சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …
— கவிஞர் காவிரிமைந்தன்.
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …
தானே ஒரு திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரித்து இந்தப் படம் ஓடினால் நான் மன்னன்… இல்லையேல் நாடோடி என்று கருத்து தெரிவித்து படத்திற்கு நாடோடி மன்னன் என்று பெயருமிட்ட எம்.ஜி.ஆர். பிக்சர்ஸாரின் முதல் தயாரிப்பு.
முதல் பாதி கருப்பு வெள்ளை… பிற்பாதி கேவா கலர்… (வண்ணம்).
முதல் பாதியில் கதையின் நாயகி வேறு… பிற்பாதியில் நாயகி வேறு… என்று எத்தனை முத்திரைகளை தன்னுள் அடக்கி வெளிவந்த படம் தெரியுமா அது?
மக்கள் தொடர்பு அதிகாரி… என்கிற ஒரு புதிய பதவியை திரைத்துறையில் ஏற்படுத்தி… இன்றும் திரைத்துறை வரலாற்றைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களை அப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவுக்கு நியமித்தார் எம்.ஜி.ஆர்!
திரைப்படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் ஒன்றி்ரண்டு கவிஞர்களால் எழுதப்பட்டதல்ல… தனக்கு நெருக்கமான… பழக்கமான அனைத்துக் கவிஞர்களையும் பயன்படுத்தி… ஏராளமான பாடல்களை படத்தில் இடம் பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.
இப்படத்திற்கு வசனம் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்!! இப்படத்திற்கு பாடல் எதுவும் அவர் எழுதவில்லை என்பது கூடுதல் தகவல்!
பட்டுக்கோட்டையார் தந்த பாடல்கள் இரண்டு என்று நினைக்கிறேன். ஒன்று தூங்காதே தம்பி தூங்காதே… சூப்பர் டுப்பர் ஹிட் என்று சொல்லலாமா?
அடுத்து… இந்தப் பாடல்… சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …
நானே போடப் போறேன் சட்டம்… நன்மை புரிந்திடும் திட்டம் என்கிற வரி… எழுதப்பட்ட நாளில் நிச்சயம் எம்.ஜி.ஆருக்கே தெரியாது தமிழகத்தின் முதலமைச்சராக ஆகப்போகிறார் என்பது.
வரகவிகளின் நாவில் சரஸ்வதி வந்து அமர்ந்திருக்கிறாள் என்பது எத்தனை உண்மை என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி!
எம்.ஜி.இராமச்சந்திரனும் நடிகை பானுமதியும் இணைந்து நடித்த பாடல் காட்சி… எதார்த்தமாய் அந்த மாட்டுவண்டியில் பாட்டுப்பாடி தொடரும் பயணத்தில்தான் எத்தனை ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இசையை வழங்கியிருப்பவர்… எஸ்.எம்.சுப்பையா நாயுடு…
டி.எம்.எஸ் அவர்களுடன் பானுமதி அவர்களும் இணைந்து பாடிடும் பாட்டு! பாட்டுவரிக்குள் வருங்கால தமிழக்தின் வரலாறு பதியப்பட்டிருக்கிறதே அதுவே சிறப்பு!! எம்.ஜி.ஆர் என்கிற காலச் சரித்திரத்தின் சுவட்டில் இப் பாடல் பொன்னேட்டில் பதிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்!
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே
மண்ணை பொளந்து சுரங்கம் வச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும்
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி.
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்?
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ?
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேரிக்கும் இன்பம் திரும்புமடி.
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்?
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி.
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
காணொளி: https://youtu.be/pt5GymW_eE4
அன்பர் கவிஞர் காவிரிமைந்தன் தருகின்ற பழைய பாடல்களுக்கான விளக்கமும், பாடல்களையும் மிகவும் ரசித்து மகிழ்கிறேன். பாராட்டுக்கள்.
அன்பன்,
மீ.விசுவநாதன்