என் கதைதான் உன் கதையும் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் அமைந்த பாடல்கள்போல் அதன்பின் வந்தகாலங்கள் அமையவில்லையே ஏன் என்கிற வினா அனேகமாக எல்லோரது நெஞ்சங்களிலும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
பின்னணி இசையில் முன்னணியில் கவிதை வரிகளாய் பாடல்! ஏற்றதோர் குரல்கள் தேர்ந்தெடுத்து பாட்டுக்கு முக்கியத்துவம் தந்தமையால் அத்திரைப்படங்கள் பெட்டிக்குள் சென்றபின்னரும் இப்பாடல்களே காற்றில் என்றும் தவழும் ஜீவிதம் கொண்டவையாகத் திகழ்கின்றன!
தேவிகா, சாவித்திரி இருவரும் இணைந்து தோன்றும் காட்சி! திரைப்படம் பந்தபாசம், இசையமைப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலாசிரியர் கவிஞர் மாயவநாதன் காட்சியமைப்பும் கதையின் ஓட்டமும் சரியான களமிது என்று பாடலுக்கு வழியமைக்க.. இருவரும் காதலில் தோல்விமுகம் கண்டதனால்.. இணையாக பல்லவியிலும் சரணங்களும் ஒருசேரப் பாடுகின்ற காட்சியும்.. அதற்கான பாடல் வரிகளும் சபாஷ் போட வைக்கின்றன!
எளிய வார்த்தைகளால் இனிய இசையோடு இதயம்நுழையும் பாடல் பி.சுசீலா எஸ்.ஜானகி குரல்களில் கேளுங்கள்… நடிகையர் திலகம் சாவித்திரியுடன் நம் அபிமான நடிகை தேவிகா திரையில்…
காணொளி: https://youtu.be/IaLKhADl9z8
திரைப்படம்: பந்தபாசம்
பாடலாசிரியர்: கவிஞர் மாயவநாதன்
இசையமைப்பு: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்கள்: பி.சுசீலா, எஸ்.ஜானகி
_______________________________________
என் கதைதான் உன் கதையும்..
உன் கதைதான் என் கதையும்..
பாதையில்தான் சிறுமாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!
உண்மையென்ற சொல்லிருக்கும்
ஊருக்காக பிறந்திருக்கும்
பெண்மையைப் புகழ்ந்திருக்கும்
பேச்சோடு நின்றிருக்கும்
பாதையில்தான் சிறுமாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!
காதலென்ற சொல்லிருக்கும்
கதையோடு முடிந்திருக்கும்
கண்ணீரென்ற ஒன்றிருக்கும் – அது
கன்னியர்க்கே பிறந்திருக்கும்!
உதட்டளவில் சிரிப்பிருக்கும்
உள்ளத்தில் நெருப்பிருக்கும்
உருவத்திலே அழகிருக்கும் – வெறும்
வஞ்சமங்கே குடியிருக்கும்!
பாதையில்தான் சிறுமாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!
தியாகமென்ற சொல்லிருக்கும்
காதலரைப் பிரித்துவைக்கும்!
காலமென்று ஒன்றிருக்கும்
கதைகளையே மாற்றிவைக்கும்! (தன்)
வாழ்க்கையிலே ஆண்களுக்கு
காதலொரு பந்தாட்டம்
கன்னியர்க்கு வாழ்விலது
காலமெல்லாம் போராட்டம் (நம்)
பாதையில்தான் சிறுமாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்!! ஏமாற்றம்!!