குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா

0

amm
படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்
மன உலகை மாற்றிட முடியும்.
—————————————————————————
– குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு –

வந்தவாசி.: அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

இவ்விழாவிற்கு இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.ஜீவா அனைவரையும் வரவேற்றார்.

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ படித்துப் பழகு ‘ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை ந.சுரேஷ்முருகன்,லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நூலை வெளியிட்ட எம்.எஸ்.தரணிவேந்தன் பேசும்போது, குழந்தைகளுக்குப் புத்திமதி சொல்வதாக நினைத்து, அவர்களிடம் பெற்றோர்கள் எதையும் நாம் திணிக்கக் கூடாது. குழந்தைகளோடு அன்பாக பேச வேண்டும். அவர்களது எண்ணத்தைப் புரிந்துகொண்டு பேசினால் மட்டுமே குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். அப்படிக் குழந்தைகளை மென்மையாக அணுகுவதற்கு மு.முருகேஷ் எழுதியுள்ள இந்தக் கதைப் புத்தகம் நமக்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது என்று பேசினார்.

விழாவிற்கு தலைமையேற்ற இரா.சிவக்குமார் பேசும் போது, குழந்தைகள் படிக்கிற மாதிரி எளிமையாக கதை எழுதுவது மிகவும் கடினமானது. கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்விப் பணியில் செயல்பட்டுவரும் மு.முருகேஷ், குழந்தைகளின் மனவோட்டத்தை அழகாகப் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பிப் படிக்கும் சுவாரசியத்தோடு குழந்தைக் கதைகளை எழுதியுள்ளார். இது நாளைய குழந்தைகளுக்கான நம்பிக்கை புதுவரவு என்று குறிப்பிட்டார்.

நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றும்போது, குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் என்பதை நாம் முதலில் மனதார ஏற்க வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டி முன்னும், கணிப்பொறி முன்னும் அமர்ந்து நிறைய நேரத்தைக் கழிப்பதற்குக் காரணம், அவர்கள் எடுத்துப் படிக்கத் தூண்டும் மாதிரியான எளிய கதைப் புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவே. குழந்தைகளுக்குப் பிடித்தமான மொழியில் நேரடியான புத்திமதி சொல்லாத படைப்பிலக்கியங்களால் குழந்தைகளின் மன உலகை நிச்சயம் மாற்றிட முடியும் என்று கூறினார்.

நிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.

படக் குறிப்பு :
——————–
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’ படித்துப் பழகு’ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். நடுவில், நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ், தொழிலதிபர் இரா.சிவக்குமார், ந.சுரேஷ்முருகன் ஆகியோர் உள்ளனர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *