நாகர்கள் 3
விசாலம்
“நாகரின் அகாமி பிரிவில் இருக்கும் ஆண்மகனின் திருமணம் நிச்சயமானவுடன் பெண்வீட்டில் விருந்து தடபுடலாக இருக்குமாம். அன்று மாலை மணமகன் வீட்டிற்கு பெண் செல்வாள். அங்கு படுத்தாலும் தனித்தனியான அறையில் தான் இருப்பார்கள். மூன்று நாட்கள் இது போல் கழியும் மறு நாள் அவர்கள் வயலுக்கு சேர்ந்து போக வேண்டும். இதே போல் ஒரு பத்து நாட்கள் போகும். பின் அவர்களது பூஜாரி அவர்கள் விருப்பத்தைக்கேட்டு அவர்கள் சேர அனுமதிப்பார். ஆனால் எங்களது இன்னொரு பிரிவான ஆவோஸில் இது கொஞ்சம் மாறுபடும். நிச்சயதார்த்தம் பிறகு அவர்கள் இருபது நாட்கள் வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அதில் நிறைய லாபம் கிடைத்தால் திருமணம் நடக்கும். லாப நஷ்டமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நஷ்டம் ஆனால் திருமணம் முறிந்து விடும்”
“அடப்பாவமே. இப்படியும் ஒரு பரீட்சையா?”
“ஆமாம். ஆனால் ஆரம்பத்திலேயே எங்களுக்கு பொருட்கள் தயாரித்தல் அதை விற்று சம்பாதித்தல் போன்றவைகள் சொல்லிக்கொடுத்து விடுவதால் இது போல் பரிக்ஷையை சமாளிக்க முடிகிறது.”
“காலம் மாறி வருவதால் உங்கள் எண்ணங்களிலும் மாற்றம் தெரிகிறதா?”
“ஆம் நிறைய. இப்போதெல்லாம் அங்காமி பிரிவுகளில் காதலிப்பது சகஜமாகி வருகிறது. பெண்கள் காதலிக்கலாம், பழகலாம்; ஆனால் வரம்புக்கு மீறி போகக்கூடாது. இதற்கென்று காவல் காக்க சிலர் இருப்பார்கள். ஏனென்றால் பெண் திருமணம் போது பெண்ணிற்கு பணம் சொத்து அதிகமாக வரும். ஆனால் அவள் பெயர் கெட்டுப்போனால் பாதி பணம் கூட வராது. இது போன்ற நிலைமை ஏற்பட்டால் பெண்வீட்டார் அந்த தவறுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டி வரும்.”
“உங்களில் சில சிறு வயது பெண்கள் மொட்டை அடித்துக்கொள்ள எதாவது காரணம் உண்டா ரீமா?’
“ஆம் இருக்கிறது. பெண்கள் இங்கே நல்ல சிவப்பாக அழகாக இருப்பார்கள். அவர்களது அடர்த்தியான முடி அவரது அழகை மேலும் கூட்டும். அதனால் அவர்களது கல்யாண வயது வரை அவர்களது முடியை எடுத்துவிடுகிறார்கள். இதனால் ஆண்களுடன் சேரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று குடும்பத்தார் எண்ணுகின்றனர். கோன்யாக் என்ற பிரிவு மட்டும் இதில் விதிவிலக்கு. பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் திருமணம் முன் காதலும் செய்யலாம். சேர்ந்தும் இருக்கலாம்.”
“ரொம்ப நன்றி ரீமா. உன்னிடமிருந்து பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன். கலாசாரம் வித்தியாசமானாலும் எல்லா
ஜாதிகளிலும் ஒன்று பொதுவாக பார்க்கிறேன் அதுதான் ஆண் ஆதிக்கம். பெண் என்றால் உழைக்க வேண்டும், சுதந்திரத்தை விட்டு
தன் குடும்பத்திற்காகவே வாழ வேண்டும். தாயாக வேண்டும்.
பின் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்து கடைசியில் மடிய வேண்டும்
என்ற நிலைமை தான்.”
“இல்லை மேடம். கொஞ்ச வருடங்களாக எங்கள் ஜாதியிலும் நிறைய மாற்றம் வந்திருக்கிறது. நாகரிகம் வலுத்திருக்கிறது. பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது . கூட்டுக்குடும்பம் பிரிந்து, தனிக்குடும்பமாக ஆகிவருகிறது. நிறைய பேர் படிக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். பேஷனில் ஆர்வம் காட்டுகின்றனர்.”
“ஆம். நானும் இதைப்பார்த்து வருகிறேன். பொதுவாகவே இந்தக்கால இளைஞர்கள் மனைவிக்கு சம உரிமையும் கொடுத்து வீட்டு வேலைகளிலும் உதவுகின்றனர். இது எல்லா நகரங்களிலும் பார்க்க முடிகிறது. மேலும் பெண்கள் எல்லா துறைகளிலும் மேன்மையாக உழைத்து நல்ல பேர் எடுக்கின்றனர். இதைப்பார்க்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எத்தனைப்பிரிவு இருந்தாலும் கலாச்சாரம் எத்தனை வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரு தாய்க்கு பிறந்த குழந்தைகள் தான். நாம் பாரத வாசி. நாம் இந்தியன் என்ற உணர்வு வந்தால் நம் நாடு எங்கேயோ போய்விடும். நன்றி ரீமா.”
ரீமா கை அசைத்தபடியே விடைப்பெற்றுக்கொண்டாள்.