கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு
முனைவர் சி.சேதுராமன்
ஒரு காலத்தில் தோன்றி சிறப்புடன் விளங்கிய இலக்கியமானது காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும். எல்லா இலக்கியங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில இலக்கியங்களே இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்கியங்களாக விளங்குகின்றன. அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்திய இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் முதன்மையான இடத்தை வகிக்கின்றது.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்காப்பியம் ஏனைய காப்பிய நூல்கள் போன்று அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்காமல் கோவலன் – கண்ணகி என்ற குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டிலங்குகின்றது. இதனால், இச்சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்று கூறுவர். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு பொருந்துமாறு இயற்றப்பட்ட காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. காவிரி, வைகை, முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து, சாக்கைக் கூத்து உள்ளிட்ட கூத்துகளும், திருமால், சிவன், இந்திரன், முருகன் உள்ளிட்ட கடவுளர்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.
அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்த செய்திகள் இதில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிப்பிடுகின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூலும் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. முப்பது காதைகளைக் கொண்டது. இச்சிலப்பதிகாரம் பல்வேறு இலக்கியங்களில் பல நிலைகளில் செல்வாக்குப் பெற்றதாக விளங்குகின்றது. இலக்கியங்கள் மட்டுமல்லாது நாட்டுப்புற இலக்கியமான கதைப்பாடலிலும் இச்சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.
கோவலன் கதை – நூல் அறிமுகம்
இது பெரிய எழுத்துக் கோவிலன் கதை என்றும் கோவலன் கதை என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவிலன் கதையைப் புகழேந்திப் புலவர் என்பர் எழுதியுள்ளார். இவரைப் பற்றிய செய்திகள் கிடைத்ததில், நளவெண்பாவை இயற்றிய புகழேந்திப் புலவரும் கோவலன் கதையை எழுதிய புகழேந்திப் புலவரும் ஒருவரல்லர். நாட்டுப்புற மக்களிடையே காணப்பட்ட கோவிலன் கதையை அப்படியே மக்கள் விரும்பும் வண்ணம் இசையுடன் கூடிய கதைப்பாடலாகப் புகழேந்திப் புலவர் இயற்றியுள்ளார்.
புகழ்பெற்ற புலவர் புகழேந்தியாரின் பெயரில் எழுதினால் அனைவரும் விரும்பி நூலினைப் பயில்வர் என்ற காரணத்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ இந்நூலின் ஆசிரியர் தமது உண்மையான பெயரினைக் குறிப்பிடாது புகழேந்திப் புலவரின் பெயரினைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இந்நூலில் எவ்விடத்திலும் இதனை இயற்றிய புலவரின் பெயர் காணப்படாதது நோக்கத்தக்கது. நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அமைப்பிலேயே இக்கதை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூலினை பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் அவர்களால், மின்ட் போஸ்ட், சென்னை – 1 என்ற முகவரியிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட ஆண்டு குறிக்கப்படவில்லை. இந்நூலினை திருமகள் அச்சகத்தார், (சென்னை-1) வாங்கி அதே போன்று 1980-ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளனர். கோவலன் கதை என்ற தலைப்பில் சகுந்தலை நிலையத்தார் மண்ணடி, சென்னை-1 என்ற முகவரியிலிருந்து இரண்டாம் பதிப்பாக ஆகஸ்ட்-2007ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர்.
கோவலன் கதை நூலமைப்பு
கோவலன் கதை நூலானது சிலப்பதிகார நூலைப் போன்று அமையவில்லை. இதில் பதிகம் என்ற பகுதி காணப்படவில்லை. நாட்டுப்புறக் கதைப் பாடலைப் போன்று,
“முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் தம் மகனே
ஐந்து கரத்தோனே அருளுமையாள் புத்திரனே
விக்கின விநாயகனே வெண்ணெயுண்டோன் தன் மருகா
முக்கணனார் பெற்றெடுத்த மூஷிக வாகனனே
வெட்பாலைக் குள்ளிருக்குஞ் சப்பாணிப் பிள்ளையாரே
சப்பாணிப் பிள்ளையாரே பொற்பாதம் நான் மறவேன்
கோவலனார் தம் கதையைக் குவலயத்தில் நான்பாட
வின்னங்கள் வாராமல் விநாயகனே முன்னடவாய்!”
என்று தொடங்கி சுப்பிரமணியர் துதி, சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் நேரடியாகவே கதையின் வரலாறு என்று கதையைக் கூறத் தொடங்குகின்றார்.
சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தாக அமையவில்லை. மாறாக,
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்”
என்று இயற்கை வாழ்த்தாகத் தொடங்குகின்றது,
மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் கதையானது தொடங்குகின்றது. ஆனால் கோவிலன் கதையானது கண்ணகி, கோவலன், மாதவி, வசந்தமாலை உள்ளிடோரின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுவதிலிருந்து தொடங்குகிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி ஆகியோரின் முற்பிறப்பு வரலாறு மதுரைக் காண்டத்தில் கட்டுரைகாதையில் கூறப்படுகின்றது.
கோவிலன் கதையானது கதையின் வரலாற்றில் தொடங்கி கண்ணகியம்மன் திருவொற்றியூருக்கு வருதல் வரையில் நிறைவுறுகிறது. சிலம்பினைப் போன்று இக்கதையில் கண்ணகி தெய்வமான பின்பே கதைநிறைவுறுவது குறிப்பிடத்தக்கது.
ஊழ்வினை
காலங் காலமாக மக்களிடையே நிலவி வரும் விதிக் கொள்கையானது சிலப்பதிகாரத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஊழ்வினையானது தொடர்ந்து வந்து ஒருவரைப் பற்றும். இதனை,
“ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்”
என்று சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. சிலம்பின் இவ்வூழ்வினைக் கொள்கையானது அதன் பின்வந்த அனைத்து இலக்கியங்களிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி அவ்விலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது.
கோவிலன் கதைப் பாடலில் இவ்வூழ்க் கொள்கையானது கதையின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது. கதையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் ஒவ்வொரு நிகழ்ச்சியினைக் குறிப்பிடும்போதும் இவ்வூழ்வினையை வலியுறுத்திக் கூறிக் கொண்டே செல்வார் அதுபோன்றே புகழேந்திப் புலவரும் இவ்வூழ்வினையை வலியுறுத்துகிறார்.
மாதகியை நாட்டியமாட அழைத்தல் வேண்டும் என்று வற்புறுத்துகிறான் கோவலன். மாதகி நாட்டியத்தை வைக்கவில்லையெனில் நான் இறந்து விடுவேன் என்று கூறுகின்றான். அதனைக் கேட்ட அவனது தந்தை முத்துச் செட்டி,
“அப்போது முத்துச் செட்டி அழகு துரை மன்னவனும்
எண்ணாது மெண்ணுகிறான் எண்ணி மனங்குன்றுகிறான்
சாதகமும் பொய்க்காது தலைவிதியுந் தப்பாது
பன்னிரண்டு பிராயத்தில் பைங்கொடி மாதகியாள்
மாதகி யண்டையிந்த மன்னவன் போவானென்று
சாதகமும் உரைத்தது சரியாக ஆச்சுதுகாண்” (கோவிலன்கதை, ப., 17)
என்று நினைக்கின்றான். ஊழ்வினையின் வலிமையை கோவலனின் தந்தைவழி புலவர் எடுத்துரைக்கின்றார். காமதேனு இட்ட சாபவிதியின்படி கோவலன் 16 வயதில் இறக்க வேண்டும் என்ற ஊழ்வினை விரட்ட கோவலன் கண்ணகியுடன் மதுரை செல்கிறான்.
கண்ணகியின் காற்சிலம்பு புலம்பியதைக் கண்ணகி கோவலனிடம் கூறி மதுரைக்குப் போக வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால் கோவலன் அதனைக் கேளாமல்,
“செத்தாலும் தென்மதுரை சிலம்பு விற்றால் தென்மதுரை
அள்ள வேணுந் திருட வேணும் மணிமதுரைச் சீமையிலே
என் சிலம்பை விற்றாலே யெனக்குப் பகைவருமோ?” (ப., 54)
என்று கேட்டு மதுரைக்குக் கண்ணகியுடன் செல்கின்றான். எவ்வாறு சிலம்பில் ஊழ்வினை உறுத்தூட்ட கோவலன் சென்றானோ அதேபோன்று இக்கோவிலன் கதையிலும் ஊழ்வினை அவனை அத்துக் கொண்டு மதுரைக்கு ஏகுகின்றது.
பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறுதல்
கோவலன் மதுரையில் இறக்கப் போகின்றான் என்பதை இளங்கோவடிகள் பல்வேறுவிதமான நிகழ்வுகள் வழி எடுத்துரைப்பார். கண்ணகியின் கண்கள் துடிப்பது, கண்ணகி கனவு காண்பது, வையை ஆறானது கோவலனையும் கண்ணகியையும் பார்த்து இருவருக்கும் துன்பம் நேரப் போவதைச் சகிக்க முடியாமல் தனது முகத்தை பூக்களாலும் தழைகளாலும் மூடிக்கொண்டு போவதாகவும், மதுரையின் மதில்ச் சுவரின் மீதிருந்த கொடிகள் கோவலனையும் கண்ணகியையும் பார்த்து மதுரைக்கு வாராதீர்கள் என்று கூறுவதைப் போன்று காற்றில் அசைந்ததாகவும், கண்ணகி கோவலனுக்கு மாதரிவீட்டில் உணவு சமைத்துப் பரிமாறுவதற்காக மெழுகியபோது கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேரப் போகும் துயரத்தை உணர்ந்து மண்மகள் மயங்கிப் போய்விட்டதாகவும் அவளின் மயக்கத்தைத் தெளிவிப்பவள் போன்று கண்ணகி நீர் தெளித்து மெழுகினாள் என்றும், கோப்பெருந்தேவியின் கனவும் என்று பல்வேறு சம்பவங்கள் கோவலன் இறப்பையும் கண்ணகியின் துன்பத்தையும் முன்னரே எடுத்துக் கூறுவதாக இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
இளங்கோவடிகள் பின்பற்றிய இதே போன்று கோவலன் இறக்கப் போகிறான் என்பதை பலரின் வாயிலாகவும் எடுத்துக் கூறுகிறார். கண்ணகி சிலம்பைக் கழற்ற முனையும்போது அச்சிலம்பானது புலம்பி கோவலன் மதுரையில் இறக்கப் போகிறான். என்று கூறுகிறது. அதனை ஏற்காத கோவலன் மீறிச் செல்கிறான்.
அவ்வாறு மதுரையை நெருங்குகின்றபோது எதிரில் தென்பட்ட ஊர்களைப் பற்றிக் கோவலன் கண்ணகிக்குக் கூறிக் கொண்டே வருகின்றான். அப்போது வழியில் இருந்த விநாயகரை வழிபட்டு, கோவலனார் எந்தவிதமான துன்பமும் இன்றி சிலம்பு விற்று வருவாரா? என்று ஆரூடம் கேட்கிறாள் கண்ணகி. முதலில் வாய்திறக்க மறுக்கும் விநாயகர் பின்னர்,
“இந்தப் பயணம் எழில் மதுரை போவாரானால்
மாண்டு மடிந்திடுவார் வரப்போறதில்லை யென்றார்
துரும்பெடுத்து மேற்போடுந் துன்மார்க்க மதுரையது
கொடியெடுத்து மேற்போடுங் கொடிதான தென்மதுரை
இந்த மதுரை தமக்கு இவர் போனால் பெண்ணரசே
திரும்பி வரப்போவறதில்லை தேன்மொழியே உன்புருஷன்
பாவி தட்டான் தாயாதி பாண்டியனோ பங்காளி
மூத்த தமயனவன் தமுதற்றமையன் பிள்ளையென்று
ஒப்பாரி கொண்டு உறவு சொல்லித் தானழைப்பான்
வாத்திரயாரடித்ததனால் வனம் போனபிள்ளையென்று
செப்பியழைத்துச் சிலம்பு தன்னைப் பறித்துக்
கட்டினகட்டோட கச்சேரி கொண்டு போவான்
நீதிகேளாப் பாண்டியர்கள் நிற்கத் தலைவெட்டி வைப்பார்
பழிகார மதுரை தேடி பட்டணத்தார் போனாலே
இறந்து மடிந்திடுவார் இனித்திரும்பப் போவதில்லை
பின்னேவருங் காரியத்தை முன்னே நான் சொல்லிவிட்டேன்”
என்று விநாயகர் எடுத்துக் கூறியதைக் கண்ணகி கூறினாள். ஆனால் அதனைக் கோவலன் ஏற்காது பிடிவாதமாக மதுரையை நோக்கி நடந்தான்.
அதேபோன்று மதுரையில் சிலம்பினை விற்கும்போது சிந்தாமணி என்ற தாசியானவள் கோவலனைத் தடுத்து அவனுக்கு வேண்டிய செல்வத்தைத் தருவதாகக் கூறி நீ உனது அரண்மனைக்குப் போ என்று கூறித் தடுக்கிறாள். அதற்குக் கோவலன்,
“தாசியவள் நீ கொடுக்க தனவணிகன் வாங்குவேனோ
ஆர்போட வேணுமோ அவர்களதைப் போர்க்க வேணும்
அவளரண்மனையை விட்டு ஆணழகர் வாராரே” (ப., 59)
என்று கூறிவிட்டு சிலம்பினை விற்க அரசவீதிக்கு வருகின்றான். அப்போது அரசியானவள் அவனை அழைத்து அந்தச் சிலம்பினைக் கையில் எடுத்துப் பார்த்து,
“தவமாய்த் தவமிருந்து தையலரைப் பெற்றெடுத்தேன்
வரமாய் வரமிருந்து வைகையிலே ஒப்படைத்தேன்
அன்று கண்டேன் மகளை இன்று கண்டேன் சிலம்பை
என்று அழுது புலம்புகிறாள் ஆரணங்கு ராசகன்னி
கோவலரைத்தான் பார்த்து கொம்பனையாளேது சொல்வாள்
பாம்பெடுத்து மேற்போடும் பழிகாரத் தென்மதுரை
இந்த மதுரையிலே இறந்து போகநாளாச்சே
ஆனையின் மேல் திரவியத்தை அனுப்புகிறேனும்மனைக்கு
அத்தையெடுத்து முந்தன் அரண்மனைக்குப் போய்ச் சேரும்” (ப., 72)
என்று கூற அதனையும் ஏற்காது கோவலன் சிலம்பை விற்க மதுரை வீதியில் சுற்றித் திரிகின்றான்.
அப்போது அவன் வேத ஆசிரியரின் பள்ளிக்கூடத்திற்கு வந்த கோவலனின் வருத்தத்தைக் களைந்து, அவனிடம்,
“அழிகார மதுரையிலே பட்டணத்தாரேன் வந்தீர்
கொடும்பாவி மதுரையிலே கோவலரேயேன் வந்தீர்
நிந்தையிட்டுத் தலைவாங்கும் நீதியில்லா மதுரையிது
அநீதமாய் மாய வந்தீர் ஆணழகர் கோவலரே
காராம்பசுவை விற்றுக் கட்டழக வுந்தனுக்கு
கூத்தியார் கடனடைக்கக் கொற்றவரே நான்தாரேன்
அத்தை யெடுத்து உந்தன் அரண்மனைக்குப் போய்வாரும்” (ப.,73)
என்று கூறவும் கோவலன் அதனைப் பொருட்படுத்தாது கோவலன் நடந்தான். இவ்வாறு பலரும் கோவலனைத் தடுக்க அவன் அவற்றையெல்லாம் உதறிவிட்டுச் சிலம்பினை விற்க முனைகின்றான். இவற்றிற்கெல்லாம் ஊழ்வினையையே சிலப்பதிகாரமும் கோவலன் கதையும் பின்ணணியாகக் காட்டுகின்றன.
அரசியல் பிழைத்தவரை அறம் அழிக்கும்
அரசியலில் தவறிழைத்தோரை அறக்கடவுளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் கதையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புகழேந்திப் புலவர் கண்ணகியே காளியாக உருமாறி, அழிப்பாதாகப் படைத்துக் காட்டுகின்றார்.
கண்ணகி பாண்டியர் அரசவைக்குச் செல்வதாக இளங்கேவடிகள் படைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவரோ பாண்டியர்கள் கண்ணகியைத் தேடிவருமாறு படைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு வந்த பாண்டியர்களைப் பார்த்து கண்ணகியானவள்,
“அறிவு கெட்ட பாண்டியனே ஆளன் பழிகொடடா
புத்தி கெட்ட பாண்டியனே பழிக்குப் பழிகொடடா
விவரங்கெட்ட பாண்டியனே வேந்தன் பழிகொடடா
என் கணவன் பழிகொடடா கனிவு கெட்ட பாண்டியனே
ஆளனை ஏண்டா கொன்றாய் அறிவு கெட்ட பாண்டியனே”(ப., 102)
என்று கேட்டவுடன் தங்களது தவறினை உணர்ந்து,
“அறியாமல் கொன்று விட்டோம் அரிவையே என் செய்வோம்
தெரியாமற் கொன்று விட்டோம் தேவியே ஏது செய்வோம்
முற்பழி பிற்பழி தானிப்பழி தாருமென்றாள்
இப்படிக்குச் சொன்னாள் ஏந்திழை நான் விட்டிடுவேன்”(ப., 104)
என்று கூறி பாண்டியர்கள் மன்றாட கண்ணகியாள் அவர்களை வருமாறு கூறி அப்பாண்டியர்கள் ஆறாயிரம் பேரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். அரசியல் பிழைத்தோரை கடவுளே மனிதவடிவில் வந்து அழிக்கும் என்று புகழேந்திப் படைத்துக் காட்டியிருப்பது சிலப்பதிகாரத்தின் செல்வாக்கினையும் அதன் தாக்கத்தையும் காட்டுவதாக அமைந்திலங்குகின்றது.
“அறிவரைபோகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!” என்றும் “தேரா மன்னா” என்றும் கண்ணகி கூறும் கடுமையான வார்த்தைகளையே புகழேந்திப் புலவர் விரித்துப் பாடுகின்றார் என்பது நோக்கத்தக்கது.
கண்ணகி – கோவலன் அறிமுகம்
இளங்கோவடிகள் கண்ணகியையும் கோவலனையும்,
“மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,
அவளுந்தான்,
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ”
“இருநிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகவையான்;
அவனும்-தான்
மண்தேய்த்த புகழினான்; மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான்; கோவலன் என்பான் மன்னோ”
(மங்கல.வா.பாடல்)
என்று காப்பியத்தின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்துகின்றார்.
ஆனால் புகழேந்திப் புலவர் தனது கதைப் பாடலில் கோவலனை,
“அட்டாளுஞ் சொக்கரைப் போல் அழகுடைய மன்னவனும்
தேமல்விறையழகன் தெள்ளு மணிவாசகனார்
உருமாலைக் கட்டழகன் உத்தமனார் கோவலனும்
அள்ளித் தெளித்ததுபோல் அழகு சிறு தேமல்
மாங்கா முடியழகன் மாதளம்பூ மேனியனாம்
செக்கச் சிவந்தவன்காண் செங்கீரைத் தண்டழகன்
அட்டாளுஞ் சொக்கரைப்போல் அழகுடைய மன்னவன்தான்
சோமன் கட்டி வீதிவந்தால் சுவாமி சொக்கரேசரென்பார்
மண்டை கட்டி வீதி வந்தால் மதுரை வாழ் சொக்கரென்பார்
……………. …………………………….. ……………………………… ……………………………….. …………………………..
இப்படிக்குக் கோவலனும் இருந்து வளர்நாளையிலே”(ப., 10)
என்று அறிமுகப்படுத்துகின்றார். கண்ணகியை,
“காவிரிப்பூம் பட்டணத்தில் கண்ணியாள் மாதினுக்கு
பன்னிரண்டு வயதாச்சு பைங்கொடியாள் கண்ணகிக்கு
நாளொரு மேனியாக நட்சத்திரம் போல் வளர்ந்தாள்
பொழுதொரு மேனியாக பொன்வண்டு போல் வளர்ந்தாள்
இப்படிக்குத்தான் வளர்ந்தாள் ஏந்திழை கண்ணகியும்
வளர்பிறைச் சந்திரன் போல் மங்கையரும் தான் வளர்ந்தாள்” (ப.,29)
என்று வருணித்துக் கூறுகின்றார். கண்ணகியைக் காளியின் மறுவடிவாகக் கொண்டே புலவர் கோவலன் கதையை நகர்த்துகின்றார். மாதகி கோவலனிடம் பொற்பதுமை செய்து தருமாறு கூறியபோதும், பொற்பதுமை பேசவேண்டும் என்ற போதும், கோவலனிடம் இருந்து மாதகி அனைத்தையும் பறித்துக் கொண்டு சிங்க முகக் கேணியில் தள்ளியபோதும் கோவலன் தனது மனைவி கண்ணகியை நினைத்து,
“ஆவிபோகும் வேளையிலே யாரை நினைக்கலுற்றார்
பத்தாத பத்தினியே பழுதுபடாரத்தினமே
மாலை பறிபோகுதடி மணவாளன் மாளுகிறேன்
தாலிபறிபோகுதடி தலைவனிங்கே மாளுகிறேன்
கூறை பறிபோகுதடி கொற்றவனார் மாளுகிறேன்
பத்தினியும் மெய்யானால் பக்கத்துணை வந்திடுவாய்
கண்ணகியும் மெய்யானால் காக்க நீ வாருமென்றார்” (ப.,40)
தன்னைத் துன்பத்தில் இருந்து காக்க வேண்டும் என்று வருந்திக் கூறுகின்றான். ஒவ்வொரு இடத்திலும் கண்ணகியாலேயே கோவலன் காப்பாற்றப்படுகின்றான். கண்ணகி காளியின் மறுவடிவமாகவே கோவலன் கதை முழுவதும் காட்டப்படுகிறாள்.
இளங்கோ கண்ணகியைக் காப்பியத்தின் இறுதியிலேயே தெய்வமாக்குகின்றார். ஆனால் புகழேந்திப் புலவரோ கோவலன் கதையின் தொடக்கத்தில் இருந்தே காளிதேவியாகவே காட்டுகின்றார். கோவலனுடன் காட்டுவழியில் செல்லும்போது, அங்கு கண்ணகி தனித்திருந்த நிலையில் துன்புறுத்த வந்த கள்வர்களைக் கண்ணகி கல்லாகப் போகுமாறு சாபம் கொடுக்கின்றாள். அதன்பின் அங்குவந்த கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களை மன்னித்து மீண்டும் உயிர்கொடுக்கின்றாள்.
அதேபோன்று கோவலன் இறந்துவிட்டதும் பாண்டியனிடம் நீதி கேட்க இளங்கோ படைத்த கண்ணகி அரசவை செல்வாள். ஆனால் கண்ணகி கோட்டைவாயிலில் நின்று கொண்டு தன்னைப் பார்க்க வருமாறு வாயில்க் காப்பவனிடம் கூற அதன்படி பாண்டியர்கள் கண்ணகியைப் பார்க்க வந்தனர். இவை புதுமையாகவும் வியப்பாகவும் இக்கதையில் அமைந்துள்ளது.
பத்தினியாள் மாதகி
இளங்கோவடிகள் மாதவி என்று காப்பியத்தில் குறிப்பிட்டு, கோவலனுக்காக வாழ்ந்தவளாகவே காட்டுகின்றார். கோவலனிடத்தில் இருந்து எதையும் அபகரித்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை. அரங்கேற்றக் காதையில்,
“மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை 170
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்” (அரங்கேற்று)
என்று மாதவியின் மனையில் கோவலன் தங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறார். அதேபோன்று கோவலன் இறந்த பின்னர் அவனுக்கும் தனக்கும் பிறந்த மகளைக் கண்ணகி மகள் என்று கூறி அவளை பெளத்த துறவியாக்குகின்றாள். அதேபோன்று மாதவியும் புத்தமதத்தில் சேர்ந்து துறவியாகிறாள்.
ஆனால் புகழேந்திப் புலவர் தான் வாழ்ந்த காலத்திற்கேற்ப மாதகியைப் படைத்துக் காட்டுகிறார். பரத்தையர் குலத்தில் பிறந்தவர்கள் எவ்வாறெல்லாம் நடந்து கொள்வர் என்பதை மாதகியை வைத்துச் சித்திரித்துக் காட்டுகிறார் புலவர். பத்து வயதில் கோவலனின் திருமணத்திற்கு ஆடவந்த மாதகி அவளுடன் கூடப் பிறந்த பொன்னுருவி மாலையைக் கழற்றி எறிய அது கோவலனின் கழுத்தில் விழுந்தது.
அதனைக் கோவலனால் கழற்ற இயலவில்லை. மாதகி தான் கொண்டு வந்திருந்த இளநீரில் ஊரவைத்த களிப்பாக்கினை எடுத்துத் தாம்பூலத்துடன் மைதடவிக் கொடுக்க அதனை வாங்கி உண்ட கோவலன் மாதகிமேல் மையல் கொண்டு கண்ணகியைப் பிரிந்த அவளுடன் சென்றுவிடுகின்றான். மாதகி கேட்கக் கேட்க பொன்னையும் பொருளையும் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றான் கோவலன்.
கண்ணகி ஒலையினைப் பார்த்த கோவலன் மாதகியிடம் விடைகேட்க அவளோ உன்னைப் போன்று ஒரு பொற்பதுமை செய்து வைத்துவிட்டுப் போ என்று கூறுகின்றாள். அதன்படியே கோவலனும் செய்து வைக்க, அப்பதுமை பேசவேண்டும் என்று கூற கோவலன் கண்ணகியை நினைத்தவுடன் பதுமை பேசியது. கோவலன் கண்ணகியிடம் செல்லும்போது பொற்பதுமை பேசாது போகவே மாதகி அவனை ஓலையெழுதி மறுபடி வரவழைத்து சிங்கமுகக் கேணியில் நீர் எடுத்துத் தருமாறு கேட்கிறாள். கோவலனிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொள்கிறாள். அவனுடைய அழகையும் பறித்துக் கொள்கிறாள். ஏதுமற்ற கோவலனிடம் தன்னிடம் பணிசெய்யும் நட்டுவனாருக்கும், கலைஞர்களுக்கும் பொன்தரவேண்டும் என்று கேட்க அதனைத் தருவதற்குத் தன்னிடம் ஏதுமில்லை. எப்படியாவது தருகிறேன். கண்ணகியைப் போய்ப் பார்க்க அனுமதிதா என்று கேட்ட கோவலனை ஆற்றில் பிடித்துத் தள்ளுகிறாள் மாதகி.
இவ்வாறு பல கொடுமைகளைக் கோவலனுக்குச் செய்யும் கொடுமையான பரத்தையாகக் கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். இருப்பினும் கோவலன் இறந்தபின்னர் கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவனது சிதையுடன் மாதகியும் இறந்து போவதற்குச் சம்மதம் தெரிவித்து,
“நீ-என்ன சுகமறியவாய் என்றன் தமக்கையரே
நான்கூட மாளுகிறேன் நாயகனார் தம்முடனே
எங்களிருவரையும் எடுத்துத் தகனஞ் செய்யும்” (ப.,108)
என்று கூறிவிட்டு தனது மடியில் மலர்களை வைத்துக் கொண்டு சிதையேறினாள். கண்ணகியாள் சிதைக்குத் தீவைத்தாள். அவர்களிருவரையும் தீப்பற்றி எரித்தது. அவர்களது சாம்பலை எடுத்துக் காசியில் கரைப்பதற்காக கண்ணகி எடுத்தபோது மாதகியின் மடியில் கட்டியிருந்த மலர்கள் கருகாது அப்படியே இருக்கக் கண்டாள் கண்ணகி. அதனைப் பார்த்த கண்ணகி,
“பத்தினியாள் என்று சொல்லிப் பாவைமனதில் எண்ணி” (ப., 109)
வியந்து மனதிற்குள்ளேயே மாதகியைப் போற்றினாள். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்பெறாத ஒன்றாகும்.
புகழேந்தியாரின் புதுமைகள்
பரத்தைமை ஒழுக்கத்தின் கேடுகளை விளக்குவதற்காகவே புகழேந்திப் புலவர் மாதகியைக் கொடுமை செய்பவளாகப் படைத்துக் காட்டுகின்றார். மேலும் மாதகியின் தாய் வசந்தமாலைதான் பல்வேறு கொடுமைகளை கோவலனுக்குச் செய்கின்றாள். மாதகியாகவே எந்தவொரு தீங்கும் கோவலனுக்குச் செய்யவில்லை. மாதகி தன்னுடைய தாயிடம் வந்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதை,
“எல்லாம் பறித்துக் கொண்டேன் இளங்கொடியே தாயாரே
திருப்பதி திம்மனைப் போல் நின்றாண்டி கோவலனும்
அவனை இனி என்ன செய்கிறது ஏந்திழையே தாயாரே
சிங்கமுகக் கேணியிலே தேன்மொழியே தள்ளுமென்றாள்” (ப., 44)
என்று புலவர் படைத்துக் காட்டுகிறார்.
பரத்தையரை நாடினால் எவ்வாறெல்லாம் துன்புற நேரிடும் என்பதை மாதகி வசந்தமாலை ஆகியோரின் வழி புகழேந்தியார் தெளிவுறுத்துகிறார். இளங்கோவடிகள் குறிப்பதைப் போன்று மாதரி என்று பெயரைக் குறிப்பிடாது ஆச்சி என்று புகழேந்தியார் குறிப்பிடுகின்றார். கண்ணகியை கவுந்தியடிகள் அடைக்கலப் பொருளாக மாதரியிடம் அடைக்கலப்படுத்தி, “தாயும் நீயே ஆகித் தாங்குக” என்று கூறியது போன்று கோவலன் கண்ணகியை ஆச்சி (ஆய்ச்சி என்பதே வழக்கில் ஆச்சி என்று மருவி வந்திருத்தல் வேண்டும்)யிடம்,
“மதுரைக்கு யான்போய் வருமளவுந்தாயாரே
பெற்ற பிள்ளைபோலாகப் பேணி வளர்த்திடுவாய்
கண்ணகியை உன் மகள்போல் காத்து வளர்த்திடுவாய்
பத்தினியை உன்மகள் போல் பார்த்தே இருத்திடுவாய்
உத்தமியை உன் மகள் போல் உகந்து நீ காத்திடுவாய்
ஆயனைக் காத்தததுபோல் ஆச்சி நீ காத்திடுவாய்
மாயனைக் காத்ததுபோல் மாதாவே காத்திடுவாய்
நான் தென்மதுரைத் தானேகித் திருமபி வருமளவும்
அடைக்கலமென் மனைவி ஆச்சியே உன்னிடத்தில்” (ப.,64)
என்று அடைக்கலப்படுத்திவிட்டுச் செல்கிறான்.
மதுரை செல்லும் கோவலனிடம் தனக்கு ஏதேனும் அடையாளம் செய்துவிட்டுப் போ என்று கண்ணகி கூறுவதும் கோவலன் மரப்பெட்டியை வைத்து விளக்கேற்றி மாம்பழம், மல்லிகைப்பூ, தேங்காய், சந்தனம், நிறை செம்பில் தண்ணீர் இவற்றையெல்லாம் வைத்துவிட்டு, எனக்கு ஏதும் துன்பம் நேர்ந்தால் செம்பில் தண்ணீர் குறையும், மல்லிகைப் பூவாடும் மாங்கனி அழுகிவிடும், சந்தனம் உலரும் தேங்காய் உடையும், விளக்கு அவியும்மரப்பெட்டி உடையும் என்று அடையாளம் செய்துவிட்டுப் போகின்றான். இந்தப் பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்பெறாத ஒன்றாகும்.
அதேபோன்று கருடனின் முட்டைகளையும் குஞ்சுகளையும் துன்புறுத்திய வஞ்சிப்பத்தனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க கருடன் அரசியின் காற்சிலம்பினை எடுத்துக் கொண்டு போய் பாம்புப் புற்றினுள் போட்டுவிட்டு அவனது குடும்பத்தைப் பழிக்குப் பழி வாங்குகின்றது கருடன். வஞ்சிப்பத்தனின் மனைவி முத்துமாலை, மகன்கள் சுந்தரலிங்கம் சோமலிங்கம் ஆகியோரின் பெயர்கள் கோவலன் கதையில் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வஞ்சிப்பத்தனைக் காப்பாற்ற அவனது மகன்கள் வேதவாத்தியாரிடம் இருந்த கோவலனைக் கண்டு வந்து அவனிடமிருந்த சிலம்பினை அபகரிக்கத் திட்டந்தீட்டித் தருவதும், வஞ்சிப்பத்தன் காணாமல் போன தனது அண்ணன் மகன் என்று கூறி கோவலனை அழைத்து அவனுக்குச் சமையல் பொருட்கள்கொடுத்து உணவு சமைத்து உண்ணுமாறு கொடுப்பதும், பின்னர் கோவலனிடம் உள்ள சிலம்பினை கீழே வைத்துவிட்டு உண்ணுமாறு கூறுவதும் முத்துமாலை உலக்கையால் கோவலனை அடித்துச் சிலம்பினைக் களவாடுவதும் கோவலனை அரசனிடம் கட்டி இழுத்துச் சென்று நிறுத்துவதும் கோவலனைக் கண்ட பாண்டியர்கள் அவனது காலில் விழுவதும் அதனைக் கண்ட வஞ்சிப்பத்தன் கள்வனின் காலில் அரசர்கள் வீழ்ந்து வணங்கலாமா என்று கூறுவதுமாகிய நிகழ்ச்சிகள் சிலம்பில் இடம்பெறாத நிகழ்ச்சிகளாக புகழேந்திப் புலவரால் படைத்துக் காட்டப்படுகின்றன.
அதேபோன்று பாண்டியனின் அமைச்சர்கள் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று கோருவதும் கோவலன் பாம்புக் குடத்துக்குள் கைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும், கொப்பரையில் கொதிக்கின்ற நெய்யிலே கையைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும் மழுவினைக் காய்ச்சி அதனை எடுக்குமாறு கூறுவதும் என்னுடைய சிலம்புதான் என்று அதனை ஏந்திக் கொண்டு சென்று சிவன் கோயிலுக்குச் சென்று அரசவைக்கு வருவதும் யானையை வைத்துச் சத்தியம் செய்ய வைப்பதும், குழிதோண்டி அதனைச் சுற்றிவரச் செய்து பள்ளத்திற்குள் கோவலனைத் தள்ளுவதும் கொல்லவந்த யானை மத்தகத்தில் கோவலனைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவதும், பாண்டியர்கள் கோவலனைக் கொல்ல மழுவரசர்க்கு ஆணையிடுவதும், பாணடிய மன்னரைப் பார்த்து கண்ணகியாள் உங்களைப் பழி வாங்குவாள் மதுரையை அழித்து மன்னனைக் கொன்று கண்டதுண்டமாக்குவாள் என்று கூறுவதும் புகழேந்தியார் கோவலன் கதையில் இடம்பெறும் புதுமைமிகுந்த நிகழ்ச்சிகளாகும்.
அதேபோன்று கண்ணகி கோவலன் இறந்தவுடன் தன்னைத் தடைசெய்த ஆச்சியரின் வீடுகளை எரிப்பதும் பின்னர் ஆச்சி வேண்ட மீண்டும் அவற்றை மறுபடி உண்டாக்கிக் கொடுத்ததும், கோவலன் இறந்து கிடந்த இடத்தை மாடுகள் மேய்க்கும் சிறுவர்க்கு உணவுசமைத்துக் கொடுத்துக் கேட்டுக் கண்ணகி அடைந்து கோவலனை மீண்டும் உயிர்ப்பித்து அவனிடம் நடந்தவற்றை அறிந்து அவன் தான் கொலைசெய்யப் பட்ட விதத்தையும் அதற்குக் காரணம் யார் யார் என்பதையும் எடுத்துக் கூறி தன்னுடன் மாதகியையும் இணைத்துவிடவேண்டும் என்று கூற அதுகேட்ட கண்ணகி அவனை மீண்டும் கொன்றுவிடுகிறாள். பின்னர் பாண்டிய மன்னர்களைக் கொன்றுவிட்டு வஞ்சிப்பத்தனையும் அவனது மனைவியையும் கொல்கிறாள். வஞ்சிப்பத்தனது மகன்களை,
“வாவென்று சொல்லியே மைந்தர்களைத் தானழைத்து
எழுத்தாணி கொண்டு ஏந்திழையாள் குத்தியவள்
சிறுகுடலும் பெருகுடலுஞ் சேர்த்துமே தான்பிடுங்கி
அகாசமாகவேதான் அந்தரத்தில் விட்டெறிந்தாள்
காலாலே தான் கவ்விக் கொண்டு கடுகெனவே போச்சுதுகாண்”
(ப., 88)
என்று கொல்வதும் அவர்களது குடல்களைக் கருடன் கவ்விக் கொண்டு செல்வதும், கோவலன் மாதகி அஸ்தியைக் கரைக்க காசிக்குச் செல்வதும் சிவபெருமான் அவள் வருமிடத்தில் பல கோவில்களை எழுப்பி அவளுக்குக் காசியைக் காட்டி கங்கையில் கரைக்கச் சொல்வதும் கண்ணகி அஸ்தியைக் கரைக்க அது பூக்களாக மாறி மிதந்தது. பின்னர் திருவொற்றியூருக்கு வந்த கண்ணகி தாகமெடுப்பதாகக் கூற கிணற்றில் இறங்கித் தண்ணீர் குடி என்று சிவனார் கூற அவளும் கிணற்றில் இறங்கித் தண்ணீர் அருந்த அப்படியே பெரிய கல்லை எடுத்து அதனைச் சிவனார் மூடிவிட பலஇடங்களிலும் கண்ணகி தோன்ற சிவனார் அவற்றைக் கல்வைத்து மூடிவிட கண்ணகியின் கோபந் தீர்க்க அவள் கேட்ட பலினைக் கொடுக்கவே அவள் வட்டப்புரியம்மனாக மாறி பலி வேண்டாம் எருமைக்கடா பலிதந்தால் இன்பமாக நான் கொள்வேன் என்று கூறிவிடுகிறாள்.
புகழேந்திப் புலவர் அதன் பின்னர் இக்கதையைப் படித்தவர்கள் அடையக் கூடிய பயனை,
“வட்டபுரியம்மன் கதை வகையுடனே வையகத்தில்
கற்றவர்கள் கேட்டவர்கள் கலியுகத்தில் சொன்னவர்ள்
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்
வாழி வாழியென்று சொல்லி வரமளித்தார் ஈஸ்வரனார்” (ப.,91)
என்று சிவபெருமானே கூறுவதாக எடுத்துரைக்கின்றார். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வரந்தருகாதையில்,
“செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்;
மல்லன்மாஞாலத்து வாழ்வீர் இங்னெ” (சிலம்.,வரந்தரு., 210-202)
மறுமை உலகத்திற்குச் செல்லும் உற்ற துணையாகிய அறத்தினையே எப்போதும்தேடுங்கள் வளமிக்க இப்பேருலகில் வாழ்கின்றவரே! அதற்காவன இவ்வுலகிலேயே இயற்றினீராக வாழ்ந்து உயர்வீராக!” என்று எடுத்துரைப்பதுடன் ஒத்திருப்பது நோக்கத்தக்கது. புகழேந்திப் புலவர் சைவசமயத்ததைச் சார்ந்தவர் என்பதும் இக்கோவலன் கதை முழுவதும் சிவபெருமானுக்கு முதன்மைதருவதாகவும் அமைந்துள்ளது. இதற்கு மாறாக சிலப்பதிகாரம் அனைத்துச் சமயங்கள் பற்றியும் எடுத்துரைத்து சமண சமயக் கொள்கைகளை ஆங்காங்கு எடுத்துரைத்துப் போவதும் வேறுபட்டதாக அமைகின்றது.
சிலம்பின் செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்வேறு வகையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் கதையிலிருந்து பல இடங்களில் மாறுபட்டு காலத்திற்கு ஏற்றாற்போன்று புகழேந்திப் புலவரால் கோவலன் கதை புனையப்பட்டு கற்றாருக்கு இன்பமளிப்பதாக உள்ளது.
முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.