முயலாமை!
—சுரேஜமீ.
அம்மா மதுரம் அவர்கள் திருவரங்கத்தைச்(Srirangam) சேர்ந்தவர்கள் என்பது தாங்கள் அறிந்ததே! கவிஞர் வாலி அவர்களும் அதே ஊரைச் சார்ந்தவர்தான்! வாலியின் இளமைக் காலங்களில், அய்யா என்.எஸ்.கே வைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அப்போது, மதுரம் அம்மாவின் தம்பி மணி அவர்களும், வாலி அவர்களும் நண்பர்கள் என்பதால், அவர்கள் மூலம், உங்கள் அத்தான் (என்.எஸ்.கே) வரும்போது, சந்திக்க ஏற்பாடு செய் எனக் கேட்க, அந்த சந்திப்பும் நடந்தேறி இருக்கிறது.
என்.எஸ்.கேயிடம் தன்னை ஒரு தமிழ் ஆர்வலர் என்றும், பாட்டில் நாட்டம் உண்டு எனவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார் வாலி. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட என்.எஸ்.கே அவர்கள்,
தம்பி நீ சொல்றதெல்லாம் சரி. நான் உன்னை ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு சரியான பதிலை சொல்லு அப்படின்னு சொல்லி,
‘முயலும் ஆமையும் கதை கேட்டிருக்கேளே …அது சொல்ற நீதி என்னனு சொல்லு! என்று கூறியிருக்கிறார்!
ஏதேதோ சொல்லியும், கடைசி வரை கலைவாணர் எதிர்பார்த்த ஒற்றை வரி நீதி சொல்ல இயலவில்லை வாலி அவர்களால்!
தலையைச் சொறிந்து கொண்டே….அண்ணே நீங்களே சொல்லுங்களேன்! அப்படின்னு வாலி கேட்க,
கலைவாணார் சொன்ன பதில் என்ன தெரியுமா?
‘முயலாமை’!
இதுதான் கலைவாணாரின் சிறப்பு!
(நன்றி: அருமைச் சகோதரர் NSK நல்லதம்பி)