பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந்துணைக் காக்கும் கூற்று

 

கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால்
எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும்
உண்ணுந் துணைக்காக்கும் கூற்று

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும்
எண்ணுந் துணையில் பிறர் ஆகி நிற்பரால்
எண்ணி உயிர் கொள்வான் வேண்டி திரியினும்
உண்ணும் துணை காக்கும் கூற்று

பொருள் விளக்கம்:
கண்ணின் அருமையான கருமணியைப் போன்று, நட்பாக அன்பு செலுத்தும் தன்னலம் நிரம்பியக் காரியவாதிகள், தனது காரியம் நிறைவேறியது என்று நினைக்கும் பொழுதே தமது போலியான நட்பை விலக்கிப் பிரிந்துவிடுவர். (இத்தகையோர் செயலானது) தக்க தருணத்தில் உயிரை நீக்கிவிடும் விருப்பத்துடன் பின்தொடர்ந்து, நீக்க வேண்டிய உரிய நேரம் வரும் வரை உயிரை விட்டுவைத்திருக்கும் காலனின் செயல் போன்றது.

பழமொழி சொல்லும் பாடம்: தன்னலம் கருதி நட்புப் பாராட்டுவோரின் நட்பு உண்மையானதன்று, தங்கள் எண்ணம் நிறைவேறும் வரை நட்பு செலுத்துவதாக நடித்து, தாம் விரும்பிய பலன் கிடைத்ததும் விலகிவிடுவர்.

தன்னலவாதிகளின் நட்பைப் பற்றி…

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (குறள்: 821)

மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோலத் தோன்றினாலும் இரும்பைத் துண்டாக்க பயன்படும் தாங்கு பலகை போல இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் என்று இத்தகையோர் நட்பை விளக்குகிறார் வள்ளுவர்.

மேலும்,

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என். (குறள்: 812)

தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன? என்று வள்ளுவர் எழுப்பும் கேள்வியும் சிந்திக்கத்தக்கது. தன்னலவாதியாக இத்தகைய நட்புக் காட்டும் மக்களை விலைமகளிருடனும், கள்வருடனும் ஒப்பிடுகிறார்,

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். (குறள்: 813)
என்ற குறளில் வள்ளுவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *