தாயே சரணம்
இசைக்கவி ரமணன்
விசைத்துநிற்கும் சூலம் வியந்தடங்கும் காலம்
விரல்கள்பத்தும் தங்கம் நகங்கள் வெள்ளிமின்னும்
இசைக்குளே ஸ்வரங்களாய்த் துளிர்க்கும் விந்தைக் கோலம்
இதற்குமேல் பதங்களில் அகப்படாத மாயம்
சிலிர்த்த தங்க அருவிபோலச் சிங்கமொன்றின் பிடரி
பணிந்துவென்ற வாழ்வினைப் பரப்பும் இன்பப் புலரி
புலிக்குகை புகுந்தமான் நிலைநிகர்த்த பாதம்
இகம்பரம் சுகம்துயர் இலாது நீளும் மாயம்
சினக்கணப்பி னுள்ளே புனத்துழாயின் வாசம்
தனிக்கணத்தில் வந்து தனைக்கவிழ்க்கும் நேசம்
இனிப்பிறப்பிறப்பிலாத இன்பம் மண்டும் பாதம்
அணுக்கணுப் பிளந்துபொங்கும் அந்த மந்தகாசம்
வினாக்களில் விடைகளாய் விளங்கும் ஞான வெள்ளி
விடைகளில் வினாக்களாய்க் குழப்பும் மோனக் கள்ளி
அனைத்தும்நீ எனப்பணிந்த போதொடுங்கும் புள்ளி
நினைப்பிலா வியப்பிலே தனைவழங்கும் அள்ளி
நரைவிழாத நெஞ்சம் கறைபடாத சித்தம்
மறைவிலாத காதல் மனம்விடாத போதை
குறைவிலாத வாழ்வெலாம் இவள்கொடுத்த பிச்சை
நிறைவெலாம் தகர்த்து மீறும் இவள்பதத்தின் இச்சை
அனைத்திலும் இவள்முகம் ஜனித்து நெஞ்சம் கூசும்
அகத்திலே சுகந்தமாய் அமிழ்தவார்த்தை பேசும்
இதற்குமேலும் ஏதுமில்லை என்றெழுந்த சொல்லைச்
சிதைக்கவே மனத்திலே சிலிர்த்தெழுந்த முல்லை
தலைவணங்கும் போது தனைவழங்கும் தேவி
தலைமணக்கும் தமிழின் தரம்வளர்க்கும் ஆவி
கரங்களும் ஒடுங்க கண்ணில் கங்கை வந்து பொங்க
கரைகிறேன் கரைகிறேன் உன் கால்கள் மட்டும் தங்க
தொடர்ந்துகொஞ்சும் தோழியேவுன் தோள்கள் சரணம் சரணம்
தொடர்ந்திடும் வினைவிரட்டும் வாள்கள் சரணம் சரணம்
படர்ந்தகண்கள் பட்டுவீழ்ந்த பாதம் சரணம் சரணம்
தடங்கள் தீர்த்துத் தழுவிக்கொண்ட
தாயே சரணம் சரணம்!