குறளின் கதிர்களாய்…(63)
-செண்பக ஜெகதீசன்
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (திருக்குறள்:929 – கள்ளுண்ணாமை)
புதுக் கவிதையில்…
விளக்கு வைத்துக்
குளத்தில் விழுந்தவனைத்
தேடிடும்
வீணான செயல் போன்றதே,
காரண காரியம் காட்டி
அறிவுரை சொல்லிக்
குடிகாரனைத்
திருத்த முயல்வதும்…!
குறும்பாவில்…
குடித்தவன் திருந்தச்சொல்லும் அறிவுரையும்,
குளத்துநீரில் விழுந்தவனைத் தேடக்
கொளுத்திடும் பந்தமும் பயனில…!
மரபுக் கவிதையில்…
குளத்து நீரில் விழுந்தவனைக்
கண்டு பிடித்துக் கரையேற்ற
விளக்கு கொளுத்தித் தேடுதல்போல்
வீணாம் செயலது ஏதுமில்லை,
அளவை மிஞ்சிக் குடிப்பவர்க்கே
அறியக் காரணம் சொன்னாலும்
இளகி மனமது திருந்தாரே,
இதுவும் அதுபோல் வீண்தானே…!
லிமரைக்கூ…
விழுந்தவனை விளக்குடன்தேடிப் பயனில்லை நீரில்,
குடித்தவனைக் காரணம் பலசொல்லித்
திருத்திவிடப் பார்ப்பதிலும் பலனேதுமில்லை பாரில்..!
கிராமிய பாணியில்…
தேடாத தேடாத
தண்ணிக்குள்ள தேடாத,
உழுந்தவனக் கண்டுபுடிக்க
வெளக்குவச்சித் தேடாத,
பந்தம்வச்சித் தேடுனாலும்
பலனேதும் கெடயாதே…
அதுபோல,
சொல்லாத சொல்லாத
காரணமெல்லாஞ் சொல்லாத,
கள்ளுகுடிச்சவன் திருந்தமாட்டான்
காதுலயும் வாங்கமாட்டான்,
சொல்லாத சொல்லாத
நல்லவார்த்த சொல்லாத…
தேடாத தேடாத
தண்ணிக்குள்ள தேடாத…!