நிர்மலா ராகவன்

images (2)“அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது.

அதற்கு நேரிடையாகப் பதில் கூறாது, “இங்கதான் நல்லா இருக்கே, மஞ்சு! பூனை இருக்கு. சீக்கிரமே ரெண்டு, மூணு குட்டி போடப்போகுது. அதோட விளையாடலாம். சிங்கப்பூரில ரொம்ப சின்ன வீடு. இங்க இருக்கிறமாதிரி தோட்டம் கிடையாது. அதோட, தாத்தாவோட பீச்சுக்குப் போய் குளிக்கலாம்,” என்று சமாதானப்படுத்துவதில் இறங்கினாள்.

பெற்றோர் கோலாலம்பூருக்கு தெற்கே அறுபது கிலோமீட்டர் தொலைவிலிருந்த போர்ட் டிக்சன் என்ற கடற்கரைப் பகுதியிலிருக்க, உத்தியோக நிமித்தம் அருணா சிங்கப்பூரில் இருந்தாள். மூன்றரை மணிப் பயணம்.

மகளைப் பிரிந்து அவ்வளவு தூரம் போக முதலில் தயக்கம் ஏற்பட்டாலும், மோகனைச் சந்திக்க கடவுளே இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார் என்ற புளகாங்கிதம்தான் எழுந்தது.

ஆறு வருடங்களாக ஆண்துணை இல்லாமல் தனித்து வாழ்ந்திருந்தாள். இப்போதுதான் சற்று வெளிச்சம் வாழ்வில்.

`இந்தக் காலத்திலே யார் இப்படி, பொட்டில்லாம இருக்காங்க! கல்யாணத்துக்கு முந்தியே, குட்டிப் பொண்ணா இருக்கிறப்போவே பொட்டும், பூவும் வெச்சுக்கலே? சும்மா அழகா டிரெஸ் பண்ணிக்குங்க,’ என்று ஊக்கின சக கூழியன் அவளுக்குக் கடவுளாகவே தெரிந்தான். அவள் முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சோகம் மறைந்தது. மீண்டும் கலகலப்பானாள்.

தான் பிறப்பதற்கு முன்பே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்ட தந்தையை மஞ்சு பார்த்திராததும் நல்லதாகப் போயிற்று. இப்போது, `இவர்தான் ஒன்னோட அப்பா!’ என்று மோகனைக் காட்டிவிடலாம். ஒரு முழுமையான குடும்பமாக வாழலாம். வயதான அப்பாவும், அம்மாவும் சாசுவதமா?

ஒரு முறை, `ஒனக்கு இன்னும் இருபத்து அஞ்சு வயசுகூட ஆகலியா? நம்ப ரெண்டு பேருக்கும் அஞ்சு வயசுதான் வித்தியாசம்!’ என்று கையைத் தட்டினான் உற்சாகமாக.

“ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?” என்றவன், தொடர்ந்து, அவள் சற்றும் எதிர்பாராத நிபந்தனை ஒன்றையும் விதித்தான்: “ஒன் மக எப்பவும்போல, தாத்தா பாட்டிகூடவே இருக்கட்டும்!’

எப்போது விடுமுறை வரும், மகளைப் பார்க்கலாம் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் தன்னால், இனியும் அப்படி, மாதம் தவறாமல், போக முடியுமா? அருணாக்கு வாயடைத்துப் போயிற்று.

`யோசிச்சுப் பாரு, அருணா. ஒனக்கு ஒரு குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் நான் ஒன்னைக் கல்யாணம் செய்துக்கத் தயாரா இருக்கேன். ஆனா, ஒன் மகளைப் பாக்கறபோதெல்லாம், `என் மனைவி இன்னொருத்தனோட இருந்தவ’ அப்படின்னு உறுத்திக்கிட்டே இருக்குமே!’

அருணாவால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. வழக்கம்போல் தாய்வீடு திரும்பியபோது, பெற்றோருடன் கலந்து ஆலோசித்தாள்.

“ஒங்க மோகன் சொல்றது சரிதாம்மா. `மஞ்சுவை என் மகளா ஏத்துக்கறேன்’னு மொதல்லே வசனம் பேசிட்டு, அப்புறம் செத்துப்போன மனுஷனோட ஏதோ போட்டி, ஆத்திரம்னு வந்து, குழந்தையை அடிச்சா என்ன செய்யறது?” அப்பாவுக்கு இன்னொரு ஆணின் மனவக்கிரங்கள் புரிந்தன.

“அவளைப் பாத்துக்கறதிலே எங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லே,” என்று அம்மாவும் ஒத்துப் பாடினாள், தான் பெற்ற மகள் எப்படியோ சந்தோஷமாக இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன்.

ஒவ்வொரு தடவை அவள் வரும்போதும், `அம்மா! நானும் ஒங்ககூடவே வர்றேனே!’ என்று கெஞ்சும் மகளை இனி எப்படிச் சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் அருணா. எத்தனையோ முறை, `அடுத்த தடவை. ஓ.கே?’ என்று கொஞ்சி, சமாதானம் செய்தாயிற்று.

விளையாட்டுச் சாமான்களால் சமாதானம் அடைந்துவிடும் பருவம் இப்போது. நாளைக்கே, விவரம் புரிந்தால், `உனக்கு என்னைவிட அந்த மோகன்தானே பெரிசாப் போயிட்டாரு?’ என்று சண்டை பிடிப்பாளோ? ஒரு வேளை, அம்மாவுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோமே என்று உள்ளுக்குள்ளேயே அழுது, எதிலும் பற்றின்றி ஆகிவிடுவாளோ?

மஞ்சு! மோகன்! யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை விட்டு விலகுவது?

அருணாக்குத் தற்காலிகமாக சிந்தனைகளிலிருந்து விடுதலை கிடைத்தது, பூனையால்.

“மஞ்சு! பெரிய பூனைகிட்ட போகாதே. குட்டியைத்தான் தூக்க வரேன்னு நினைச்சுக்கிட்டு, ஒன்னைப் பிராண்டிடும்,” என்று மகளை ஓயாது கவனிக்க வேண்டியிருந்தது.

“அம்மா! மூணில ஒரு குட்டிதாம்மா இருக்கு! இன்னும் ரெண்டு எங்கேம்மா?”

பூனை, பூனை! அருணாவுக்கு அலுப்பாக இருந்தது. “அதான் ஒண்ணு இருக்கில்ல? போதும். நீ அதுக்கு சாப்பிடக் குடு. தாத்தா அந்த டப்பாவிலே வெச்சிருக்காரு, பாரு”.

`தெருவிலே போற பூனையா இருந்தா என்ன! அதுக்கு மட்டும் பசிக்காதா? அதுவும் இந்த சமயத்திலே!’ என்று சொல்லிவிட்டு, பூனைக்கும், மிகுந்திருந்த ஒரு குட்டிக்கும் கடையிலிருந்து சிக்கன் கலந்து, சிறு சிறு கட்டிகளாக இருந்த உணவை அப்பா வாங்கி வந்திருந்தார்.

“அம்மா! பாருங்களேன்! அம்மாபூனை ரொம்ப நாட்டி! குட்டியோட மங்கிலே இருக்கிறதைச் சாப்பிடுது. குட்டி, பாவம்! ஒதுங்கி நிக்குது!”

`குழந்தைகளுக்கு எல்லாமே வேடிக்கைதான். பெரியவர்களானபின்தான் வேதனை எல்லாம்!’ என்று எண்ணமிட்டாள் அருணா. தனக்குப் பால் சுரக்க வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று தாய்ப்பூனைக்கு இயற்கையாகவே தெரிந்திருக்கிறது. இதை மஞ்சுவிடம் சொன்னால் புரியுமா?

அன்று சாயங்காலம் பள்ளியிலிருந்து திரும்பிய குழந்தை ஓடி வந்தாள், “அம்மா! தாத்தா!” என்று அலறியபடி.

பதறிப்போனார்கள் இருவரும். “என்னம்மா? என்ன ஆச்சு?”
“குட்டியைக் காணும்!”
“அவ்வளவுதானே! எங்கேயாவது காருக்கடியில, செடிக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கும். போய்த் தேடு”.
“நான் நல்லாப் பாத்துட்டேம்மா. காணும்!” மஞ்சுவுக்கு அழுகை வந்தது.

“எங்கேயாவது ஓடிப் போயிருக்குமா?” தன்னைத்தானே கேட்டுக்கொள்வதுபோல் கேட்டாள் அருணா.

“பூனைக்குட்டி தானே ஓடாது,” என்றார் அப்பா, அவளுக்கு மட்டும் கேட்கும்படி.
இரண்டு நாட்கள் கழிந்தும், பூனைக்குட்டி போன இடம் தெரியவில்லை.

அருணா தோட்டத்துக்கு வரும்போதெல்லாம், தாய்ப்பூனை ஏக்கமாக ஓலமிட்டபடி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது அவளுக்குள் எதையோ அசைத்தது..

“ஒன் பேபி காணுமாடா? வந்துடும்,” என்று அதனுடன் பேசி, ஆறுதல் அளிக்க முயன்றாள். மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். ஆதரவுடன் அதன் உடலின் மேற்பகுதியைத் தடவிக்கொடுத்தாள்.

அவளுடைய அன்பான வார்த்தைகள் அதற்குப் புரியவில்லையோ, அல்லது தன் வேதனை இன்னொரு தாய்க்குப் புரிகிறதே என்றோ, அதே நடத்தை தொடர்ந்தது. தானே அவள் மடியில் வந்து உட்கார்ந்துகொண்டது. பூனையின் ரோமம் ஒவ்வாமை உண்டாக்க, உடனே கையிலும், காலிலும் சருமம் தடித்துவிட்டது..

“இப்போ எதுக்கு அந்த கர்மத்தைத் தூக்கி மடியில் வெச்சுக்கிட்டுக் கொஞ்சறே?” என்று அம்மா ஆட்சேபித்தாள். கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போகப் போகிற மகளுடைய உடல் நலம் பாதிக்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தில் வார்த்தைகள் சற்றுக் கடுமையாகவே வந்தன.

அப்பா எதுவும் சொல்லாது, மரவள்ளிக்கிழங்கு மாவை நீரில் குழைத்து, “போட்டுக்க. அலர்ஜி சரியாகிடும்,” என்று அவளிடம் நீட்டினார்.

ஆனால், குட்டியை விட்டுவிட்டு, தான் மட்டும் சாப்பிடுவதா என்று நினைத்தது போல், பூனை ஆகாரத்தைத் தொடவில்லை.
`ஒரு வேளை, சாப்பிட்டால் பால் சுரக்கும்; இனி யாருக்குக் கொடுக்கப்போகிறேன் என்ற விரக்தியோ அதற்கு?’ என்ற சந்தேகம் எழுந்தது அருணாவுக்கு.

மஞ்சுவும் ரொம்பவே ஏங்கிப்போனாள். உற்சாகம் குன்றி, சாப்பிடப் பிடிக்காமல்..!

“சீக்கிரமே இன்னும் நிறைய குட்டி போடப்போகுது பெரிசு!” என்று அவளுக்கு நம்பிக்கை அளிக்கப் பார்த்தார் அப்பா.

“அதோட வயத்தைப் பாத்தியா? எவ்வளவு பெரிசு! அதுக்குள்ளேதான் குட்டி எல்லாம் இருக்கு!” என்றாள் அம்மா, தன் பங்குக்கு.
அப்படியும் சமாதானமாகாமல், மஞ்சு அழுதபடியே தூங்கப்போனதும், “பூனைக்குட்டி அப்படி எங்கதாம்பா போயிருக்கும்?” என்று தந்தையைக் கேட்டாள் அருணா. இருவரும் வாசலிலிருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர்.

“இப்போ பெரிசு கர்ப்பமா இருக்கில்லே? அதுக்குக் காரணமாயிருந்த ஆண்பூனை இந்தக் குட்டியைக் கொன்னிருக்கும், இது தன் குட்டி இல்லேன்னு!” என்றோ படித்ததை சற்றும் உணர்ச்சி இல்லாத குரலில் அப்பா விவரித்தார்.

அருணா அடைந்த அதிர்ச்சியைப் பார்த்து, “பூனை உலகத்திலே இது சகஜம்தான்! என்றார், கையை ஒருமுறை அலட்சியமாக வீசியபடி.

சட்டென, அருணாவின் நினைவில் எழுந்தான் மோகன்.
அவனுக்கும், அந்த ஆண் பூனைக்கும் என்ன வித்தியாசம்?

பூனைக்கு சிந்திக்கும் திறனில்லை. அதனால், உடனுக்குடனே கொன்று விடுகிறது. போட்டி மனப்பான்மை என்னவோ ஒன்றுதான்.
“மோகன்கிட்ட ஒன் சம்மதத்தைச் சொல்லிடு,” அப்பா ஊக்கினார். “மஞ்சு இல்லாட்டி எங்களுக்கும் வெறிச்சுனு இருக்கும்!”

தன் சுகத்துக்காக மோகனை மணந்து, சுமந்து பெற்றதை இழந்து, அந்த வேதனையைப் பொறுக்க முடியாது, தான் எதையோ, யாரையோ சுற்றிச் சுற்றி வருவதுபோல பிரமை எழுந்தது அருணாவுக்குள்.

“எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம்பா! மஞ்சுதான் வேணும்!” என்றாள் அருணா. குரல் தெளிவாக இருந்தது.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *