நான் அறிந்த சிலம்பு – 157
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை
அங்காடி வீதி
இரண்டு உருளையுடைய வண்டிகள்,
மூடு வண்டிகள், அழகிய தேர் கொடிஞ்சி,
உடலுக்குத் தேவையான கவசம்,
அனைவராலும் விரும்பப்படும்
மணிகள் பதிக்கப்பெற்ற அங்குசங்கள்,
தோலால் செய்யப்பட்ட கைகளுக்கான உறைகள்,
இடுப்பில் அணியும் கச்சை உடைகள்,
வளைதடிகள், வெண் சாமரங்கள்,
பன்றிமுகக் கேடயங்கள்,
சிறிய கேடயங்கள்,
காட்டின் உருவம் பொறித்த கேடயங்கள்,
குத்தும் கோல்கள்…
செம்பு மற்றும் வெண்கலப் பொருட்கள்,
கயிற்றால் முடிந்த பொருட்கள்
நெட்டிப் புல்லால செய்யப்பட்ட மாலைகள்,
ஈர்வாள் முதலிய கருவிகள்,
தந்தத்தைக் கடைந்து செய்த வேலைப்பாடுகள்,
வாசம் மிக்க புகைக்கான பொருட்கள்,
பல வகைச் சாந்துகள்,
பூவால் கட்டப்பட்ட மாலைகள்…
இந்தப் பொருட்கள் அனைத்தும்
ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியாதபடி
அனைத்தும் தம்முள் கலந்து கிடக்கின்ற
அங்காடி வீதிகள்…
இவ்வீதிகள் அரசரும் கண்டு மகிழும் வண்ணம்
செல்வச்செழிப்பை உடையனவாய் இருந்தன.
இவ்வீதிகளைக் கண்டுகொண்டே
கோவலன் சென்றான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 168 – 179
படத்துக்கு நன்றி: கூகுள்