நான் அறிந்த சிலம்பு – 144
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
முந்தைய நாளில் போல, மூவரும் இரவில் வழிநடத்தல்
கோவலனும் கண்ணகியும்
முந்தைய நாட்களைப் போலவே
கவுந்தியடிகளுடன்
அன்றும் பகல் பொழுதை
அந்தணர் வாழும் அப்பகுதியில் கழித்துவிட்டு
இரவில் மீண்டும் புறப்பட்டனர்.
வைகறைப்போதில் மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல்
அரிய தொழிலாகிய அழிக்கும் தொழிலை
மேற்கொண்ட சிவபெருமான் கோயிலிலும்
பெரும்புகழ் வாய்ந்த
பாண்டியமன்னனின் அரண்மனையிலும்
பல்வகைச் சிறப்புகளையும் உடைய முரசு
சிறப்பாக ஒலித்தது.
நான்குமறைகளையும் பயின்ற
அந்தணர் ஓதுகின்ற ஒலியும்,
மாதவ முனிவர்கள் ஓதும்
மந்திரத்தின் ஒலியும்,
வெற்றியிலிருந்து மீளாத
அரசனின் சிறப்பினை வாழ்த்திப்பாடும்
வாள்வீரர் அதிகாலையில் எடுத்து முழக்கிய
முரசின் ஒலியும்,
போரில் பகைவரை வென்று
கவர்ந்து வந்த போர்யானை முழக்கமும்,
காட்டில் பிடித்துக் கொண்டுவந்த
காட்டு யானையின் முழக்கமும்,
லாயங்களில் நிற்கும் குதிரைகளின்
கனைப்பு ஒலியும்,
வைகறையில் கிணைப்பறையுடன்
மள்ளர் கொட்டுகின்ற பறையொலியும்
அவர்கள் மன்னனை வாழ்த்திப்
பாடும் பாடல்களின் ஒலியும் ஒலித்து நின்றன.
மகிழ்ச்சி பொருந்திய மதுரைக்கண்
ஒலித்த ஒலிகள்
கருங்கடல் ஒலிகள் போலவே
ஓங்கி ஒலித்ததால்
இதைக் கேட்ட அவர்கள்
தம் வருத்தமெல்லாம் நீங்கி
வையை ஆற்றை அடைந்தனர்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–
படத்துக்கு நன்றி:
http://www.ourjaffna.com