–கி. கண்ணன்.

 

 

முன்னுரை
தமிழ் மொழியின் எதிர்காலம் இணையத்தின் கையில் உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், சங்க இலக்கியத் தமிழ், காப்பிய இலக்கியத் தமிழ், பக்தி இலக்கியத்தமிழ், இக்கால இலக்கியத் தமிழ் என்ற நிலைகளிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று இன்று இணைய இலக்கியத் தமிழ் என்ற உயரிய நிலையில் தமிழ் இலக்கியம் வளர்ந்து வருகின்றது. இணையத்தின் வாயிலாக இன்றைக்கு தமிழ் மொழியின் பரவலை அதிகரிக்க முடியும் என்று நிருபித்திருக்கின்றன வலைப்பூக்கள். இவ்வலைப்பூக்கள், வலைப்பதிவு, வலைக்குறிப்பு, வலைக்குடில் [1] என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. வலைப்பூக்களின் வளர்ச்சி அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு வலைப்பூக்களின் முக்கியத்துவத்தினை நன்குணரமுடிகிறது. அப்படிப்பட்ட வலைப்பூக்களின் வாயிலாக தமிழ் மொழி பெற்றுள்ள வளர்ச்சியினை வெளிக்கொணருவதாக இக்கட்டுரை அமைகிறது.

வலைப்பூக்கள் அறிமுகம்
”வலைப்பூ என்பது எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக்கோப்புகள், ஓவியம், படங்கள், என்பனவற்றை நாமே இணையம் வழி வெளியுலகிற்குத தெரிவிக்கும் இணைய சேவையாகும்.”[2] என்பார் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள். ஆங்கிலத்தில் Blog என்று அழைக்கப்படும் இது இரு இணைய சொற்களின் கூட்டுச் சொல்லாகும். Web – log என்று வழங்கிய வலைப்பூ Blog என்ற பெயரில் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. தமிழில் முதல் வலைப்பதிவு 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் முதல் பதிவை கார்த்திகேயன் இராமசுவாமி என்பவர் பதிவு செய்தார் [3] என்றும் தமிழ் விக்கிபீடியா விளக்கியுள்ளது..

வலைப்பூ அமைப்பு
Blog என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு என்றும் வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுது என்றும் பொருள் தருகிறது. Blogger என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுதுபவர் அல்லது வலைப்பதிவு ஆசிரியரைக் குறிக்கின்றது. Blogging என்பது வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவில் எழுதுதல் என்றும் பொருள் தருகின்றது. மேலும்,
ஒவ்வொரு வலைப்பூவும் கீழ்க்கண்ட சில அடிப்படை அமைப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றன.
• வலைப்பூவின் பெயர் – வலைப்பூ ஆசிரியர் தன்னுடைய வலைப்பூவிற்கு வைக்கும் பெயர் தன் விருப்பத்திற்கேற்ற விதத்தில் இருக்கும்.
• வலைப்பூவின் முகப்பு – வலைப்பதிவர் தம்மைப் பற்றியும் தன் வலைப்பூவின் நோக்கம் பற்றியும் விளக்கும் பகுதி.
• வலைப்பூவின் தலைப்பு – புதியதாக பதிவு செய்யும் படைப்பிற்கு இடும் பெயர் ஆகும்.
• பூவின் உள்ளமைப்பு – தலைப்பைத் தொடர்ந்த கட்டுரைப் பகுதி.
• வலைப்பூ பதிப்பித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் – வலைப்பூ ஆசிரியர் தான் பதிப்பிக்கும் பதிப்பின் விவரம் தெரிவிக்கும் பகுதி.
• பின்னூட்டங்கள் – தான் வெளியிட்ட பதிப்பினைப் படித்த வாசகர்கள் தரும் விமர்சனம்.
• சேமிப்பகம் – பதிவுகளை சேமிக்கும் பகுதி.
• இணைப்புகள் – தன்னுடைய வலைப்பூவிலிருந்து வேறொரு தளத்திற்கு செல்லும் பகுதி.
• வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் – வலைப்பூவின் இருபுறமும் அமைந்திருக்கும் இணைக்கப்படும் பக்கக்கூறுகள் போன்றனவாகும்.

தமிழ் வலைப்பூக்கள்
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கணினியில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தமிழில் மென்பொருள்களும் எழுத்துருக்களும் முறையாக வெளிவந்த பிறகுதான் இணையத்தை அனைவராலும் பயன்படுத்த முடிகிறது. அதன் வெளிப்பாடாக, தற்போது தமிழ்மொழியில் நிறைய வலைப்பூக்கள் வெளிவந்து கொண்டிருப்பதைக் கொண்டு அறிய முடிகிறது.

வலைப்பூக்கள், அவற்றில் பதிப்பிக்கும் ஆசிரியரைப் பொறுத்து அதனைத் தோற்றுவித்த நோக்கத்தினைப் பொறுத்து தமிழின் ஆளுமைகள் மாறுபடுகின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்றால் அதில் தமிழின் வெளிப்பாடு தரமானதாக இருக்குமா என்பது சந்தேகமானதாகவே உள்ளது. மாறாக, இலக்கிய நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட வலைப்பூக்களில் தமிழின் பயன்பாடும் இலக்கியத்தரமும் மிகுந்து காணப்படும். அவற்றில் சில…

மு.இளங்கோவன் வலைப்பூ

muelangovan.blogspot.in
பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களால் muelangovan.blogspot.in [3] என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை இலக்கியம், நாட்டுப்புறம், இலக்கியவாதிகள் பற்றிய விமர்சனம் ஆகியன பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இவரது அச்சக ஆற்றுப்படை என்னும் நூலினை வலைப்பூவில் பதிவு செய்து வைத்துள்ளதில் தமிழ் மரபுக் கவிதைகளின்பால் இவருக்கு இருக்கும் ஆர்வத்தை பறைச்சாற்றுவதாய் அமைந்துள்ளது. இவரது வலைப்பூவில் இணைய பயிலரங்கம், கருத்தரங்கம் போன்ற இணையத்தில் தமிழ்மொழி, தமிழிலக்கியம் சார்ந்ததாக உள்ளது.

manikandanvanathi.blogspot.inமணிவானதி வலைப்பூ
பேராசிரியர் முனைவர் து. மணிகண்டன் அவர்களால் 2009 ஆம் ஆண்டு முதல் manikandanvanathi.blogspot.in [4] என்னும் பெயரில் வலைப்பூ மணிவானதி என்ற தலைப்புடன் துவங்கப்பட்டு பல இலக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளையும் தமிழ்மொழி சார்ந்த இணைய பயிலரங்கப் பதிவுகளையும் காணமுடிகிறது. இவரது இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் போன்ற நூல்கள் இணையத்திலும் வலைப்பூக்களிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.

Arivumathi.blogspot.inஅறிவுமதி வலைப்பூ
கவிஞர் அறிவுமதியின் வலைப்பூ. Arivumathi.blogspot.in [5]  என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவரது படைப்புகள் பெரும்பான்மை கவிதை நடையையே பின்பற்றி இருக்கின்றன. சமூகச் சாடல்கள் அதிகம் காணப்படும் இவரது கவிதைப் பதிவுகளில் எதார்த்தமும் இயல்பான நடைமுறை அவலங்களும் அதிகம் காணப்படுகிறது.

duraiarasan-blogதுரையரசன் வலைப்பூ
அழகு தமிழில் இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்வதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் அவர்கள். இவரது வலைப்பூ duraiarasan.blogspot.com [6 ]என்பதாகும். 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவுகளை செய்து வரும் இவர் புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள், அகநானூறு 99 மலர்கள், திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்ற தலைப்பில் பயிலரங்கமும் இணையத்தில் தமிழ்த் தரவுகள் என்ற இணையதள கருத்தரங்கமும் இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளமை வலைப்பூவில் இவரது தமிழ் ஆளுமையைப் பறைச்சாற்றுகின்றது.

gunathamizhகுணசீலன் வலைப்பூ
வேர்களைத் தேடி என்ற தலைப்பினைக் கொண்ட www.gunathamizh.com [7] வலைப்பூ பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களால் இன்று வரை தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கலை, இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் சார்ந்த பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். வலைத்தளத்திலும் வலைப்பூவிலும் தமிழ் தரவுகளைப் பதிவு செய்வது இவரது தலையாயப் பணியாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. தமிழ் வலைப்பூக்களைப் பற்றிய தொகுப்பு இவரது பதிவில் தொடர்பாய் உள்ளது நோக்குதற்குரியது.

இவ்வலைப்பூக்கள் மட்டுமே அல்லாமல் பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் குழந்தைகள் பாட்டு, கவிதை, கட்டுரை என அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்து எண்ணற்ற பல வலைப்பூக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

வலைப்பூக்களின் இலக்கியப் பணி
இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள் தமிழ் வலைத்தளத்தில் அதிகமாக வெளிவரத்தொடங்கியுள்ள இந்த இணைய இலக்கிய காலத்தில் வலைப்பூக்களினால் சங்க இ.லக்கிய நூல்களும் அதற்குப் பிறகு தோன்றிய எல்லா வகையான இலக்கண இலக்கிய நூல்களையும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அடுத்த தலைமுறையினரிடையே தமிழ் இலக்கியம் பற்றிய முழுமையன புரிதலை ஏற்படுத்த இத்தகைய வலைப்பூக்கள் பெரிதும் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காகிதங்களில் கரையான்களுக்கு இரையாக்கிய காலம் மாறி இன்று எவ்விதத்திலும் அழியாத நிலையில் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பன்னெடுங்காலமும் மக்கள் படிக்கவும் பயனுறவும் இத்தகைய இணைய பதிவுகள் துணை நிற்கின்றன.

தமிழ் வலைப்பூக்கள் மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம், பண்பாடு உள்ளிட்ட கருத்தோட்டங்களைத் தாங்கி வருகின்றன. இவற்றின் வருகையால் தமிழ் ஆய்வுப் பரப்பில் புத்தெழுச்சித் தோன்றியுள்ளது.8 என்கின்றார் முனைவர் க. துரையரசன். இலக்கியத் தரம் வாய்ந்த வலைப்பூக்கள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல பூக்கள் இணையத்தையும் தமிழ்மொழியினையும் இன்றும் அலங்கரித்து வருகின்றன.

முடிவுரை
கல்வெட்டுகளிலிருந்து ஓலைக்கும் ஓலைகளிலிருந்து காகிதத்திற்கும் மாறிய தமிழ் மொழி இன்று கணினி தமிழாக மாறியிருப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை பதிவின் மூலம் வெளியிடுவதனால் பிற நாடுகளில் வாழும் தமிழ்ச் சான்றோர்களாலும் விமர்சிக்கக் கூடியதாக அமைகிறது. இலக்கிய – இலக்கண வளர்ச்சிக்கும் தமிழின் தொன்மையும் பழமையும் வெளி உலகிற்கு தெரியப்படுத்திட இன்றைக்குக் கட்டாயமான தேவையாக வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் உள்ளன.

துணை நூற்பட்டியல்
1. http://ta.m.wikipedia.org/wiki/
2. முனைவர் துரை. மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், ப. 11
3. muelangovan.blogspot.in
4. manikandanvanathi.blogspot.in
5. Arivumathi.blogspot.in
6. duraiarasan.blogspot.com
7. Gunathamih.blogspot.com
8. முனைவர் க. துரையரசன், இணையமும் இனிய தமிழும், ப. 100

 

 

கி. கண்ணன்,
முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வலைப்பூக்களில் தமிழ் ஆளுமைகள்

  1. தங்கள் கட்டுரையில் பல வலைத்தளங்கள், வலைப்பூக்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். தஞ்சையில் இருந்து கொண்டு நான் வெளியிடும் இந்த நான்கு வலைப்பூவையும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
    1. http://www.bharathipayilagam.blogspot.com
    2. http://www.ilakkiyapayilagam.blogspot.com
    3. http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
    4. http://www.tamilnaduthyagigal.blogspot.com. 
    V.Gopalan

  2. பாரதியின் மீது தாங்களுக்கு உள்ள பக்கி, ஈடுபாடு , காதல் என அனைத்தையும். கண்முன் காட்டியுள்ளீர்கள். மேலும் கம்பராமாயணம் உரைநடை விளக்கமும் படிப்பதற்கு எளிமையாக உள்ளது. இது போன்ற இலக்கிய தரத்தோடு கூடிய வலைப்பூக்கள்  தான் தேடி வருகிறேன் .
    சுதந்திர போராட்ட தியாகிகளின் விளக்கம் என்னை முற்றிலுமாக. அடிபணிய வைக்கிறது.
    மிக்க மகிழ்ச்சி ஐயா…. தங்களின் வருகைக்கும் அறிமுகத்திற்கும் ….
    ஒருமுறை அல்ல. இனி ஒவ்வோரு இடுகையையும் நான். ஆய்வு நோக்கில் உற்று நோக்குடன் ஐயா…. நன்றி ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *