‘இல்லை’ இல்லை இனி…
-செண்பக ஜெகதீசன்
வையத்தின் கதையிதுதான்,
வைத்துக்கொள் மனதினிலே…
மலர்ந்த மலர்களெல்லாம்
மணப்பதில்லை,
மலர்ந்து மடிந்து
உதிர்ந்தவையெல்லாம்
உருவாக்கவில்லை
காயை, கனியை, விதையை…
மந்தை மந்தையாய் வந்த
மேகக் கூட்டமெல்லாம்
மழையைப் பொழியவில்லை…
கடலடியில் காணும்
கணக்கில்லாச் சிப்பியெல்லாம்
கொண்டதில்லை முத்தைத் தம்மில்…
கழனி விளையும்
நெல்மணியெல்லாம்
நல்மணியாய் ஆவதில்லை…
இந்த
’இல்லை’யென்பது வேண்டாம்
இனிய மனிதனே உன் வாழ்வில்,
இருக்கும் நாளில்
எதையாவது செய்திடு உருப்படியாய்,
இதை
ஏற்றுக்கொண்டிடு கருத்தினிலே…!