நான் அறிந்த சிலம்பு – 164
-மலர் சபா
பூதம் கொன்ற தீயோனின் சுற்றத்தாரைப் பாதுகாத்தமை
கற்பில் சிறந்த பத்தினி ஒருத்தி
பொய்ப்பழி மேற்கொள்ளும் வண்ணம்
அவள் கணவனை நம்பவைப்பதற்காக
நடந்தே இல்லாத ஒன்றைப்
பொய்சாட்சியாகக் கூறினான் ஒருவன்
இவ்வாறு தவநெறி மறந்து ஒழுகுபவரைக்
கரிய கயிற்றால் கட்டித்
தரையில் அறைந்து உண்ணும் பூதம் சதுக்கபூதம்
இவனையும் அவ்வாறே பற்றி நிற்க,
அவன் தாய் பெருந்துன்பமுற்றாள்
அதனைத் தாங்காத நீ விரைந்து சென்று
அக்கயிற்றினுள் கட்டுப்பட்டு
‘என் உயிர் எடுத்து இவன் உயிர் தருவாய்’
என வேண்டினாய்
நேர்மையுடைய அப்பூதம்
அதற்குச் சம்மதிக்கவில்லை
‘கீழ்மையான இவனின் உயிருக்குப் பதிலாய்
நல்லவன் ஒருவனின் உயிரை
மாய்க்கும் வழக்கம்
என்னிடத்தில் இல்லை
உன் எண்ணத்தை விட்டுவிடு’ என்றே கூறி
அக்கணமே அவர்கள் முன்னே
அவனை அறைந்து கொன்று தின்றது.
துன்பம் கொண்ட தாய்க்கும்
அவள் சுற்றத்தாருக்கும் சேர்த்து
பொருள் வழங்கி அவர் பசிப்பிணி போக்கி
உன் சொந்தம் போலவே அவர்களை நடத்தினாய்
அத்தகைய மனமுடைய
இல்லாதோர்க்கு அள்ளி வழங்குபவன் நீ
அறிவில் முதிர்ந்த கோவலனே!
எனக்குத் தெரிந்தவரை இப்பிறப்பில்
நீ செய்தவை எல்லாம்
நல்வினைகள் தாம்;
எனவே, இலக்குமியை ஒத்த
மாணிக்கத் தளிர்போன்ற கண்ணகியுடன்
மிக்க துன்பமுற்று இங்கே வந்திருப்பது
முற்பிறப்பில் நீ செய்த தீவினையின்
காரணமாய் இருக்குமோ” என்றே
கோவலனிடம் கூறினான் மாடலன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 94
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
படத்துக்கு நன்றி: கூகுள்