இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (137)
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அவசரமாக ஓடி மறையும் 2014 இலிருந்து பொலிவுடன் புலரும் 2015க்குள் நுழையும் வேளையில் இவ்வருடத்திற்கான முதலாவது மடலுடன் உங்களுடன் உறவாட விளைகிறேன்.
எத்தனையோ நிகழ்வுகள் சில மகிழ்ச்சியானவை சில துயரமானவை, சில வியப்பானவை, சில விசித்திரமானவை ஆனால் அனைத்தும் நடந்து முடிந்தவையே.
முடிந்தவைகளுக்குள் எம் மனதைப் புதைத்து அழுந்திக் கிடப்பதை விடுத்து நடந்தவைகளை நல் அனுபவங்களாக்கி அதன் அடிப்படையில் புதிய வருடத்தினுள் புது உணர்ச்சியுடன் , புது வேகத்துடன் செயற்பட எனது அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்.
பிறக்கும் 2015 அனுபவங்களையும் அவ்வனுபங்களின் அடிப்படையிலமைந்த வெற்றிகளையும் அனைத்து சகோதர சகோதரிகளும் உறவுகளும் அடைய அனைவர்க்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறேன்.
மறைந்து போகும் ஆண்டில்
நிறைந்து கிடைத்த அனுபவங்கள்
பிறக்கும் புதிய ஆண்டில்
சிறக்கும் வழிகள் தந்திடும்
மனிதம் என்றொரு வாழ்வில்
புனிதம் வேண்டி நடத்திடும்
கணிதம் ஒன்று கண்டிட்டால்
காலம் கனிந்து உயர்த்திடும்
அவலங்கள் பலவும் நிகழ்ந்தாலும்
அனைத்தையும் தாங்கிடும் மனதால்
கரைந்திடும் கவலைகள் யாவுமே
சுரந்திடும் இன்பங்கள் வாழ்விலே
உழைத்திடும் தோழர்கள் ஏக்கங்கள்
பிறந்திடும் வருடத்தில் மாறட்டும்
பெருகட்டும் மானிட உணர்வுகள்
மருகட்டும் சுயநல போக்குகள்
வளர்ந்திடும் இளைய தலைமுறை
புலர்ந்திடும் வருடத்தில் பொலிவுடன்
களையட்டும் சமுதாய கறைகளை
பொலியட்டும் புதுவழி ஆக்கங்கள்
நெஞ்சம் நிறைந்திடும் வாழ்த்துக்கள்
அள்ளித் தெளிக்கிறேன் உங்களுக்கே
இலட்சியக் கனவுகள் அனைத்தும்
அடைந்து சிறப்புற வாழ்ந்திடவே
புதுவருட வாழ்த்துக்கள்
வாழ்க ! வாழ்க ! வாழியவே !
அன்புடன்
மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை
சக்தி சக்திதாசன் குடும்பம்