-ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை

படைத்தவன் அளித்த பரிசது செறிவு
பகுத்தறிவென்றோர் பெறுமதி அறிவு
மனிதனாய் ஆனாய் என்பதை அறியா
மண்ணதில் வீணாய்ப் போவது சரியா?

படித்தரம் உள்ள வெகுமதி தெரிவு நீ
பாரினில் அறிவு உயர்வெனக் கருதினி
தேர்வுகள் வந்தால் எழுதிட வினை
திறமைக்கு அறிவு இருக்குது துணை!

தேடலை நன்று திறம்படச் சொல்லு
திறனது கொண்டு எழுந்து நீ நில்லு
நெருக்கடி நேர்ந்திட நிமிர்த்திடும் ஏணி
நீந்தி நீ சேர்ந்திட அறிவது தோணி!

அறிவது சேர்ந்தால் உனக்கது கைவாள்
ஆற்றலில் தேர்ந்தால் உலகினில் மெய்யாள்
எதிரிக்கும் வாய்ப்பை அறிவினால் கொடுத்து
ஏழ்மையின் வாழ்வை ஏற்றத்தில் நிறுத்து
அறிவதைக் கொண்டு வாழ்வதைத் துலக்கு
ஆளுமை வென்று பூமியைப்  பெருக்கு!

அறிவைக் கூட்டு ஆணவம் கழிபடும்
அறிவைத் தீட்டு பாறையும் வழிவிடும்
அறிவது சமுத்திரம் பரந்ததோர் ஆழி
அறிந்திடு சரித்திரம் படிப்பதால் தேடி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – இதைத்
தெரிந்தபின் உண்டா உனக்கொரு கேடு?

பொறுமையைக் கொஞ்சம் மனதினில் அள்ளி வை
பொய், புறம் நஞ்சு எரித்திடக் கொள்ளி வை
கர்வத்தை மெல்லக் கடைசியில் தள்ளி வை
கருணையை வெல்ல ஆளில்லை சொல்லி வை
அடுத்ததோர் இலக்கு அறிந்திடப் புள்ளி வை
அறிவென்ற கணக்குப் படிப்பென்று பள்ளி வை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *