–சு. கோதண்டராமன்.

துன்பம் நீங்க வேதம் கூறும் வழி

boston.com.bigpicture

 

நம் விருப்பம் நிறைவேறாமல் தடுக்கும் தடையே துன்பம் என்பது. இது வேதத்தில் பல சொற்களால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும் துன்பத்தின் ஒரு குறிப்பிட்ட வகையைக் குறிக்கிறது.

ரேபஸ் என்பது அங்கக் குறைபாட்டைக் குறிக்கும். தேவர்கள் ரேபஸ் இல்லாதவர்கள் என வேதம் கூறுகிறது.

நோயைக் குறிக்க ரபஸ், அமீவா என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ருத்ரன் ரபஸை நீக்குபவராகக் கூறப்படுகிறார். (2.33.7)          மருத்துகளே, உடைந்த எலும்பைச் சரி செய்து ரபஸை நீக்குக என்கிறது மற்றொரு ரிக். (8.20.26)

உயிர் வாழத் தேவையான உணவு, நீர் இவை கிடைக்காத நிலை, அதாவது வறுமை – அம்ஹஸ், அம்ஹதி என்ற சொற்களால் கூறப்படுகிறது. இந்திரா எங்களுக்கு செல்வம் கொடுத்து அம்ஹஸை நீக்குக என்கிறது ஒரு மந்திரம். (4.20.9) சிறையிலகப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் முதலியனவும் இதே தலைப்பில் அடங்கும்.

நமக்கு நெருங்கினவரது மரணத்தால் ஏற்படும் துன்பம் அகஸ் अघस्. எங்களது அகஸ்ஸைப் போக்கிச் செல்வத்தை அருளுக, அக்னியே என்கிறது வேதம். (1.97.1 )

இந்த சூக்தத்தில் உள்ள எட்டு மந்திரங்களும் சிதைக்கு எரி மூட்டுவதற்கு முன்பாக, பிரேதத்தைச் சுற்றி வரும்போது சொல்லப்படுகிறது.

அக்னியே எங்களை அகஸ்ஸுக்கோ, விஷகடிக்கோ உள்ளாக்காமல் காப்பாயாக.(1.189.5)    

 எங்களுக்குத் துன்பம் தருபவர்க்கு நீ அகஸ்ஸைக் கொடுப்பாயாக. (5.3.7)

பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன், மரண துக்கம் வரும்போது அதைத் தனியாக அனுபவிக்கிறான் என்பதைக் கேவலாதி கேவலாக: என்று சுருக்கமாகக் கூறுகிறது ஒரு ரிக். (10.117.6)      

பிரத்தியட்சமாக அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமன்றி, வரவிருக்கும் துன்பம் வராமல் காப்பாற்ற வேண்டும் மந்திரங்கள், இந்திரா, எங்களைத் துன்பத்தில் தள்ளாதே (1.54.1)   போன்று பல உள்ளன.

துரிதம் என்பது எல்லா வகையான துன்பங்களையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்.

பெரும்பாலான மந்திரங்கள் எங்களது துன்பத்தை நீக்கு என்றுதான் வேண்டுகின்றன. என்னுடைய துன்பத்தை நீக்கு என்று வேண்டும் மந்திரங்கள் மிகக் குறைவு.

துன்பத்தின் காரணத்தைப் பற்றிக் கூறும்போது, மனிதர்களால் ஏற்படுவது, தேவர்களால் கொடுக்கப்பட்டது என இரண்டு வகையாகப் பிரிக்கிறது வேதம் – மர்த்ய க்ருதம், தேவ க்ருதம். மனிதரால் ஏற்பட்ட துன்பத்தையும் தான் செய்த தவற்றினால் ஏற்படுவது, மற்றவர்கள் செய்த தவற்றினால் ஏற்படுவது என இரண்டாகப் பிரிக்கிறது.

எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளிலிருந்தும் நாங்கள் செய்த தவறுகளிலிருந்தும் எங்களை விடுவிப்பாயாக. (7.86.5)           மற்றவர்கள் செய்த பாவத்தின் பலனை நாங்கள் அனுபவிக்காமல் இருப்போமாக.(2.28.9)

திரிகளின் சாபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து (அபிசஸ்தி), காக்குமாறு வேண்டுகிறது. (1.18.3, 6.42.4)       

தான் செய்த தவறு என்பது ஆகஸ் (आगस्) எனப்படுகிறது. அதுவே சிறியதாக இருந்தால் அது ஏனஸ் எனப்படுகிறது.

எது பாவம்? ருதத்தை (இயற்கை நியதியை) மீறுவது பாவம். அதன் விளைவாகத் தேவர்கள் துன்பம் கொடுக்கிறார்கள். ருதம் என்பது மேலோரைப் போற்றலும் சார்ந்தோரைக் காத்தலும் ஆகும் என்பதை முன்னர் பார்த்தோம். மனிதன் ஏன் ருதத்தை மீறுதலாகிய பாவத்தைச் செய்கிறான்?

பாவத்திற்குத் தூண்டு கோல்கள் யாவை என்று ரிஷி பட்டியல் இடுகிறார். அவை மது, கோபம், சூது, அறியாமை, கனவுகள் என அறிகிறார். பாவம் செய்யாதிருக்கப் புத்தி கொடு என்று வேண்டுகிறார். (7.86.6,7.)

மற்றொரு மந்திரத்தில், அறியாமை, ஆணவம், கவனமின்மை, தூண்டுதல்களை எதிர்கொள்ள முடியாத பலவீனம் ஆகியவை பாவம் செய்வதன் காரணமாகக் கூறப்படுகின்றன. (4.54.3)   

செயலால் செய்யப்படுவது மட்டும் பாவம் அல்ல. வாயினால் தவறாகப் பேசுவதும் பாவம் என்கிறது வேதம்.

    மற்றவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதிலோ, தெரிந்தோ தெரியாமலோ தூங்கும்போதோ விழித்திருக்கும்போதோ நாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை வருங்காலத்திலும் செய்யாமல் காப்பாயாக. (10.164.3)

பாவத்திலிருந்தும் அதன் விளைவான துன்பத்திலிருந்தும் தப்புவது எப்படி? பிரார்த்தனை ஒன்றுதான் வழி. தேவர்களைச் சரணடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் துன்பங்களிலிருந்து நீங்க வேதம் கூறும் ஒரே மார்க்கம்.

தேவர்களைச் சரணடைந்து விட்டால் துன்பங்களிலிருந்து தப்பித்து விடலாம் என்ற துணிச்சலில் பாவம் செய்து கொண்டே இருக்கலாமா? முடியாது. தேவ பூசைக்கு முன்னதாக நாம் நம்மைப் பாவங்கள் இல்லாதவர்களாகச் செய்து கொள்ள வேண்டும்.

“பாவம் நீங்கினால்தான் தேவ பூசை செய்யலாம், தேவரைப் பூசித்தால்தான் பாவம் நீங்கும்” என்பது குழப்பமாகத் தோன்றும். இதன் பொருள் என்னவெனில், பாவத்தைப் போக்கிக் கொள்ள நம்முடைய முயற்சியும் அவசியம், அதாவது செய்த பாவங்களுக்காக நாம் மனமார வருந்த வேண்டும் என்பதுதான். மனதில் பாவ நாட்டம் இல்லாமல் தூய்மை செய்து கொண்டால்தான் பூசை செய்வதற்கு உரிய தகுதி கிடைக்கும். பூசை செய்வதன் மூலம் பாவத்தின் விளைவுகளைத் தேவர்கள் நீக்குவார்கள்.

தேவர்களைப் பூசிப்பதால் செய்த பாவங்கள் போவது மட்டுமல்ல, இனி வருங்காலத்தில் பாவம் செய்வதற்குக் காரணமான எண்ணங்களும் நீக்கப்பட்டு மனம் தூய்மை அடையும் (10.63.8)  என்பது தெரிகிறது. ஆண்டாளின் திருப்பாவையில் வரும் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

பாவக் கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி:

புராண காலத்தில் ருதம் என்ற கருத்துரு மறைந்து முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு உண்டாயிற்று. அந்நிலைக்கு சிவனை உயர்த்தின சில நூல்கள். விஷ்ணுவை உயர்த்தின வேறு சில நூல்கள்.

ருதம் வழக்கு ஒழிந்ததால் ருதத்தை மீறுதல் பாவம் என்பதும் மறைந்தது. பிறர்க்கு துன்பம் தருவது தான் பாவம் என்ற எண்ணம் பரவலாயிற்று. அத்துடன் பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம் என்ற புதிய கருத்தும் வளர்ந்தது. பரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம்.

இது புத்த சமயத்தின் தாக்கமாக இருக்கக் கூடும்.

 

 

 

Picture Source: http://www.boston.com/bigpicture/2013/04/daily_life_march_2013.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *