தள்ளியே நின்று கவனி!
-மீ. விசுவநாதன்
“மலை மிக அழகு
பச்சையாய், நீலமாய் …
தள்ளி நின்று பார்க்கும் பொழுது…
நீ நெருங்க நெருங்கப்
பூக்களும், புலிகளும், கொடிய விஷப்
பாம்புகளும், காட்டு நாய்களும், பன்றியும்,
பச்சோந்திகளும், அருவியும், பாறையும், கல்லுமாய்
ஆதிவாசி மனிதக் கூட்டமாய்….ஒற்றை யானையாய்……
கவிதையை ரசிக்க விடாத இலக்கணப்புலியாய்……
தள்ளியே இரு…ரசி
நெருங்க நெருங்க நிம்மதி போகும்…..
நீலக்கடல்….விரிந்து பரந்த உலகந்தான் ……
அழகோ கொள்ளை அழகு…
ரசி..பார்த்துப் பார்த்து ரசி..
கரையை விட்டு நீருக்குள் கால்வைத்தால்
அலைகள் உன்காலை அணைப்பதுபோல்
உன்காலடி மண்ணைக் கழுவிக் கொண்டு போய்
உன்னைக் கீழே தள்ளி வாயில் மண்ணை அப்பும்….
ஒரு அலை அழைக்கும், ஒரு அலை அடிக்கும்
ஒரு அலை ஒரேடியாக உன்னை அமுக்கிவிடும்.
ரசி…கரையில் நின்றபடி ரசி…
ஆழம் தெரிந்து அமைதியோடிரு…..
வாழ்வும் அப்படித்தானோ….?