கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

0

நா. கணேசன்

அலைத்தல் என்ற வினைச்சொல்லை விரிவாக்கி அலங்கு/அலக்கு என்ற சோடிச்சொற்கள் தோன்றியுள்ளன.

இதுபோன்ற தன்வினை/பிறவினைத் தொகுதிகள் தமிழில் மிகப் பல:

(1) உலங்கு/உலக்கு < உலை-,
(2) வணங்கு/வணக்கு < வளை-,
(3) திரங்கு/திரக்கு < திரை-, (திரக்கு = crunch time)
(4) அணங்கு/அணக்கு (= அணுங்கு/அணுக்கு) < அழு-/அணு-
அணு என்னும் பெயர்ச்சொல் வடமொழிக்கு த்ராவிடமொழி தந்தது.

அழுங்கல் = அணுங்கல். (கிறித்துவநூல்களில் ஒன்று, கித்தேரியம்மாள் அழுங்கல் அந்தாதி).
அணுங்கு (அ) அழுங்கு = Indian pangolin http://en.wikipedia.org/wiki/Indian_pangolin
அணங்கு/அணுங்கு – வருத்துவது. சங்கத் தமிழர் சமயம் அரசன் – பெண் – தலித் என்னும் மும்முனைகளைக் (triad) கொண்டது. சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு மிக முக்கியமான சொல்லான அணங்கு இந்த மும்முனைக் கோட்பாட்டுடன் இயங்கியுள்ளது. காலப்போக்கில் அந்தணன் என்ற தமிழ்ச்சொல் அடையும் மாற்றங்கள் ஹிந்து சமயத்தின் வளர்ச்சியை ஆராயப் பயன்படும்.

(5) விடங்கு/விடக்கு < விடை- (விடைத்தல், விறைத்தல். விதை/விரை). விடங்கர் (> இடங்கர்) என்ற சொல் சிந்து-கங்கை முதலைக்கும், சிவனுக்கும் ஆதல்பற்றி கட்டுரைகள் அச்சாகியுள்ளன. விடங்கர்/விடக்கர் > இடங்கர்/இடக்கர் சொற்றொகுதி இந்தியாவில் இலிங்க வழிபாட்டின் தோற்றுவாய், காமனுக்கு விடங்கர் (மகரம்) துவஜம் என்பன பற்றி அறிய உதவுவன.

(6) கலங்கு/கலக்கு < கலை-
….

அலங்கல் = அலங்குதல் = அசைதல். எனவே,அலங்கல் மாலை, அலங்கல் கோதை, அலங்கல் தொடலை, அலங்கல் கண்ணி, … என்றெல்லாம் இலக்கியத்தில் மாலையை வருணிப்பது அலங்கல் = அசைதல் என்பதால்தான். “அலங்கல் மாலை” = அசையும் மாலை. சீவக சிந்தாமணி: ’பிறங்கு இணர் அலங்கல் மாலை – விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை’. அலங்கல் = அலங்குதல் என்னும் தொழிலால் பிறக்கும் பெயர்ச்சொல். அசையும் மாலை எனப் பொருள். அழகர் அந்தாதி, அரங்கத்தந்தாதி உரைகளில் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியர் விளக்கியுள்ளார்கள்: ”அலங்கல் – தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் – கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.” அலைக்கும் தொழிலால் அலங்கல் என்பதே மாலைக்கு ஒரு தொழிலாகுபெயர் ஆகிவிட்டது. ஏராளமான இடங்களில் ’அலங்கல் மார்பன்’ என்றிருக்கும். மாலையுடைய மார்பன் என்று அங்கே பொருள்.

அலங்கல் = அசைதல், சில சங்ககால உதாரணங்கள்:
(I) அகநானூறு 262-ஆம் பாடல் பார்ப்போம்
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=262&y=195&bk=82&z=l1270634.htm

அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு 25

23-7. பரு அரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்என – பருத்த அரையிற் கிளைத்த அசையும் அழகிய கிளையிலுள்ள தன் கூடு பொலிவற்றொழிய, புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு – தான் பெயர்ந்து போக எண்ணிய புலத்தடத்துப் பறவை புறப்பட்டுச் சென்றாற் போல,

(II) குறுந்தொகை 76:

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=76
”சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை”

(ப-ரை.) தோழி—, சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை

(III) குறுந்தொகை 79:
”பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை யேறி ”
பொரிதாள் ஓமை – பொரிந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை – காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி

(IV) சிலம்பில் போகிய செம்முக வாழை அலங்கல் அம்தோடு, அசைவளி உறுதொறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் நல்வரை நாடனொடு … (அகநானூறு 302)

சிலம்பில் போகிய செம்முக வாழை – மலையில் நீண்ட வளர்ந்த செவ்வாழையின், அலங்கல் அம் தோடு – அசையும் அழகிய இலைகள்

—————-

அசையும் தொழிலால் அலங்கல் = மாலை. இதே போல, நெற்கதிர் முற்றிக் காற்றில் அசைதலால் அலங்கல் = நெற்கதிர் என்று அகநானூற்றில் காண்கிறோம்:
”கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் ”- வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்,

சென்னைப் பேரகராதி:
அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

அலங்கல் என்னும் சொல்லுக்கு இப் பொருள்களுடன் குதிரையின் அலங்கு உளை (= பிடரிமயிர்) என்றும் சேர்த்தலாம். இப்பொருளில் கம்பர் பாடியிருக்கிறார்.
ஆயிரம் தேரை, ஆடல் ஆனையை, அலங்கல் மாவை,
ஆயிரம் தலையை, ஆழிப் படைகளை, அறுத்தும், அப்பால் .

கடுமையான போர் நடக்கிறது. அப்போது மாலை அணிந்து குதிரைகள் இருக்கமாட்டா. போரின் உச்சகட்ட வேகத்தைக் காட்ட குதிரைகளின் பிடரி மயிர் அசைதலைப் பாடுகிறான் கம்பன். புரவிகளுக்கு அழகே பிடரியில் அலங்கும் மயிர் உளை தான். இதனைச் சங்க காலத்திலிருந்து எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன. அலங்கல் மா = அலங்கு உளைப் புரவிகள்.

“அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த ஆய்கரும்பின் கொடிக்கூரை”- புறநானூறு. எனவே, அலங்கல் = அசைகிற நெற்கதிர் என்று சங்க இலக்கியங்களில் பாடப்படுகிறது. அதுபோல, அலங்கு மயிர்ப் புரவி என்று பற்பல பாடல்களில் உள்ளதால், ’அலங்கல் மா’ என்பதற்கான பொருள் ’அலங்கு உளை (பிடரிமயிர்) கொண்ட குதிரை’ என்றால் சாலவும் பொருத்தமாய் அமையும்.

ahor

​குதிரையின் ராஜலக்ஷணங்களில் ஒன்று: அலங்கு உளை (பிடரிமயிர்) அலங்கல் மா = mane of horse. அழகான குதிரைகளும், அதன் அலங்கல்களும் (mane) இங்கே பாருங்கள்:

https://www.google.com/search?espv=2&biw=1280&bih=923&tbm=isch&sa=1&q=mane+of+a+horse&oq=mane+of+a+horse&gs_l=img.3..0.2896.9197.0.9440.19.14.0.5.5.0.49.546.13.13.0.msedr…0…1c.1.60.img..1.18.545.3G92PrhubG8

​அலங்கு செந்நெல் கதிரை அலங்கல் என்றே சொல்கிறது சங்க இலக்கியம். அலங்கும் காந்தளை அலங்காந்தள் என்பது கலித்தொகை. தோளிலே அலங்கும் மலர்மாலையை அலங்கல் என ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழ் குறிக்கிறது. தமிழனின் வாழ்க்கையில் ஒவ்வொரு மலருக்கும் ஒரு code உண்டு, வாகை என்றால் வெற்றி, உழிஞை என்றால் போர், … Flower semiotics and symbolism தமிழிலே பெரிது. வடமொழிக்கு உள்ளுறையும், இறைச்சியும் தொனி என்ற கோட்பாடாகக் கொடுத்த மொழி தமிழ்.

ahorse

அலங்கு உளை (பிடரிமயிர்) = அலங்கல்
குதிரைகளின் அலங்கல் உளையை/பிடரிமயிரை விவரிக்கும் இலக்கிய வரிகள் சில:

(1)
”அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ” (புறநானூறு 2):
http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=2&file=l1281a16

(2) ”குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி” (அகநானூறு 4)
http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=13&y=16&bk=4&z=l1270949.htm

(3) ”நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்.
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி” (புறநா. 4).

(4) ”அலங்கு உளை அணி இவுளி
நலங் கிள்ளி நசைப் பொருநரேம்” (புறநானூறு 382)
http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=382&file=l12806c4.htm

(5) கந்தபுராணம்:
மாறு இலா அருக்கன் நாப்பண் வைகிய பரமனே போல்
ஆறு மா முகத்து வள்ளல் அலங்கு உளைப் புரவி மான் தேர்
ஏறினான் வீரவாகு இலக்கரோடு எண்மர் ஆகும்

(5) கொங்குவேளிர் பெருங்கதை:
அலங்குமயிர் எருத்தின்
வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்துக்
அசையாநின்ற மயிரினையுடைய பிடரியினை உடையதொரு சிறந்த புரவியைப் பண்ணுறுத்தி வாய்க்கயிறிட்டுக் கட்டி .

(6) பெருங்கதை:

http://www.tamilvu.org/slet/l3600/l3600son.jsp?subid=3613

உதயண குமரன் உரிமை தழீஇ
35 அடல்பேர் யானையும் அலங்குமயிர்ப் புரவியும்
படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
நடைத்தேர் ஒழுக்கும் நற்கோட்டு ஊர்தியும்
இடைப்படப் பிறவும் இயைந்தகம் பெய்து

“அடல்பேர் யானையும், அலங்குமயிர்ப் புரவியும்” எனக் கொங்குவேள் சொல்வதை
சில நூற்றாண்டுகள் சென்றபின் கம்பர் “ஆடல் ஆனையை, அலங்கல் மாவை” என்கிறார்.

alion

கம்பன் வழியில் ஆண் சிங்கத்தை “அலங்கல் அரிமா” எனலாம்.

நா. கணேசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *