மனிதவள மேம்பாட்டுத் துறை மக்கள் நலனை கருத்தில் கொள்ளுமா?

0

பவள சங்கரி

தலையங்கம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) என்பது நம் இந்திய அரசால் மனிதவளத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சகம் . இந்த அமைச்சகம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது. கல்வி வளர்ச்சி மற்றும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்காக செயல்படுவது ‘பள்ளிக் கல்வித் துறை ’. மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்காக செயல்படுவது, ‘உயர்கல்வி அமைச்சகம்’. இந்தியக் கல்விக் கழகங்கள் அனைத்தும் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்குள்தான் செயல்படுகின்றன.

“பாரதமும், சீனாவும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வுலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியது 130 ஆண்டுகளுக்கு முன்னர்.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது நம் இந்தியாதான். 2028 இல் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது. அதாவது நம் இந்திய மக்கள் தொகை 2030 இல் 160 கோடியாக அதிகரிக்குமாம். இந்தியா மற்றும் சீனாவில் இளம் வயதினர் மற்றும் அதிக அளவிலான மக்கள் தொகை இருக்குமாதலால் மூலதனத்துக்கு இது மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறது உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இதுமட்டுமல்லாமல், வரும் 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வல்லரசாக இருக்கும் எனவும், சீனாவைவிட மேன்மையடைந்து உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் கோல்டுமேன் சாக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு தமது அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வல்லரசான அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது சீனா உள்பட பல உலக நாடுகள் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் நம் இந்தியாவும் சற்றே பாதிக்கப்பட்டாலும், உடனடியாக நாம் சுதாரித்துக் கொண்டோம். இதனால் உலக அரங்கில் அனைத்து நாடுகளும் நம்மை வியந்து நோக்கின.

உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தற்போது இருக்கும் நம் இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் சீனாவின் நிலை , 2030ம் ஆண்டிற்கு பிறகு மாற்றம் பெறும். அதாவது நம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கும் அதே வேளையில் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் வரை உள்ள சீனாவின் வளர்ச்சி குறையத் துவங்கும். ஆக 2030ம் ஆண்டில் நம் இந்தியா பொருளாதாரத்தின் வல்லரசாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2.6 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக இருக்கும். வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி 4.8 முதல் 5.6 சதவீதம் வரை இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவு நாடுகளின் தாக்கம் குறைந்து, சீனாவின் நிதி கொள்கைகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். 2030 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையை விட சேவைத் துறைக்கு அதிக தேவை இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கி.பி. 1750 வரை இந்தியாவே உலக அளவில் பொருளாதாரத்தில் முதன்மை வகித்தது. அதாவது உலக உற்பத்தியில் 33 சதவீதம் பங்களித்துவந்தது. அதையடுத்து சீனா 28 சதவீதம் பங்களித்துள்ளது என்ற தகவல் ஏங்கர் மேடிசன் என்ற பொருளாதார அறிஞர் எழுதிய, ‘இரண்டாயிரம் ஆண்டுகால உலகப் பொருளாதாரத்தின் போக்கு’ என்ற ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2030 ம் ஆண்டுகளில், சீன சமுதாயத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவில் இளைஞர்களின் சமுதாயம் அதிக அளவில் உருவெடுக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலைப்பாடு இந்தியா வல்லரசு ஆவதற்கு பெருமளவில் உறுதுணை புரியும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு புள்ளி விவரம், இந்திய பொருளாதாரம் உலகளவில் மூன்றாவது இடத்தில் வரும் என்றும் கூறுகிறது.

மேலும், 2030ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைவிட அதிகமாக இந்தியாவில், நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் நுகர்வோராக இருப்பார்கள். ஆனால் இந்தியா மற்றும் சீன நாடுகள் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், ஒட்டு மொத்த வருமானத்தில், நடுத்தர வருமானம் உடையவர்கள் சிரம்ப்பட நேரிடலாம். பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அறிவியல் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ் & பி யின் மதிப்பீடுகளுக்காக உள் கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்காமல் ஆய்வுத் துறைகளில் அதிக முதலீடுகள் செய்தும் உற்பத்தித் துறையை ஆதரித்தால் பொருளாதாரத்தில் மிகுந்த மேம்பாடு அடையலாம். அதே நேரத்தில் விவசாயத் துறையில் மத்திய அரசின் நிலைப்பாடு அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. உணவில் தன்னிறைவு அடைந்ததை தக்க வைத்துக்கொண்டாலே பொருளாதார வளர்ச்சியைப் பற்றி செயல்பட முடியும்.

தற்போது கிடைத்துள்ள மற்றும் சில புள்ளி விவரங்களின்படி புதிய தலைமுறையினருக்கு சரியான ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் வளர்ச்சி விகிதம் குறைகிறது. இந்தியர்களின் சராசரி உயரம் 150 செ.மீ. என்பது பாரம்பரியத்தின் வழியில் அமைவது. ஆனால் இன்றைய நிலையில் அதிலிருந்து உயரம் குறைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் 3 அல்லது 4 அங்குலம் உயரம் அதிகமாகிறார்கள். நம் நாட்டில் ஊட்டச் சத்து குறைபாடு இருந்தாலும் அறிவு வளர்ச்சியில் குறைபாடு ஏற்படவில்லை என்பது ஆறுதலான விசயம். வல்லரசு ஆகும் முனைப்பில் இருக்கும் இத்தருணத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டு அவர்களுக்கு ஊட்டச் சத்து கிடைப்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். மனிதவள மேம்பாட்டுத் துறை இவைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அப்பொழுதுதான் நம் நாடு வல்லரசு ஆவதற்குரிய அனைத்துத் தகுதியும் பெற்று நிலைத்து நிற்க முடியும். பொருளாதாரத் துறை மட்டுமன்றி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உடல் ஆரோக்கியம், அறிவு வளர்ச்சி இவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இளைய சமுதாயத்தினரை நீதி போதனைகள் மூலமாக நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதும் சமீப காலங்களில் அரங்கேறியுள்ள சில மோசமான நிகழ்ச்சிகள் எச்சரிக்கை விடுக்கின்றன. திரைப்படத் துறைக்கு தணிக்கை செய்யப்படுவது போல அனைத்து மற்ற ஊடகங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் நிலையும் காண முடிகிறது.

பெரும்பாலான கல்வி நிலையங்களோ மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர, மதிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்க முனைவதில்லை. 100 சதவிகித மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொள்கிறார்களே தவிர 100 சதவிகித மனித சமுதாயத்தை உருவாக்கத் தவறிவிடுகின்றனர். மனித வள மேம்பாட்டுத் துறை இந்தக் குறைகளையெல்லாம் களைந்து ஒரு நிறைவான வல்லரசை உருவாக்க உறுதியளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *