ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கவியரசின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கக் காரணங்கள் பல உண்டு! ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பல தலைமுறைகளைத் தாண்டி நின்றிட கூட்டணி முயற்சிதான் அடிப்படைக் காரணமாகும். கதையின் கருவை உணர்ந்து கவிதைக்குள் அமைத்துத் தர வல்ல கவிஞர்களின் எண்ணச் சிறகுகள் எட்டிய உயரங்கள் சில சமயங்களில் கற்பனை வானத்தையும் மிஞ்சிவிடுகிற தருணங்களும் உண்டு!
பாசம் திரைப்படத்தில் கதாநாயகன் கள்வன் பாத்திரத்தில்… கதாநாயகி… மாட்டுவண்டியில் அந்தக் காட்டுப் பாதையைக் கடந்து செல்லும்போது… கள்வனின் பிடியில் சிக்கிவிடுகிறாள். மக்கள் திலகம்தான் கதாநாயகன் என்பதால் கதாபாத்திரத்தின் போக்கும் தன்மையும் மேன்மை கொண்டதாகத் தானே அமையும். அவ்விடத்தில் இடம் பெறும் பாடல்!
இப்பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தவர் திமிரியில் வாழும் மருத்துவர் இலக்கிய அன்பர்… என் இனிய நண்பர்…டாக்டர் அ.பரமேஸ்வரன் ஆவார்.
உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து.. ஆண் தன்னிடம் இல்லாத ஒன்றைப் பெண்ணிடம் தேடுகிறான். பெண் தன்னிடம் இல்லாத ஒன்றை ஆணிடம் தேடுகிறாள். இந்த இயற்கைத் தேடலில் இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதைக் காதல் என்றும் கூறுவார்கள். இங்கே கூட இதுதான் நடக்கிறது. கவிஞர்தான் அதை வித்தியாசமாக இலக்கிய நயம் கலந்து தருகிறார் பாருங்கள்!…
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
இங்கே ஒரு திருட்டு.. திருட்டென்று தெரியாமலே நடக்கிறது! அதுவும் திருடப்படும் பொருளே தன்னைத் திருடும்படி கேட்கிறது. இந்த அநியாயம் வேறு எங்காவது உண்டா? அடுத்த வரியில்மட்டும் என்ன நடக்கிறது?
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
என்கிற பெண்ணின் குரலில் பேதமை நயம் தெரிகிறது! பொருள்நயம், சுவைநயம் என பல்வேறு நயங்களை அபிநய சரஸ்வதி சரோஜாதேவி திரையில் தந்திருக்கிறார்!
காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி… இன்னும் நம் காதுகளில் ரீங்காரமாக… எஸ். ஜானகியின் குரலில்… விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிதை வரிகளில்…
ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே…
காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
(ஜல்ஜல் ஜல்)
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் ஜல்)
இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் ஜல்)
__________________________________
திரைப்படம் : பாசம்
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர் : எஸ் . ஜானகி