சு.கோதண்டராமன்.

முரண்பாடான கருத்துகள்

 

Five_great_Yagnas

 

சென்ற பகுதிகளில் யக்ஞம் பற்றிக் கூறப்பட்டவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

தேவர்களைக் குறித்து அக்னியில் ஆகுதி செய்வது தான் யக்ஞம். இதனால் தேவர்கள் மகிழ்கிறார்கள். இது உணவு, சந்ததி, ஆயுள் முதலான எல்லா நலன்களையும் தரும். இதுவே உலகின் மையப்புள்ளி. யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று சொல்லப்பட்டது.

ஆகுதி மட்டுமே யக்ஞம் ஆகாது. பிரார்த்தனை இல்லாமல் யக்ஞம் பயனில்லை. ஆனால் யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மட்டுமே பலன் தரும் என்ற கூறப்படுவதைப் பார்த்தோம்.

இதற்கு மாறாக, வெறும் தோத்திரங்கள் பலன் தரா, ஹவிஸும் அவசியம் என்றும் கூறுகிறது வேதம். (8.9.6)

யக்ஞம் செய்தால் மட்டும் போதாது, கடுமையாக உழைக்கவும் வேண்டும். பிறர் நலனுக்காகச் செய்யப்படும் அருஞ்செயலான சமீகள் யக்ஞத்தை விட மேலானவை. யக்ஞம் செய்யாதவருக்கும், சமீகள் தேவ பதவியைக்கூடப் பெற்றுத் தரும் என்று சொல்லப்பட்டிருப்பதையும் பார்த்தோம்.

இப்படி ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் காணப்படுவதால் குழப்பமே ஏற்படும். வேதத்தில் ஏன் இப்படிக் குழப்பம்? அதனுடைய உண்மையான நிலை என்ன? தீ மூட்டி வழிபாடு செய்வதா, வேண்டாமா? ஆராய்வோம்.

வேதத்தில் இருவகையான எண்ண ஓட்டங்கள் காணப்படுவது உண்மை. சடங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மந்திரங்களும் உள்ளன. சடங்கை விட பக்தி மனோபாவம், உழைப்பு இவைதான் முக்கியம் என்று கூறும் மந்திரங்களும் உள்ளன.

வெவ்வேறு ரிஷிகள் வெவ்வேறு விதமாகப் பேசினால் இது அந்தந்த ரிஷியின் கருத்து என்று விட்டுவிடலாம். ஒரே ரிஷியின் பெயரால் வழங்கும் சூக்தத்திலேயே இருவகைக் கருத்துகளும் வரும்போது அதற்குக் காரணம் என்ன என்று ஆராயத் தோன்றுகிறது.

வேதம் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ரிஷிகளால் இயற்றப்பட்டது, வியாசரால் தொகுக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

வேத இலக்கியத்தின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். ரிக் வேதத்திலும் அதன் ஆறாவது மண்டலம் மிகப் பழமையானது. இந்த ஆறாவது மண்டலம் இயற்றப்படுவதற்கு முன்பும் மக்கள் இருந்தார்கள். நாகரிகம் இருந்தது. மொழி இருந்தது. அதற்கு ஒரு இலக்கணம் இருந்தது. இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். யாப்பிலக்கணமும் இருந்தது. சந்தஸ்கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

இவ்வளவு வளர்ச்சி பெற்ற மக்களிடம் கடவுள் பற்றிய ஏதோ ஒரு கோட்பாடும் இருந்திருக்க வேண்டும். அக்னியையும் இந்திரனையும் வேத ரிஷிகள் புதிதாகக் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. முன்பே அந்தத் தேவர்களும் இருந்தார்கள், அவர்களுக்கான ஏதோ ஒரு வழிபாட்டு முறையும் இருந்திருக்கிறது.

வேத ரிஷிகள் இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். ரிஷிகளின் வாக்கில் “நாம் ஒரு புதிய பிரார்த்தனை படைப்போம்” என்ற கருத்து அடிக்கடி காணப்படுகிறது. (6.17.13, 6.18.15) அப்படிப் புதிய பிரார்த்தனை புதிய கருத்துகளுடன் படைக்கும்போது அவர்கள் பழைய கருத்துகளுடன் மோதவில்லை, தவறு என்று ஒதுக்கவில்லை. நான் சொல்வது மட்டுமே உண்மை என்று கூறாமல், ஒரே உண்மையைப் பலர் பலவிதமாகக் காண முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு பழைய கருத்துகளையும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒரே மந்திரம் வெவ்வேறு ரிஷிகளின் பெயரால் வழங்கப்படுகிறது. (உ-ம் 1.23.20 – 10.72.2) இதிலிருந்து பழைய ரிஷிகளின் மந்திரங்கள் பிற்காலத்தவரால் தங்கள் புதிய படைப்புகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று நாம் அறிகிறோம்.

ஒன்று உள்ளது. அதைப் பலரும் பல விதமாகப் போற்றுகிறார்கள் என்பது அவர்கள் கொள்கை. (1.164.46) எனவே பழைய கருத்துகளை அலட்சியம் செய்யாமல் அதையும் சேர்த்துக் கொண்டு புதியதும் படைக்கிறார்கள். இதுதான் இந்த இரு வகையான வேறுபட்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணம்.

தீ மூட்டி வழிபடுவது பழைய வழக்கமாக இருக்கக் கூடும். புதிய ரிஷிகள் அதைக் கண்டிக்கவில்லை. அத்துடன் கூடத் தங்கள் கருத்துகளையும் சொல்கிறார்கள். யக்ஞத்தை விட சமீ மேலானது, யக்ஞம் மட்டும் போதாது, உழைக்கவும் வேண்டும், ஆகுதி மட்டுமே யக்ஞத்தை முழுமை ஆக்காது, பிரார்த்தனையும் நமஸ்காரமும் புத்தியும் அவசியம் என்று வருபவை தாம் அந்தப் புதிய கருத்துகள்.

புதிய கருத்துகளைத் தனி அத்தியாயமாகப் பிரித்து வைக்காமல் ஒரே சூக்தத்திலேயே முந்திய ரிஷிகள் செய்த பழைய பாடல்களையும் போற்றுகிறார்கள், புதிய கருத்துகளையும் சொல்கிறார்கள். பிறருடன் முரண்படாமல் தன் கருத்தைக் கூறும் இந்த முறை ரிக் வேதத்தின் சிறப்பு.

இதை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? எப்பொழுதும் எந்தப் புதிய கருத்துக்கும் வரவேற்பு இருப்பதும் எதிர்ப்பு இருப்பதும் இயற்கை. அது போல, ரிக் வேத ரிஷிகளின் இந்தப் புதுமைகளைச் சிலர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். சிலர் புறக்கணித்துப் பழைய முறைகளையே அனுசரித்து இருக்கக் கூடும். அவரவர் இஷ்டம் போல் வழிபடலாம் என்ற சுதந்திரம் இருந்ததால் இந்த இரு சாராரிடையே பிணக்குகள் பிளவுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அதே வேதத்தைப் பின்பற்றி வந்தனர்.

நாளடைவில் பழைய சடங்குக் கட்சியினரின் கை ஓங்கியிருக்க வேண்டும். அவர்கள் ரிக் வேத மந்திரங்களில் பலவற்றை வேள்விக்குப் பயன்படும் வகையில் ஆங்காங்கு மாற்றிக் கொண்டனர். அதில் வேள்வியை வலியுறுத்தும் பல புதிய மந்திரங்களையும் சேர்த்துக் கொண்டனர். தங்கள் சந்ததியினருக்கு அதை மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். இந்தப் புதிய தொகுப்பு யஜுர் வேதம் (வேள்விக்கான வேதம்) என்று பெயரிடப்பட்டது.

யஜுர்வேதத்தில் பிரார்த்தனையை விட, மனோபாவத்தை விட அக்னியில் செய்யப்படும் ஆகுதிச் சடங்குக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாக குண்டம் எப்படி அமைய வேண்டும், எத்தனை செங்கற்கள் அடுக்கப்பட வேண்டும், ஹவிஸ்ஸாக என்னென்ன பொருள் சமர்ப்பிக்கப்பட வேண்டும், அப்பொழுது என்ன மந்திரம் சொல்லப்பட வேண்டும் என்பது பற்றிய தகவல்களே மிகுதியாகக் கொண்டது யஜுர்வேதம். பிராமண இலக்கியங்களில் இது மேலும் விரிவடைந்தது. இவை வேத மந்திரங்களின் பொருளை யாகத்திற்குப் பயன்படும் வகையில் விளக்கின.

யாகங்கள் மிகுதியாகப் பெருகியதால் இவை சாமானிய மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக ஆயின. அந்நிலையில் தான் யாக முறைகளைக் கண்டிக்கும் புத்த சமண சமயங்கள் தோன்றின. யாகங்களுக்குப் புதிய தத்துவ விளக்கம் தந்து அவற்றை மறைமுகமாக எதிர்க்கும் உபநிடதங்கள் தோன்றின.

இந்திரனைத் துதிக்கும்போது நீயே முதல் தெய்வம் என்று கூறுவதும் அவ்வாறே அக்னியைப் போற்றும்போது நீயே பரம்பொருள் என்று பேசுவதும் முரண்பாடு போல நமக்குத் தோன்றும். ஆனால் அவை முரண்பாடு அல்ல, எப்பெயரிட்டு அழைத்தாலும் தெய்வம் ஒன்று என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்டது என்பதை முன்பு பார்த்தோம்.

அதே போல யக்ஞம் செய்து வழிபடுவதும் யக்ஞம் செய்யாமல் வழிபடுவதும் இரண்டுமே ஒன்றுதான். வழிபாடு தான் முக்கியமே தவிர, முறை முக்கியம் அல்ல என்பதே வேதத்தின் கருத்து.

 

 

 

படம் உதவி: விக்கிபீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 36

  1. கடைசியில் கர்ம யோகத்தையே வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *