இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள் !
வாரங்களா? நொடிகளா? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.
டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர், “அண்ணன்” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.
அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.
சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்ருக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.
அவராது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.
சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.
“தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.
தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” “காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.
ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.
செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கலியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்”அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அஎஉம்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்லைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.
அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.
இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே “அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்கு தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.
இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்4களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் செநெர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை ,செந்தில் தியாகராஜன்” ஆகொயோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.
செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க”சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா?
மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.
இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.
அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?
ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.
ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது “அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.
மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்