-செண்பக ஜெகதீசன்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (திருக்குறள்-299: வாய்மை)

புதுக் கவிதையில்…

இருளைப் போக்கி
ஓளியைத் தருவது விளக்கு...
இதற்கு மேலாய்,
பொய்யை விலக்கி
அகயிருள் அகற்றுவதே
சான்றோரின்
சிறந்த விளக்கு…!

குறும்பாவில்…

புறயிருள் அகற்றிடும் விளக்கு,
மாந்தர் அகயிருளகற்றும்
பொய்யாமைதான் உண்மை விளக்கு…!

மரபுக் கவிதையில்…

கரிய இருளும் ஓடிவிடும்
    கண்டால் ஒளிரும் விளக்கினையே,
பெரிதாய்ச் சிறிதாய் இருந்தாலும்
    பார்க்கும் இவையெலாம் விளக்கல்ல,
அரிதாம் உண்மை கடைபிடிப்போர்
    அகயிருள் அகற்றிடும் மெய்விளக்கு,
தெரிந்திடு இதுதான் உயர்விளக்கு
    தீய இருள்கெட ஒளிர்வதாலே…!

லிமரைக்கூ…

இருளகற்றும் விளக்கில் ஒளிர்ந்திடும் திரி,
விளக்கதிலும், உள்ளயிருள் போக்கும்

வாய்மைதான் விளக்கில் உயர்ந்தது தெரி…!

கிராமிய பாணியில்…

வெளக்கு வெளக்கு ஒளிவெளக்கு
இருட்டப் போக்கும் ஒளிவெளக்கு..

இந்த வெளக்கெல்லாம் வெளக்கில்ல,
இதவிட ஒசந்தது மனவெளக்கு
உண்ம பேசும் மனவெளக்கு,
ஒசந்தவர் கொண்ட கைவெளக்கு
மனசு இருட்டப் போக்கிடுமே
மேன்ம யான வெளக்கிதுவே..

வெளக்கு வெளக்கு ஒளிவெளக்கு
இருட்டப் போக்கும் ஒளிவெளக்கு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *