விவசாயி
-மீனா கண்ணதாசன்
அவன் ஏர் பிடிக்க
அவன் புகழ் படிக்க
ஏழை விவசாயின்
பெருமை பாடப்
பட்டமும், படிப்பும்
எழுத்துக்களும்
மண் வாசம் பெற்று
உழவனின் நேசத்தில்
பெருமையடைகின்றன!
விண்ணும், மண்ணும்
உறவென வாழ்ந்தாயோ…
மண்ணின் வாசம்
இவனுக்கு உயிர் சுவாசம்
மண்ணையும் சுவாசித்துப் பார்
விவசாயின் வியர்வை வாசம் வரும்
வட்டிக்குப் பணம் வாங்கி
விதைநெல் வாங்கி
முத்துப் போல் விதைத்துக்
கர்ப்பம் போல் காத்துப்
பெற்றெடுத்த பிள்ளை
போல் வளர்த்து…
நோய், நொடியின்றிக் காத்துப்
பக்குவமாய் அரும்பாடுபட்டு
அல்லும் பகலும் உழைத்து
முத்து மணிகளைப் போல்
நெல்மணிகளைச் சேர்ப்பான்
பேரம் பேசும்
பணக்கார மனிதர்களிடம்!
அழுக்கு உடையில் இருந்தாலும்
அழுக்கில்லா உள்ளம் படைத்தவனே…
உழைப்பால் மற்றவர்களுக்குப் பசி, ருசி
கொடுத்தவனே விவசாயி…
விவசாயின் நிலையோ
பசியால் வாடி,
வறுமையில் நொந்து
உனது அன்றாட வாழ்வும்
துயரப்படும்
நிலை தானோ இவ்வுலகில்…?
உழவன் நிலை மாற வேண்டும்
விவசாயமும், விவசாயியின்
வாழ்வும் செழிக்க வேண்டும்!