அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

1

  -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

Republic Day-jpg-1193

   குடியரசு மலர்ந்தாலும்
   குடிமட்டும் மறையவில்லை
   நடுஇரவில் தனியாக
   நடமாட முடியவில்லை!

   வெடிகுண்டு கலாசாரம்
   விட்டெங்கும் போகவில்லை
   நடமாடும் விபசாரம்
   நாட்டைவிட்டு அகலவில்லை!

   காந்திசொன்ன சுதந்திரத்தை
   கண்டுகொள்ள முடியவில்லை
   கள்ளத்தனம் புகுந்தெங்கும்
   கழுத்தறுத்து நிற்கிறது!

   நீதிநேர்மை எல்லாமே
   நிலைகுலைந்து நிற்கிறது
   சாதிவெறி தலைவிரித்துச்
   சதிராடி நிற்கிறது!

   ஓதிநன்கு உணர்ந்தோர்கள்
   ஒதுங்கிநிற்க முயலுகின்றார்
   உலுத்தகுண மிக்கோரே
   உயர்த்திக்கொடி  பிடிக்கின்றார்!

   நாட்டுக்காய் உழைத்தோரை
   நாம்நினைத்துப் பார்ப்பதற்கு
   நல்லதொரு சந்தர்ப்பம்
   நம்குடியரசு நாளாகும்!

   குளறுபடி அரசியலைக்
   குழிதோண்டிப் புதைத்திடுவோம்
   நலமுடைய அரசியலை
   நம்நாட்டில் அமைத்திடுவோம்!

   தனிமனித சுதந்திரத்தைச்
   சரித்திரமாய் ஆக்கிடுவோம்
   தரணிதனில் பாரதத்தைத்
   தலைநிமரச் செய்துநிற்போம்!

  பாரதிரப் பாரதத்தைப்
பார்க்கவைக்க வேண்டுமாயின்
பக்குவமாய்க் குடியரசைப்
பாதுகாத்தல் வேண்டுமன்றோ?

 போரொழிப்போம் புரட்டழிப்போம்
 பூசலெலாம் ஒழித்துநிற்போம்
வாசலெலாம் கோலமிட்டு
 வரவேற்போம் குடியரசை!

 குடியரசுநாள்  தன்னில்
கூடிநாம் சேர்ந்திருந்து
அடிமனதில் ஒழிந்திருக்கும்
அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

  1. குடியரசு தினம் பற்றி கவிபாடினாய்!
    கொடுமைகளை அகற்றிடவே வசைபாடினாய்!
    அடுக்கடுக்காய் நீ சொன்ன அனைத்திலுமே
    சத்தியமே முழுமையாகக் குடியிருந்தது!
    எத்தனைக் குறைகளிங்கே.. எதைப்பற்றி உரைப்பதிங்கே!
    சொற்களிலே ஒரு சிலம்பம் ஆடிக்காட்டினாய்!
    குடியரசு தினநாளில் கொள்ளும்சபதம்..
    மடியட்டும் இந்த குணக்கேடுகள்..
    அறவழியில் உயர்ந்துநின்று குரல்கொடுப்போம்!
    அகிம்சையதை போதித்த காந்திவழிநடப்போம்!
    பெருமைமிகு தேசத்தைக் காத்துநிற்போம்!
    உரிமையுடன் உணர்வுகளை வாழவைப்போம்!
    உன் எண்ணப்பதிவுகள் நாளையவிடியலுக்கு
    இன்றைய அறைகூவல்!!
    அன்புடன்
    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *