ஞா.ஜார்ஜ்
ஆராய்ச்சியாளர்
அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
காந்திகிராம பல்கழைக் கழகம்
காந்திகிராமம்
திண்டுக்கல்

images (1)

இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியா ஓர் தனிப்பெரும் நாடாகவும் மக்கள் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. பல சாதனைகள் ஒருபுறம் இருக்க மக்கள் சாதி மதம் இனம் மற்றும் மொழி ஆகிய காரணங்களால் வேறுபட்டும் இருக்கின்றனர். பலதரப்பட்ட மக்களைக் கொண்டு உருவாகும் அரசு மக்களை முதன்மைப்படுத்துவதாகவும் மக்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் இருப்பது அவசியம். மக்களால் உருவாக்கப்படும் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் எப்படி மக்கள் பங்கேற்பை அளிக்கின்றனர் என்பதுதான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. அதுவல்லாது வெறும் வாக்கை அளித்துவிட்டதன் மூலம் தங்கள் ஜனநாயக கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் ஆதரவாக தங்களுடைய பங்கேற்பை அளிப்பதுதான் நமது முதற்கடமை. இது அனைத்துதரப்பு மக்களுக்கும் பொருந்தும். வெறுமனே அரசு சரியில்லை அரசு செயல்பாடு சாமானியமக்களை சென்றடையவில்லை அரசு அதிகாரிகள் சரியில்லை அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்று குறைகூறுவது முட்டாள் தனமான ஒன்று. அரசு அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் திட்டமிடுதலிலும் சுயநலம் கலந்து இருப்பதாக கூறும் மக்கள் தங்களின் பங்கேற்பும் செயல்பாடுகளும் எப்படி சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டும். சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மக்களின் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய சூழலில் மக்களின் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு என்னுடைய இரயில் பயணத்தில் நான் கண்ட சில உதாரணங்கள் நான் மதுரையில் இருந்து இராமேசுவரம் வரையில் பயணித்த போது என்னுடன் பயணித்த சில நூறு பயணிகளை நான் நன்கு கவனித்தேன். அவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இரயில்வேத் துறை சார்பில் ஓர் அறிவிப்பு பலகை இருந்தது அதில் இரயில்வண்டி நிற்கும் போது கழிவறை பயன்படுத்துவதை தவிர்கவும் என்று. ஆனால் அதிகப்படியான மக்கள் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. இப்படி படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலும் அனைத்துத் தரப்புமக்களும் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவது என்பது சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின்மையை காட்டுவதாக இருப்பதுடன் அரசு செயல்பாட்டில் குறுக்கிடுவதாகவும் உள்ளது. சமூக அக்கரையின்மையின் காரணமாக இவர்கள் செய்யும் செயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிமை வேலை செய்யப் பணிக்கிறது. அடிமைத் தனமான வேலையை தலித் மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் தங்களின் அவசரத்திற்காகச் செய்யும் இந்த இழிவான செயலால் வரும் விளைவை மலத்தை அகற்றுபவர் என்ற முறையில் தலித்துக்கள் இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சட்டத்திருத்தம் 2013-ன் படி மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் வேறுதொழிலில் ஈடுபட கடனுதவி அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதலியன இந்தச் சட்டத்திருத்தத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. அத்துடன் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை பணி அமர்த்துவதும் அவர்களை மனிதக் கழிவகற்ற பணிப்பதும் சட்டப்படி குற்றம் அதைமீறினால் அபதாரம் மற்றும் சிறை தண்டனை என்பன இச்சட்டத்தின் சிறப்பு. ஆனால் இன்றைக்கும் மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்கள் அனைவரும் தலித்துக்களாக இருந்து வருகின்றனர். இந்தப் பணி பலரையும் முகம் சுழிக்கவைக்கக்கூடிய மற்றும் அருவறுக்கத்தக்க செயலாக இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களிடம் இருக்கும் சுயநலம் தான் காரணமே தவிர அரசு இதற்கு பொறுப்பு என்று கூறுவது தவறு. மக்களுக்கான அரசு மக்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையான சட்டங்களை இயற்றுவது திட்டங்கள் தீட்டுவது ஓர் அரசின் கடமை. அதுபோல் மக்களும் அரசின் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் அதில் பங்கேற்பையும் அளிப்பது மக்களின் கடமை. ஆதலால் தான் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு கொண்டுவரும் திட்டங்கள் சரியாகவே இருந்தாலும் அதை நடைமுறையில் மக்கள் ஏற்காதவரை அது இந்திய அரசியல் அமைப்பு புத்தகத்தில் எழுதப்பட்ட திட்டமாகவே தான் இருக்குமே தவிர நடைமுறையில் அதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும்சரி சமூகத்திலும்சரி எந்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. எனவே பொது இடங்களில் மலம் கழிப்பது இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவது ஆகிய சமூகச் சீர்கேடுகளைக் குறைப்பதும் அதைச் சமூகத்தில் முற்றிலும் அகற்றுவதும் என்பது அரசு மற்றும் மக்களின் ஒருமித்த செயல்பாட்டில்தான் உள்ளது. இதற்கான முயற்சியாக அரசு தனிமனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அது போல சமூகத்தின் சுகாதாரமும் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக சமூக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இது போன்ற சமூக விழிப்புணர்வின் மூலம் மக்களின் மனங்களில் ஏற்படும் உள்ளார்ந்த மாற்றம்தான் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க வழிகோலிடும்.

மற்றொரு நிகழ்வு என்னவென்றால் இராமேசுவரம் என்பது இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் பிற மதத்தவரும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட இராமேசுவரத்தில் இந்துக்களின் கலாச்சாரப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கர்மகாரியங்கள் நடத்துவது பின்பு கடலில் புனித நீராடுவதும் வழக்கம், அத்துடன் நின்றுவிடாமல் அவர்கள் உடுத்திவந்த உடைகளை கடலில்விடுவதும் வழக்கம். ஆனால் இந்தச் செயலால் கடலில் துணிகள் மிதப்பதுடன் புனிதநீர் என்று கருதப்படும் கடல்நீர் மாசுபடுகிறது. கடல் நீர் மாசுபடுவதால் மீன் வளத்தைகுறைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்செயலால் கடற்கரை ஓரத்தில் மீன் உற்பத்தி குறைகிறது. இதனால் கரைஓர மீன்பிடிதொழில் செய்யும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவுவரை துணிகள் கடலுக்கடியில் படிந்தும் மிதந்தும் காணப்படுகின்றது. கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகைகள் வைத்தும் துணிகளை போடுவதற்கான தொட்டிகள் அமைத்து இருந்தாலும் மக்கள் அதை பின்பற்றுவது இல்லை. இதைப்பற்றி சில சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டபோது என்னதான் அறிவிப்பு பலகை மற்றும் துணியைப் போடுவதற்கு தொட்டிகள் அமைத்துத்தந்தாலும் வரும் பக்தர்கள் துணிகளை விடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செயலற்ற நிலையில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உள்ளாட்சி அமைப்பும்சரி கோயில் நிர்வாகமும் சரி வெறும் அறிவிப்புப் பலகையுடன் நில்லாமல் அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும் முன்வரவில்லை அதற்கான செயல்பாட்டை எடுத்ததாகவும் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வு உள்ளாட்சி அமைப்புகளின் சமூக அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது. சுற்றுலாத் துறையும் அதன் துறைசார்ந்த செயல்பாட்டில் ஒரு குறைபாட்டுடன் தான் செயல்படுகிறது. இது போன்று அரசுத்துறைகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றி மக்கள் பேசுவதை விடுத்து முதலில் தங்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய முயற்சிக்க வேண்டும். இதற்கானத் தீர்வாக கலாச்சாரம் என்ற பெயரில் பாவங்களில் இருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பொதுஇடம் அதிலும் புண்ணியத்தலத்தை அசுத்தம் செய்வதை ஒவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து அவர்களுக்குள்ளாக வரும் மாற்றம் தான் இப்போது தேவை.

சமூக வளர்ச்சியையும் அதன் முன்னேற்றத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளான சாதியப் பாகுபாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை சமூகத்தில் இருந்து களைய, படித்தவர் படிக்காதவர் மற்றும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்குள்ளும் வரும் ஓர் சீரிய மாற்றம் தான் சமூகப் பிரச்சனைகளைக் குறைத்து ஒரு மேம்பட்ட சமூகம் உருவாக வழிவகுக்குமே தவிர சட்டங்களைக் கடுமையாக்குவது புதிய திட்டங்கள் தீட்டுவதினால் ஒருமாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே முதலில் மக்கள் மனங்களில் தான் மாற்றம் தேவை என்பது தான் என் கருத்தாக முன்வைக்க விரும்புகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *