இடையறாத தாகங்களுடன்
நீயும் நானும்
ஒரு குடைக்கீழ் கலந்த
இரண்டு இதயங்களின்
கொஞ்சலில் கொஞ்சம்
உறக்கம் கலைந்து துணுக்குற்றன
ஒற்றைக் காலில் கண்களை இறுக
மூடி நின்ற மைனாக்கள்
இங்குமங்கும் பார்த்த மரங்கள்
இனிமேல் தாங்க முடியாதென்று
இவர்கள்தான் சரியென்று
இலைகளிலிருந்து ரகசியங்களை
மல்லிகை மொட்டுக்கள் போல்
குடையின் மீது கவிழ்த்தன
ஒன்றிரண்டு மஞ்சள் மலர்களும்
ஒட்டிக்கொண்டுதான் வந்தன
குடைக்குக் கீழே நமது ரகசியங்கள்
குடைக்கு மேலே மழையின்
மரம்நனைந்த இலைசுமந்த ரகசியங்கள்
ரகசியங்களும் ரகசியங்களும்
சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
நீயும் நானும் சந்தித்தது போல்தான்
இருக்குமென்று பேசிக்கொண்டார்கள்
பாதி நிலா பளபளக்கும்
பாதையோரக் குளக்கரை அருகே
பாதிக் கலவியில் நம்மைப் பார்த்துப்
பதறி வியந்த கந்தர்வர்கள்
இரண்டில் ஒன்றாய்
ஒன்றே இரண்டிலுமாய்
மாறாமல் மாறி மாறி
மாயமாய்
அருமையான கவிதை ரமணா! அதுவும் அந்தப் பாதிக் கலவியி பார்த்துப் பதறி வியந்த கந்தர்வர்கள்….. ஓ, பதறிக்குத் தான் துட்டு! இளமையும், முதுமையும் ஒரே குடைக்கீழ் ……! கவிதை மழைக்குக் கொண்டாட்டம்தான்!
மழையின் இழைகளோடு காதல் மழையும் இழையும் கவிதை!