நாகேஸ்வரி அண்ணாமலை

பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தடாலடியாகப் பல சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறது.  தான் செய்ய விரும்பும் பல காரியங்களுக்கு மத்திய அரசில் போதிய பெரும்பான்மை இல்லாததால் அரசு ஆணையாகப் பிறப்பித்துக்கொண்டிருக்கிறது.  மாநிலங்களில் இப்போது பி.ஜே.பி. ஆட்சி நடத்தும் மஹாராஷ்ட்ரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் பசுக்களைக் கொல்வதை சட்டவிரோத செயலாக்கி அந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  பசுக்கள் கிருஷ்ணனின் நண்பன் என்பதாலும் இந்து மதத்தில் பசுக்கள் புனிதமாகக் கருதப்படுவதாலும் பசுக்களைக் கொல்வது இந்து மதத்திற்கு விரோதமான செயல் என்று கருதிப் பசுக்களைக் கொல்வது பாவம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  இந்தப் பசு வதைச் சட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.

பசு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பசு வதையைத் தடுக்கும் இந்தச் சட்டத்தை வன்மையாகக் கண்டித்து தங்கள் சுதந்திரத்தில் அரசு தலையிடுவதாகக் கூறுகிறார்கள்.  பல பொருளாதார நிபுணர்கள் பல கலாச்சாரங்கள், மதங்கள், செல்வநிலைகள் இருக்கும் இந்தியாவில் எல்லோரும் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று சொல்வது சரியில்லை என்றும் இந்தியப் பொருளாதாரத்தையே இது பாதிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

வேதங்களில் போற்றப்படுவதால் பசுக்களையும் இனப்பெருக்கத்திற்குத் தேவைப்படுவதால் எருதுகளையும் கொல்லக்கூடாது என்று பி.ஜே.பி. அரசு சட்டம் இயற்றியிருக்கிறதாம்.  இந்த இரண்டு பிராணிகளை மட்டும் மனிதன் வதைக்கு உள்ளாக்கக் கூடாது என்று கூறுபவர்கள் ஏன் மற்றப் பிராணிகளை விட்டுவிட்டார்கள்?  மாடுகளோடு நெருங்கிய தொடர்புடைய எருமைகளைக் கூட ஏன் மனிதன் வதைக்கக் கூடாது என்ற வர்க்கத்தில் சேர்க்கவில்லை?  அதோடு மற்ற மிருகங்கள் என்ன பாவம் செய்தன, அவற்றை மனிதன் வதைத்தால் அது தவறில்லை என்று ஏன் நினைக்கிறார்கள்?  வேதங்களில் மனிதர்கள் மாட்டிறைச்சி, குதிரை இறைச்சி ஆகியவற்றையும் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.

இவர்கள் கூறும் காரணங்கள் தவிர மற்ற எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன எந்த பிராணிகளையும் கொல்லக் கூடாது என்பதற்கு.  கொல்லாமையைப் பற்றித் திருவள்ளுவர் கூறியிருப்பதை இங்கு நினைவுகூருவோம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கற்றறிந்தவர்கள் சொல்லும் வாழ்க்கை நெறிகளில்  இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்தும் மற்ற உயிர்களைக் கொல்லாமலும் உண்பதே சாலச் சிறந்தது.

இதற்கு இன்னொரு வகையாகவும் அர்த்தம் கொள்ளலாம்.  பகுத்துண்டு என்று வள்ளுவர் சொல்வதை இயற்கையில் கிடைப்பதை நாம் பிராணிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றும் தோன்றுகிறது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.

உன் உயிரை இழக்க நேர்ந்தாலும் மற்ற எந்த உயிரையும் எடுக்கும் காரியத்தைச் செய்யாதே.  இதை உன் உயிரைக் காக்கப் பிற உயிரைக் கொல்லாதே என்று சொல்வதாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

எந்த பிராணிகளையும் கொல்லாதவனை, பிராணி இறைச்சியை உண்ண மறுத்தவனையும் உலகத்து உயிர்கள் எல்லாம் கைகூப்பி வணங்கும் என்பது இதன் கருத்து.

(தமிழ்ப் புலவர் திருவள்ளுவரை சுவீகரித்துக்கொண்ட பி.ஜே.பி. இந்தியா முழுவதும் அவரைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் போவதாகவும் அவர்தான் இந்தியாவுக்கே வழிகாட்டி என்றும் கூறியதெல்லாம் என்னவாயிற்று?  தமிழ்நாட்டில் ‘அம்மா’ புராணம் தவிர மற்ற எந்தப் புராணத்தைக் கொண்டும் தமிழ் மக்களை ஓட்டுப் போடவைக்க முடியாது என்று புரிந்துகொண்டார்கள் போலும்!)

எல்லாக் காலத்திற்கும் எல்லா சமூகங்களுக்கும் பொருந்துகிற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், எல்லா உயிர்களையும் நேசிப்பவர் கூறுவதை நாம் எவ்வாறு புறக்கணிப்பது?

என்னோடு எட்டாம் வகுப்பில் படித்த ஒரு கிறிஸ்தவப் பெண் பைபிளில் ‘அடித்துப் புசி’ என்று கூறியிருப்பதாகவும் இறைவன் படைப்பில் உள்ள எல்லா ஜீவன்களையும் மனிதன் தன் தேவைகளுக்கு உபயோகித்துக்கொள்ளலாம் என்று கூறியிருப்பதாவும் கூறியிருக்கிறாள்.  நிச்சயமாக அன்பின் வடிவான இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார்.  அவர் கூறியதாக பின்னால் வந்தவர்கள் கூறியதுதான் பைபிளில் இருக்கும் அத்தனை போதனைகளும்.

திருவள்ளுவர் கூறியது இருக்கட்டும்.  பிராணிகளின் ஊனைச் சாப்பிடுபவர்கள் அது எப்படி தங்கள் சாப்பாட்டுத் தட்டிற்கு வந்தது என்று எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா?  அவர்கள் உண்ணும் ஊனுக்குரிய பிராணி வதைபட்டுத் தன் உயிரை இழக்கும்போது அது அவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா?  உங்கள் கைகளில் காய்கறி, பழங்கள் நறுக்கும் சிறிய கத்தி பட்டு காயம் ஏற்பட்டால் எவ்வளவு வலிக்கிறது?  ஒரு சின்ன காயத்திற்கே அத்தனை வலி ஏற்படுகிறதென்றால் பிராணிகளின் கழுத்தையே வெட்டினால் அவற்றிற்கு எவ்வளவு வேதனை உண்டாகும்?  ஒரு நண்பரிடம் பிராணிகளுக்கு அவற்றைக் கொல்லும்போது எவ்வளவு வலிக்கும் என்று கூறியபோது அவர் அவை உயிரோடு இருந்தால்தானே அந்த வேதனையை உணர்ந்து நினைப்பதற்கு என்று கேட்டார்.  அவை உடனேயே இறந்துவிடுகின்றன என்றே எடுத்துக்கொண்டாலும் கொல்லப்படும்போது அவை அந்த வேதனையை உணராமல் போவதற்கு சாத்தியமே இல்லை.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே அவற்றைப் பறிக்கும்போது அவற்றுக்கு வேதனை ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூறுகிறீர்கள் என்பது ஒரு சாரார் வாதம்.  தாவரங்களைப் பறிக்கும்போது அவை இரத்தம் சிந்துவதில்லை, வேதனையால் துடிப்பதில்லை.  இந்த ஒரேயொரு காரணத்திற்காகவாவது பிராணிகளை வதைக்காமல், கொல்லாமல், தின்னாமல் இருக்க வேண்டியது மனிதனின் கடமை.

சட்டம் இருக்கிறதோ இல்லையோ மனிதன் தானாக எப்போது மிருக வதையை நிறுத்தப் போகிறான்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *