ஒருவனின் கடைசிப் பக்கத்திலிருந்து…

0

-ரோஷான் .ஜிப்ரி, இலங்கை

நெஞ்சுரங் கொண்டு நிலம் பற்றி
நிமிர்ந்து நடந்தவன் நீள் துயிலில்
அவனின் பிறப்பிலிருந்து மொழிபிரித்த
வாழ்வின் கடைசிப் பக்கத்தை இன்று
வாசித்து முடித்திருந்தது காலம்

பரிச்சயங்களை மீறிய பரபரப்பாய்ப்
பெரும் பரப்பைத் தன் பிடிக்குள் வைத்து
கோலோச்சியவனால்
மரணத்தை எதிர்கொள்ள முடியவில்லை
அது வென்றுபோனது அவனை வீழ்த்தி
இடுவம்புகளால் வளர்ந்த நெடு வாழை
கொழுகொம்பு இன்றி குலை முறிந்து
ஆறடிக்குள் அடங்கும் கூடாய் இந்நொடி

ஒரு காலத்தில் குகைகள் ஏகி
சிங்கத்தைக் கர்ஜித்து சீண்டிப் பார்த்தவன்
இன்று ஈயை விரட்ட இயலா ஜடம்
உருகி உருகிக் கரைந்தன அவனை சுற்றியிருந்த
மலைகளும்,கூழாங்கற்களும்

ஊர்க் குருவிகள் அவனால் நேர்ந்த கதிகளின்
இலாப நஷ்டங்கள் பற்றிச் சிலாகித்தன
பேசாதிருந்தவனும் தன்பங்குக்கு
உடைந்து போய் நிற்கிறான் கால்மாட்டில்

அவனின் கடைசிப் பக்கத்திலிருந்து
முதலாவது, இரண்டாவது எனப்
பின் குறிப்புகள் தலை நீட்ட
நிசப்தம் கலைய வேண்டும் என்றே
பிரளயம் முடுக்கி விடப் படுகின்றது

அவன் உள்ளவரை
தேவதூதர்களைப் போலும்,
தாசில்தார்கள் போலும் இருந்தவர்கள்
ஆனால்; இப்போது
மேல் சொன்ன எதிலும் இல்லாத
“கழிசடைகளாய்” வசைகளால் வாழ்த்த
அவர்களின் முழுப் பக்கங்களும் விரிகின்றன
சொத்தைப் பங்கிடும் பச்சா தாபங்களில்!

ஏலவே தெரிந்திருப்பின்
எப்போதோ அவன்
இவர்களை விட்டும்
இறந்திருக்கலாம்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *