-எம். ஜெயராம சர்மா – மெல்பேண் 

சினமெமைத் தீண்டா நிற்கச்
சிரமதில் கனதி போகப்
பரமனின் பாதம் பற்றிப்
பணிந்துமே நிற்போம் என்றும்!                 Shiva

மனிதராய் வாழ வேண்டில்
மனமதில் தூய்மை வேண்டும்
புனிதராய் இருக்க வேண்டில்
போற்றுவோம் பரமன் தன்னை!

ஆணவம் தமக்குள் ஏற
அனைத்தையும் மறந்தே நின்ற
மாலொடு பிரமன் தானும்
மதிகெட்ட செயலைச் செய்தார்!

கடவுளர் தாமே என்று
கங்கணம் கட்டி நின்று
அழிவினைத் தேடும் வண்ணம்
அவர்நிலை ஆயிற் றன்றோ?

ஆணவம் அழிக்க அங்கே
அளவிலா ஜோதி தோன்றிக்
காணுங்கள் ஆதி அந்தம்
கடவுளாய் ஆவீர் நீங்கள்

என்ற அச்சேதி கேட்டு
இருவரும் முயற்சி செய்துப்
பன்றியாய் பட்சி ஆகிப்
பற்பல வித்தை செய்தார்!

வென்றவர் யாரு மின்றி
விக்கித்து நின்ற போது
அங்குமே சிவனும் தோன்றி
ஆணவம் போக்கி நின்றார்!

என்றுநாம் அறியும் வண்ணம்
இயம்பிடும் புராணம் தன்னை
நன்றுநாம் கற்றோம் ஆனால்
நாமுமே திருந்தி வாழ்வோம்!

மனங்களில் அழுக்கு வந்தால்
மாயையே தோன்றி நிற்கும்
குணமெலாம் மாறிப் போகும்
குறைகளே குவிந்து நிற்கும்!

அறமெலாம் மறந்தே போகும்
ஆணவம் ஆட்சி செய்யும்
அரனது நாமம் கூட
அனைவரும் மறந்தே போவர்!

சிவனது இரவு தன்னில்
அவனையே மனதில் எண்ணி
பவவினை போக்கு என்று
பணிவுடன் வேண்டி நிற்போம்!

நீறு அணிந்த நெற்றியொடு
ஆறு அணிந்த சடையுடையான்
பேறு தனைப் பெற்றுவிட
கூறி நிற்போம் அவன்நாமம்!

சிவனது நோக்குப் பட்டால்
தெளிவுமே வந்து நிற்கும்
உளமெலாம் தூய்மை ஆகி
உமைபாகன் பக்கம் சேரும்!

தவமுடன் சிவனை எண்ணித்
தலைமீது கையை வைத்துச்
சிவனைநாம் வணங்கி நிற்போம்
சிவனது இரவு தன்னில்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *