பெண்ணென்று பிறத்தல்
பெரும் பாக்கியமாம் பூமியிலே
நானும் பிறந்தேன் பெண்ணாக…
ஆசைகளோடு மலர்ந்தேன்
அரும்புகளாக எண்ணங்களை
என்னுள்ளே வளர்த்தேன்…
புரிந்துகொள்ள இப்பூமி
ஏன் தவறிப்போனதோ…?
பெண்பார்க்கும் படலங்கள்
எத்தனை என் வாழ்விலே…!
வந்தவரெல்லாம் என்
வதனத்தைப் பார்த்தார்களா?
சீர்வரிசைக்கான பண
அடுக்குகளையே பார்த்தார்கள்
பணத்திற்காய் விற்கப்படும்
பொருளாகினாளா பெண்..?
இல்லை சீர்வரிசை கொண்டுவரும்
லொத்தர் சீட்டாகவே பெண்..!
பணத்தைப் பார்க்கும் ஆண்களோ
அழகிய மனத்தைப் பார்க்கவில்லையே!
குணம் இருக்கும் பெண்களும்
இன்று மணம் இல்லாப் பூக்களாய்..!
தேனாய்ப் பேசி தேநீர் சுவைத்து
வேண்டாம் என்று வார்த்தை சொல்லி
ஊரார் மத்தியில் தாழ்த்தும்
முறைமாறா ஆடவர் உலகிலே
நடமாடும் வரையில் பெண்கள்
வலியை ஏற்பது விதி
காலம் செய்த சதி
அதுவே மரண வலி..!!
எனது பெயர் துஷ்யந்தி கருப்பையா இலங்கை மலையக மண்ணையும், பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட நான் ஓர் மருந்தாளராகப் பணி புரிகின்றேன்.
சிறுவயதிலிருந்தே கட்டுரை, கவிதை, தனி இசைப்போட்டிகள் என்பவற்றில் ஆர்வமாக இருந்தேன். தமிழ் மொழித்தின போட்டிகள் சாகித்திய விழாக்கள் என்பவற்றில் கலந்துள்ளேன். அகில இலங்கை தழிழ் மொழித்தின போட்டிகளான கட்டுரை, பாவேதல் தனி என்பவற்றில் முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளேன்.
அது மட்டுமின்றி, வீரகேசரி நாளிதழின் குறுக்கெழுத்துப் போட்டிகளிலும், கட்டுரை, கவிதை, ஆக்கங்கள் என்பவற்றிலும் பங்குபற்றியுள்ளேன். சமீப காலத்திலிருந்து முகநூல் வாயிலாக பல வானொலி அலை வரிசைகளுக்கு கவிதை, கருத்துக்கள் என்பவற்றை வழங்கியுள்ளேன்.
முக்கியமாக சூரியன் எப். எம் இன் நேற்றைய காற்றுப்பக்கம், சக்கி எப்.எம் இன் மக்கள் கருத்துக்களம் என்பவற்றில் எனது படைப்புக்களைக் காணலாம்.
எழுத்துக்கள் என்றும் வலிமையானவை. நல்ல கருத்துக்கள் மக்களிவையே பகிரப்படவேண்டும். நம் சிந்தனைகள் தெளிவு பெற வேண்டும். தமிழ் மொழி என்றும் உயிர் வாழ வேண்டுமென்ற வகையில் எனது எதிர்கால எழுத்துலக இலட்சியங்களாகக் கொண்டு விழிப்புணர்வூட்டும் படைப்புக்களை தொடர்கின்றேன்.