ஜெயகாந்தனுக்கு இரங்கற்பா!
தமிழகத்தில் முதன்மை பெற்றாய்!
சி. ஜெயபாரதன், கனடா
வாழ்க நீ நண்பா ! இந்த
வையத்தமிழ் நாட்டி லெல்லாம்
பாழ்பட்ட தமிழகத்தில் உயர்ந்த
படைப்பா ளியாய்த் தனித்து நின்றாய்;
தாழ்வுற்ற மனிதர் பற்றித்
தரமுடன் எழுதி வைத்தாய்;
ஆழ்ந்து சமூக நோய்கள் காட்டி
ஆக்கத்தில் முதன்மை பெற்றாய்!
என்னே உன் இதயத் துணிச்சல் !
என்னே உன் எழுத்தில் அழுத்தம் !
என்னே உன் பேச்சில் புரட்சி !
என்னே உன் கற்பனை எளிமை !
என்னே உன் மனிதர் படைப்பு !
என்னே உன் கதைகள் அமைப்பு !
என்னே உன் வாழ்வின் குறிக்கோள் !
எழுத்திலே முதன்மை பெற்றாய்!
புத்துயிர் பெறும் தமிழ்ப் படைப்பு
புனைகதை பெறும் மெய்வடிவம்
பித்தர் தெருவாழ் மாந்தர்க்குன்
பேனா மெய்யுரு அளிக்கும்;
இத்தரை வாழ் திரை நடிகர்
இயல்புடன் நடிக்க வைத்தாய்;
முத்திரைத் திரைப்படம் இயக்கி
முயற்சியில் முதன்மை யுற்றாய்!