அன்னையே தெய்வம்!
–ரா.பார்த்தசாரதி
தாயே விளைநிலமாம் தந்தையே வித்தாம்
குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம்!
பெண்முழுமை அடைவதும் தாய்மையாலே
தாயாக மாறுவதும் அந்தத் தாய்மையாலே!
கருவறையில் உன்னை வைத்துக் காக்கின்றாள்
தனக்கென்று உண்ணாது உனக்காக உண்கிறாள்
பெண்ணிற்குப் பிரசவம் என்பதே மறுபிறப்பு
இதனை அறியாத மானிடப் பிறப்பு !
பிறந்த மேனியுடன் வெளிஉலகிற்கு வந்தாய்
தாய், தந்தைக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!
உனக்காகக் கண்விழித்துத் தூக்கத்தை மறந்தேன்
உனக்காக என் குருதியைப் பாலாக பொழிந்தேன் !
தோளையே தூளியாக்கி உன்னைச் சுமந்து செல்கின்றேன்
நீ பிறக்கும்போது நான் சுமந்த வலியை விடவா?
நீ பசி தூக்கத்தை அழுது வெளிப்படுத்துகின்றாய்
உன் கள்ளமில்லச் சிரிப்பாலே கவலைகள் போக்குகின்றாய் !
உன் அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை இருப்பு
உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு !
உன் வளமே எங்கள் சிறப்பு
உன் நினைவே பாசத்தின் பிணைப்பு !
குழந்தையின் வளர்ப்பு தாய் தந்தையின் கடமையே
அன்னையின் வார்த்தைகள் குழந்தைக்கு இனிமையே
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
திசை நான்கும் அவள் போல் எவருமில்லை !