ஏன் இந்தக் கவலை?
-துஷ்யந்தி, இலங்கை
மருத்துவத்தில் உள்வாங்கப்படாத
மனிதனால் அடையாளம்
காணமுடியாத அனைவரிலும்
இருக்கக்கூடிய மிகப்பெரிய
ஆட்கொல்லி நோய்…!
இல்லாதது ஒன்றையே
தினமும் சிந்திக்கவைத்து,
இருக்குமனைத்தையும் மறைத்து,
ஏதோ ஒன்றைத் தினம் தேடும்
நாடகமேடையின் திரை…!
ரசனைமிக்க வாழ்வின்
ரகசியங்கள் பலதையும்
ரசிக்கமுடியாதாக்கி,
நம்மைச் சூழ்ந்த நல்லோரை
நாடவிடாமலாக்கும் – ஒரு
வாழ்வின் தடைக்கல்…!
முயற்சிகளுக்கு எதிரியாய்
முற்றுப்புள்ளி வைத்து,
முன்னேற்றத்தைத் தடையாக்கி
மனதிலே சுமையாகும்
முகத்திலே மூடிக்கொள்ளும்
புன்னகையை மலரவிடாதாக்கும்
மாயையான முகமூடி…!
ஆன்மீக வழிகாட்டலும்
அன்பான நட்புக்களும்
அழகான சூழலும் நாம்
என்றும் அமைத்துக்கொண்டால்,
கவலையெனும் நோய்
வாழ்வில் ஓர் பனிக்கட்டியே!!